Sunday, May 24, 2009

புலத்தில் புற்றெடுக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே....

"மட்டு.திருகோணமலை துணை ஆயர் அவசர கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்."

இவ் வேண்டுகோளானது புலம்பெயர் தமிழர்களுக்குமானது என்பதனை நினைவில் கொள்வோம். ஆயர் விடுத்திருக்கும் இந்த அவசர அழைப்புக்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டியது அவசியமாகிறது.

மன்னாரில் மட்டுமல்ல இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சகல இடங்களிலும் மேற்கூறப்பட்ட நிலைமையே நிதர்சனமாயுள்ளது.

போரின் வலியகரங்கள் எமது இனத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் தற்போதைய நிலைமையானது எந்தவொரு இனமும் அனுபவிக்காத கொடுமையிலும் கொடுமை.

காட்டுப்பகுதிகளை அவசரமாக திருத்தி அதை எமது மக்களின் தற்காலிக இருப்பிடமாக்கியிருக்கும் அரசைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ இந்த உலகில் யாருமில்லை. நாதியற்றவராய் நமது இனம் இன்று. ஆனாலும் எமது மக்களை பாதுகாக்கும் உரிமையையும் கடமையையும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம்மால் செய்ய முடியும்.

இராணுவத்தினரால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மக்களிடம் உயிரைத்தவிர தற்போது ஏதுமற்ற நிலமை. இம்முகாம்களில் மக்களுக்கு கொடுக்கப்படும் உணவுப்பொட்டலங்கள் கூட உரிய முறையில் பங்கிடப்படாமல் பலர் பசியோடு பரிதவிக்க வேண்டியுள்ளதான அவலத்தில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். வரிசையில் உணவுப்பொதிக்காகக் காத்திருந்து மிதிபட்டு மூச்சைவிடும் நிலமையில் நமது மக்களின் துயரால் நிரம்பி வழிகிறது அகதிகளுக்கான அமைவிடங்கள்.

உலகம் எங்கோ தனது வளர்ச்சியை எட்டியிருக்க எமது மக்கள் காட்டுவாசிகள் போல காற்செருப்புமின்றிச் சுடுவெயிலில் அவலப்படும் உண்மை எவருக்குத் தெரியும் ? இவ் இடைக்கால முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் எவரின் காலிலும் செருப்புக் கூட இல்லை. சுடுவெயிலிலிருந்து தம்மைக் காப்பாற்ற மட்டைகளை வெட்டி நுலால் கட்டித் தங்கள் கால்களைக் காத்துக் கொள்கிறார்கள். பெண்கள் , கற்பிணிகளின் நிலமையோ எல்லாவற்றிற்கும் மேலான அவலமாகவுள்ளது.

அனைத்துலகமும் கைவிட்டு அறிக்கைகளோடு மக்களின் நிலை அமுக்கப்படுகிறது. வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் சில நமது மக்கள் புழுக்களையும் பூச்சிகளையும் தின்கிறார்கள் என அறிக்கைகளை எழுதி தமது உல்லாசபயணங்களுக்கான வசூலிப்பை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிறுவனங்கள் கூட எமது மக்களின் துயர வாழ்வைத் தங்கள் உல்லாசப் பயணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்போகிறார்கள்.

இவர்களை ஒருபடி மேல் நோக்கிச் சென்று தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைக் காப்பதில் குறியாகியுள்ளதை அவர்களது அண்மைய நடவடிக்கைகளும் தெளிவுபடுத்துவதாக அமைகிறது. புலிகள் தவிர்ந்த ஓர் தீர்வைத் திணிக்க முயன்ற இந்திய உளவு "றோ" வின் கால்களில் கவிழ்ந்து பற்றிக்கொள்ளவும் தயரான நிலையில் மக்கள் பிரதிநிதிகள் மாறும் நிலையில் சமகாலக்களம் மாறி நிற்கிறது.

சர்வதேச சமூகத்தை விட்டு விடுவோம் போகட்டும். மக்களின் வாக்குப் பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் அல்லலுறும் இந்த நேரத்தில் எங்கே ஒழிந்து போனார்கள் ? மக்களுக்குப் பணி செய்ய வேண்டிய தருணத்தில் வெளிநாடுகளில் வந்து நின்று என்னத்தைப் புடுங்குகிறார்கள் ?

இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உருப்படியாய் எதையும் இவர்கள் சாதிக்கவில்லை. மேடைகளில் வந்து நின்று புலம்பியது தவிர தமது சொந்த வாழ்வைத் தமது குடும்பங்களைக் கவனித்ததோடு இவர்கள் எதையும் செய்யவில்லை. 3மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஆறுமாதத்துக்கு ஒருமுறை கொழும்பு போனதும் பாராளுமன்றில் கையொப்பமிட்டதும் தான் இவர்கள் சாதித்த சாதனையாகப் பட்டியலிடலாம்.

வெளிநாடுகளில் கூட மக்களுடன் மக்களாக நின்று எதையும் செய்வதில்லை. இங்கு ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டுத் தரப்புகளுடனான சந்திப்புகளில் கூட இந்தத் தலைகள் வரமாட்டார்கள். வத்திக்கானுக்குக் கூட இலகுவாய் சென்று வந்து விடலாம், ஆனால் இந்தப்பாராளுமன்ற உறுப்புகளுடன் கதைக்கவே கனசாமிகளைத் தாண்ட வேண்டிய நிலமை. இவர்கள் எதற்காக பாராளுமன்று போனார்கள் தமிழரின் பெயரால் ? ஐரோப்பாவில் வந்து அகதியுரிமை பெறவா ? அல்லது தமிழரின் உரிமையை வெல்லவா ?

யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்கள் இன்னும் என்னத்தை ஐரோப்பாவிலிருந்து செய்து கொண்டிருக்கிறீர்கள் ? உங்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று இராணுவப் பகுதிக்குள் படுகின்ற துயரங்கள் தெரியுமா ? உங்களுக்காக ஒருநாள் முன்னதாக முகமாலைக்குப் போய் காவலிருந்து உங்களைத் தெரிவு செய்தவன்னி மக்களுக்காக சர்வதேச சமூகத்திடம் என்ன தகவலைச் சொன்னீர்கள் ? உங்களை நம்பி வாக்களித்த பல்லாயிரம் மக்களுள் சிலரோடு பேசக் கிடைத்த போது அவர்கள் உங்களை நோக்கிக் கேட்ட கேள்விகளே இவை.

பெண்களின் துயர் பற்றி ஊடகங்களில் வந்து மூக்குச் சிந்திய பத்மினியக்கா...., மாற்றுடைகள் முதல் பெண்கள் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தத் தேவையான வசதிகள் எதுவுமற்று அல்லறும் பெண்களுக்காக என்னத்தைச் செய்யப் போகிறீர்கள்?

கிழிந்த உடைகளைக் கூடச் சோதனையென்ற பெயரில் எங்கள் தங்கைகளின் , அக்காக்களின் , அம்மாக்களின் உடைகளை அகற்றி நிர்வாணமாகப் படம்பிடித்துச் சிங்கள இராணுவம் செய்கின்ற கொடுமையை எங்கேயக்கா சொல்லப் போகிறீர்கள்? வன்னிக்குள் எங்கள் பெண்கள் அவலப்பட லண்டனில் திருமண விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவா உங்களை அந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் ? (உங்கள் தனிப்பட்ட விருப்புக்களுக்கு தடையிடுவதாய் எண்ண வேண்டாம்)

நீங்கள் திருமணங்களில் நின்று சிறப்பிப்பதைவிடவும் நாங்கள் ஏற்பாடு செய்கின்ற வெளிநாட்டு அரசியலாளர்களைச் சந்திக்க வருவீர்களானால் எமது மக்களுக்கு உங்களால் ஏதாவது வழிகிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. கலைஞருக்கு வாய்த்த கனிமொழிபோல எங்களுக்கு நீங்களோ என எண்ணத் தோன்றுகிறது அக்கா.

"முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 165,000 மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை முற்றாக அழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.- யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.. கஜேந்திரன்

அண்ணை கஜேந்திரன் ! இந்தக்கண்டனங்களை யாருக்குச் செய்கிறீர்கள் ? தமிழால் தமிழர்களுக்குத்தானா ? "40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம்" என முழக்கமிட்ட உங்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் காற்செருப்புக்கும் வழியின்றி மட்டைகளைச் செருப்பாக்கி கற்காலம் நோக்கி நிற்கிறார்கள் தெரிகிறதா உங்கள் கண்களுக்கு ?

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களின் பிரச்சனைகளைச் சொல்ல முடியாவிடில் பிறகெதற்குப் பாராளுமன்றப் பதவியும் பரபரப்பு அறிக்கையும் ? உங்கள் உயிர்கள் தானா உயிர் ? மற்ற உயிர்களெல்லாம் என்ன மண்ணுக்குள் புதைய வேண்டியவையா ? மக்களுக்காக நீங்கள் பணியாற்ற வேண்டிய தருணமிது. இதைத் தவறவிடில் உங்களைத் தமிழின வரலாறு மன்னிக்காது. போதும் அறிக்கைகள் ஆய்வுகள். சிங்கள அரசு சிறைவைத்திருக்கும் எங்கள் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைச் செய்ய முன்வாருங்கள். நீங்கள் வெளியில் இறங்கி எங்கள் மக்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்யுங்கள். உலகமே உங்களுக்கு அள்ளித் தரக்காத்திருக்கிறது.

ஒளித்து நின்று மக்களுக்காகப் பேசாமல் வெளிச்சத்துக்கு வந்து உலகத்திற்கு எங்கள் மக்களின் அவலங்களைச் சொல்லுங்கள். தனிமனிதர்கள் சாதிக்க முடியாததை உங்கள் பாராளுமன்றப் பதவியால் சாதிக்கலாம். அடுத்து நீங்கள் பாராளுமன்றப்பதவிக்கு வரப்போவதில்லை. இப்போது உள்ள பதவிக்காலத்தை உரிய வகையில் மக்களுக்காகச் செலவிடுங்கள்.

களத்து வெற்றியை அடுத்த கட்ட நகர்வை களத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் களத்து மாற்றங்களை அளவிடும் ஆய்வுகளை நிறுத்திவிட்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள். சங்கரியின் அறிக்கைபோல் உங்கள் அறிக்கைகளையும் ஆக்காதீர்கள்.

புலத்தில் நின்று நீங்கள் புதுமை படைக்கவும் எதுவுமில்லை. புலத்திலிருந்து செய்ய வேண்டிய கடமையை இங்குள்ள எமது இளையோரும் புலம்பெயர் மக்களும் செய்கிறார்கள். இங்கும் உங்கள் அவசியம் இல்லாது இருக்கிறது. நிலத்தில் நின்று நீங்கள் செய்ய வேண்டியவை நிறையவே இருக்கிறது. அங்கு செல்லுங்கள் அவற்றைச் செய்யுங்கள். அதுவே இன்றைய தேவை.

No comments: