Thursday, October 21, 2010

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனுக்காகக் காத்திருக்கிறோம்.

தலையின் மேல் தொங்கும்
தூக்குக் கயிற்றின் கீழிருக்கும்
துயரம் அவன்…..
பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய
தமிழின உணர்வின் ஊற்று அவன்….

சாவின் நிணம்
அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க
சாவுமின்றி வாழ்வுமின்றி
சந்தேகத்தின் பெயரால்
இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்…..

வசந்தம் துளிர்த்த வயதில்
வாழும் ஆசைகளுடன் போனவன்
மரணம் கொல் இருளில் மன உழைச்சலும்
மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன்
பாழும் உயிரும் பாரமாய் பழியுடன்
நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில்
இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை……

19வருடச் சிலுவையின் பாரம்
குருதியழுத்த நோயாளியாய்
வாழ்வின் காலங்கள்
நோயின் கோரங்களோடு கழிய
காற்றணைத்த ஒளியில்
கருகிக் கொண்டிருக்கிற
திரியின் துணியாய் காத்திருக்கிறான்…..

இதயத்தை அவனுக்காகவே இயக்கிக் கொண்டிருக்கும்
அற்புதம் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவேனும்
அவன் வர வேண்டும்…..
இரும்புகளின் காவல் உடைந்து அவன்
நரம்புகளின் இயக்கம் நிற்க முன்னம்
விடுதலையென்ற ஒற்றைச் சொல்லைக் கேட்கவேனும்
பேரறிவாளன் பொதுமன்னிப்போடு வர வேண்டும்.

தோழனே,
உனக்காக நீ நம்பாத கடவுள்களை மட்டுமே இறைஞ்சுகிறோம்
வேறெந்த முயற்சியும் முடியாது நண்பனே !
மன்னித்துக் கொள் உனக்காய்
எதையுமே செய்ய எம்மால் இயலாது.
எனினும் நீ வருவாயென்ற நம்பிக்கையோடு
நாங்களும் அற்புதம் அம்மாவின்
கனவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

22.10.10(இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் பேரறிவாளன் பற்றிய செய்தியொன்று படித்த போது அவனுக்காக எழுதிய வரிகள் இவை)

No comments: