Saturday, October 9, 2010

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்

உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். தனது ஒவ்வொரு தேவைகளுக்கும் யாராவது ஒருவர் வந்து நிறைவேற்றினால்தான் எல்லாம் என்ற நிலமையில் இருக்கின்ற எதுவுமே இயலாத தன்னை அழித்துக்கொள்ளவே இயலாத பாவமாகத் தானிருப்பதைச் சொல்லித் துயருறும் இவனோடு பேசுகின்ற ஒவ்வொரு வினாடிகளும் உயிர் வலிக்கிறது. இவன் செய்தது ஒன்றுதான். தனது வாழ்வை எங்களுக்காகத் தரத்துணிந்ததுதான். நாங்கள் கனவுகாண எங்கள் கனவுகளின் வடிவமாகித் தங்களை அழித்துக் கொண்ட இவர்கள் இன்று சாவுகூடத் தங்களை ஏற்காதுள்ளதாகத் துயருறுகிறார்கள். காலம் இவர்களை வஞ்சித்துத் தன் காலடியில் இம் மனங்களை வைத்து மகிழ்கிறது. ஒரு தேசத்தின் விடுதலையை நேசித்தவர்களை இன்று நாங்கள் சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். உதவுகிறோம் என்று இவர்களின் படங்களை விபரங்களைச் சேர்த்தவர்கள் யாவரும் கைவிட்ட நிலமையில் உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இளையோர்கள் இவர்கள். இவர்கள் இப்படியாகிப்போக இவர்கள் இப்படித் துயரங்களோடு சாக விரக்தியோடு வாழக் காரணமாகிப்போன எம்மீது கோபம் மட்டுமே வருகிறது. இவர்களுக்கான குறைந்தபட்சம் இவர்கள் வாழும் நாட்கள் வரையிலுமாவது ஏதாவது ஒரு நேரக்கஞ்சியாயினும் கொடுக்க ஒரு வழியைச் செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது. மாற்றங்களை விரும்பும் ஒவ்வொருவரும் இவர்களோடு பேசுங்கள். அதன் பின்னால் முடிவெடுங்கள் இப்போதைய தேவையென்ன என்பதை. எங்கள் கனவுகளின் விலாசங்களாகவும் எங்கள் மகிழ்ச்சிகளின் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்த மனிதக் கடவுளர்கள் இவர்கள். இவர்கள் வாழும் வரையான உதவிகளை நேசக்கரம் ஊடாக வேண்டுகிறோம். மீளவும் மீளவும் உங்களிடமே கையேந்துகிறோம். இதோ பேசக்கூட விரும்பாத கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லாது போன இந்த இளைஞனின் குரலிலிருந்து…..

No comments: