Sunday, May 24, 2009

நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம்

காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச்
சாவின் வாயிலில்....
மூச்சிழுக்கவோ முழுமையாய்
சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்....
மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி
கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய்
மகிந்தவின் மந்திரமும்
இந்திய மத்திய அரசின் தந்திரமும்....

குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள்
எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு
கண்களில் ஈரமின்றி எங்கள்
காவியங்கள் முகம் மட்டும்
கனவிலும் நினைவாக...

பழைய புன்னகையும்
பசுமையாய் நெஞ்சக்கூட்டில்
தோழரும் தோழியரும்
தொலைந்திடா நினைவோடு
கண்ணயர முடியாமல்
கனவிலும் அவர்களே
கலையா நினைவுகளாய்.....

பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு
வான் நிறைத்த
கரும்புகையோடு கலக்கிறது.

மானுடவியலாளர்களே
மனுப்போடாதீர் மண்ணீரம் சேரக்
கண்ணீரும் விட வேண்டாம்.
சாகும் இனமாய் நம் சந்ததியே
பாடையேற இதுவரை பார்த்திருந்து
பக்குவமாய் அறிக்கையிட்ட
உங்களுக்கு நன்றிகள்.

போதும் நாங்களினிப்
போக்கின்றிப் போய்விட்டோம்
நிம்மதியாய் மூச்சுவிட்டு
நிறையும் வைன் கோப்பைகளில்
நியாயம் பேசுங்கள்.

மானிட நேசம் மனிதவுரிமை
இப்படி நிறையவே பேசுங்கள்.
எங்காவது எம்மைப்போல்
அழிவதற்கே பிறந்தவர்கள்
ஊர்களுக்கு ஊருலா போய்
எழுதுங்கள் நிறைய நிறைய....
எங்களுக்காயினி
எவரும் வர வேண்டாம்.
நன்றி வணக்கம்
நாங்கள் செத்துப்போகிறோம்
சென்று வருக.
05.04.09

No comments: