Tuesday, October 5, 2010

வெற்றிடமாய் கிடக்கிறது ஓர் சந்ததியின் வாழ்வு…


புழுதியப்பிய தெருக்களின் முனைகளில்
அழுதபடி குழந்தைகளும்
அனாதைகளான அவர்களுமாக
தெருக்கள் இப்போது
துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.

எல்லோரையும் எல்லாவற்றையும்
அழித்துச் சென்றவர்களின் முகங்களால்
நிறைந்து கிடக்கிறது நிலம்.
நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின்
முகங்களில் பயமும் வறுமையும்
பதியமிடப்பட்டிருக்கிறது…..

ஆணிவேருடன் ஒரு சந்ததியும்
அதன் குருத்துக்களும் கனவுகளும்
அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட
அடையாளங்களை அழிக்க
யார்யாரோ வருகிறார்கள்
அறிக்கைகள் எழுதுகிறார்கள்
எல்லாம் வளமைபோல்
அவர்கள் போய்விடுகிறார்கள்….

இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில்
ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட
அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும்
குமரிகளையும் காப்பதற்காகவே
காவலிருக்கும் கண்களுக்குள்
பேய்களின் காலடிகள்
பேரோசைகளுடன் உதைக்கிறது…..

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..
01.09.10

No comments: