Sunday, May 24, 2009

'மானிடவுயிர்' மகத்துவம் அப்புடியென்றால்....?

ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின்
இறுதிக் கணங்கள் இருளுக்குள்
புதைந்து கொண்டிருக்கின்றன.

எதுவித அறிவிப்புகளுமின்றி
ஊரழித்த போர் டாங்கிகளின்
சில்லுகளின் மிதிப்பில்
ஒரு சந்ததியின்
நூற்றாண்டுச் சந்தோசங்கள்
நிலக்கீழ் சகதிக்கும் கீழாய்
பிய்த்தெறியப்படுகிறது.

'மானிடவுயிர்' மகத்துவம்
அப்புடியென்றால்....?
அர்த்தம் புரியவில்லை.

விலங்குகளுக்கான விதிகளைக்கூட
சட்டம் இயற்றிக் காத்திடும் உலகம்
அதனினும் கீழாய் அடகு வைத்து
அழிப்பதில் முனைப்புடன்....

முதலைக் கண்ணீரும் மூக்குச் சிந்தலும்
முழுப்பக்க அறிக்கைகளும்
முழுமைப்பலம் கொண்டவர்களிடம்
சமர்ப்பித்துள்ளதாய் சத்தியம் செய்கிறது
சர்வதேச தூதர்கள்.

'வலிந்தவன் பிளைப்பான்
நலிந்தவன் அழிவான்'
வரலாற்றின் தத்துவம்
விளங்கினோம் உலகே...!
எங்களின் விடுதலை
உங்களின் முடிவுகள்
என்பதையும் விளங்கினோம்.

போதும்...!
உங்கள் கருணையும்
கண்துடைப்பும் போதும்.

சாம்பல் பூத்த தெருவிலிருந்து
செத்துக்கிடக்கும் எங்கள்
சொந்தங்களின் பிணங்களிலிருந்து
சத்தியம் செத்துவிட்டதென்பதை
சர்வதேச சமூகத்தின் முகத்தில்
அறைவதாய் உணர்த்துவோம்.

28.02.09

No comments: