Tuesday, May 26, 2009

எங்கள் எதிர்கால இருள் அகற்றும் ஒளி தீபங்களாய்…..

















இயற்கை உங்களிடமே - தன்
இயல்பை உணர்ந்து கொண்டது.
வாழ்வு உங்களிடமே - தனது
வரலாற்றை எழுதியது.
வரலாறு உங்களிடமே தன் வல்லமை
எங்களின் அணுக்களில்
கொண்டு வந்து இணைத்தது.

ஓர் பெரும் விடுதலை விருட்சத்தை
எவனோவெல்லாம் ஆராட்சி செய்கிறானாம்.
அவன்கள் முகத்தில் ஆணிகள் அறைபட
ஆலமரமாய் எங்களுக்குள் அகன்று விரிகிறது
உங்கள் பெயர்.

இயலாதோராய் இனியாருமே இல்லாதோராய்
நாடோடிகள் போல்
நடுத்தெருவில் வைத்து நாய் போல்
இழுத்துப் போகவும் நாதியின்றிச்
செத்துத் தொலையவும்
நீங்களில்லா வெறுமையை
உணர்கிறது இலங்கையின் தமிழினம்…..

இல்லையென்பதை இன்னும் நம்பாமல்
உங்களையே நமது நம்பிக்கையின் தூணாக நம்புகிறோம்.
காலம் தனது கையிலிருந்து எங்கள் கடவுளைக்
களவெடுத்துப் போய்விட்டது.

இருள் காய்ந்து இரவுகள் பகலாய்
ஊண் மறுத்து உறக்கம் மறுத்துப்
பிரமை பிடித்துப் பிதற்றுகிறோம்.
யார் எதிரி யார் நண்பன்
யாரை நம்ப யாரை நம்பாதிருக்க ?
நீங்கள் ஓர் அநாதைபோல் மர்மமாய் போக விடவா
இத்தனை காலம் இந்த இனத்தை நேசித்தீர்கள் ?
நன்றிகெட்ட இந்தக் கொள்ளையர்களை
நம்பினானா எங்கள் தலைவன் ?
நம்ப முடியவேயில்லை.

இல்லை நீங்களென்றாலும் இருப்பதாய் சொல்லட்டாம்
இல்லையேல் கட்டமைப்பு குழம்புமாம்.
கள்வர்கள் கடவுளின் பெயரால் உரைப்பதையெல்லாம்
இந்தக் கண்கெட்ட சாதி நம்பிக் கொண்டேயிருக்கட்டும்.
எங்களால் இயலவில்லை
உங்களை அநாதைபோல் ஒற்றைப் பூவிட்டேனும்
நினைக்காமல் இருக்க எங்களால் இயலவில்லை.

உண்மையிதுவென்றால் உலகைத் திரட்டுவராம்
சொல்கிறார்கள் இன்னும் சிலர்.
சரி இது பொய்யாகவே இருக்கட்டும்
நாம் பொய்யாக இல்லை
உண்மையாகவே அஞ்சலிக்கிறோம்.
நம்பிக்கை பொய்த்து மீள வந்தாலும் நீங்கள் தான்
எங்கள் குலவிளக்கு.
நீங்கள் தான் எங்கள் கலங்கரை ஒளிவிளக்கு.
கண்களில் நீர் கோர்த்துக்
கடவுளே உங்களை வணங்குகிறோம்.
உங்களுடன் உதிர்ந்த அத்தனை பேரையும்
இதயத்தில் ஏற்றுகிறோம் – எங்கள்
எதிர்கால இருள் அகற்றும் ஒளி தீபங்களாய்…..
25.05.09

No comments: