Wednesday, April 28, 2010

பல்கலைக்கழகமாணவர்களின் தற்கொலைகள் பகிர்கிறார் தீபச்செல்வன்

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது.

இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.

Saturday, April 24, 2010

எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில்

நீ வருவதாய் கனவுகள்
நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்....
நினைவுகள் தின்று
நெஞ்சில் துயர்
மீதமாய்க் கனக்கிறது.....

இரத்தம் செறிந்த புழுதியில் நீயும்
புழுதியாய் கலக்கையில்
யாரை நினைத்து நீ
துகள்களாய் உதிர்ந்தாயோ....?
வருவேன் என்றதும்
துயர் தொலையும் என்றதும்
மறந்தா தோழனே
முள்ளிவாய்க்கால் முனையிலே - உன்
முடிவை மாற்றினாய்.....?

வருடம் ஒன்று முடியப் போகிறது
நீ வருவாயென்ற நம்பிக்கை
வலுவிழந்து செயலிழந்து
செல்லாது போகிறது.....

கடைசிவரை நீ கதைத்த சொற்கள் ஒவ்வொன்றும்
கனவையும் காலத்துயரையும் பெயர்த்து
நிலம் மீது வேரோடுகிறது....
நீ நிழற்படமாய் சிரிக்கிறாய்
நினைவினில் நிறைகிறாய்.....
அழுவது தவிர்த்து
அதற்கப்பாலொரு தீர்வில்லாத்
துயர் நிறை வெளியினில்
நலிந்து போயுளோம்.....

நடந்தவை கதைகளாய்....
நாங்கள் நினைத்தவை
வெறும் கனவுகளாய்
வருவேன் வருவேன் என்ற உனது சொற்கள்
நீ வராமல் தனித்துத் தவிக்கிறது.....

நீ வருவாயா.....?
வந்தெம் உயிர் நனைத்துப்
புத்துயிர் தருவாயா....?
வசந்தம் நிறைந்த உனது பெயரில்
ஒளியான சோதி நீ
எங்கேனும் இருந்தால்
எழுது ஒரு பதில்.....
17.03.10

Monday, April 19, 2010

ஒரு போராளி மனைவியின் குரல் இது

நீண்ட நாட்கள் வலைப்பூவில் எழுதவில்லை. மீண்டும் வந்துள்ளேன். எமது மக்களின் அவலங்கள் சுமந்த வாழ்வுகளின் கதைகளை அவர்களின் குரலினூடு எடுத்துக் கொண்டு வருகிறோம்.

நேசக்கரம் இது துயரப்படும் எமது மக்களுக்கான ஆதரவுக்கரமாக ஆரம்பித்துள்ளோம். பல நண்பர்களின் முயற்சியில் 3வருடங்களுக்கு மேலாக எம்மால் இயன்றதை செய்து வந்தநாம் 2010 முதல் யேர்மனியில் பதிவு செய்து ஒரு நிறுவனமாக எழுந்துள்ளோம். வலைப்பூ நண்பர்களையும் எமது நேசக்கரத்தோடு கைகோர்க்கும்படி அழைக்கிறோம்.

இது நேசக்கரம் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையம். வாருங்கள் வந்து பாருங்கள். உங்கள் கரங்களையும் இணையுங்கள்.
http://nesakkaram.org/

தடுப்பில் உள்ள தனது போராளிக் கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கண்ணீரோடு வாழும் தாயின் குரல் இது.

இக்குரல் போல ஆயிரமாயிரம் குரல்களின் துயர்களை நேசக்கரம் ஊடாய் எடுத்து வருகிறோம்.