Sunday, January 16, 2011

நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.


அன்பான உறவுகளே

06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர்.

நமது இடைநிறுத்தம் பயனாளிகள் பலரைச் சங்கடப்படுத்தியது. எனினும் எமது நடைமுறைச் சிக்கல்கள் நாம் எதிர்கொள்ளும் அரசியல் தலையீடுகளை விளங்கப்படுத்தியதன் பின்னர் மெனளமானாலும் அது அவர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாயிருந்ததை உணர்ந்தோம்.

தொடர் மனப்போராட்டம் எம்மை நசுக்கும் சவால்களைத் தாண்டி இயங்குவதில் உள்ள தடைகள் யாவற்றையும் விட்டு ஒதுங்குவதே சரியென ஒதுங்கிக் கொண்டோம்.

ஆனால் நேசக்கரத்தினை நிறுத்த முடிவெடுத்தபின்னர் இயற்கையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தினை மிக மோசமாக பாதித்துள்ளது. நேசக்கரம் ஊடாக சுயதொழில் உதவிகளிற்கான பயன்களை பெற்று மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் சிறிது சிறிதாய் உழைத்து முன்னேறியவர்களின் சிறு தொழிற்கூடங்கள் சிறு பண்ணைகள் என்பனவும் தற்போதைய கடும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயும் அழிந்து போயும் உள்ள நிலையில் "ஜயோ கடவுளிற்கே நாங்கள் நல்லாய் வாழ்வது பிடிக்கவில்லையா" என அழுகைக்குரல்களாய் தமக்கான உதவிகளையும் வேண்டி நிற்கும் தொடர் தொலைபேசியழைப்புக்கள் அவர்களது அவசர வேண்டுதல்கலை ஒதுக்கி நம்மால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

அதே நேரம் புலம்பெயர் உறவுகளும் தங்களது ஆதரவினையும் உதவிகளையும் தொடர்ந்து தருவோம் எத்தனை பெரிய பிரச்சனைகள் வந்தாலும் நேசக்கரத்திற்கு தங்கள் ஆதரவுக்கரம் நிச்சயம் இருக்கும் தங்கள் உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சென்று சேருங்கள் என தொடரும் நம்பிக்கை வார்த்தைகளும் எம்மை எத்தனை அரசியல் சிக்கல்கள் வந்தாலும் அதனையும் தாண்டி எமது மக்களிற்கான சேவையை தொடரும் மனஉறுதியை தந்துள்ளது.

எனவே இயற்கை கொடுத்திருக்கும் அழிவால் தண்ணீரில் மிதக்கும் எமது உறவுகளுக்கு முன்னாலும் உதவ உதவிக்கரம் நீட்டும் எமது உறவுகளிற்கு முன்னாலும் நாம் மீண்டும் தோற்றுப்போனோம். அவர்களுக்காக மீண்டும் எங்கள் உதவிகளை கொண்டு சேர்க்க எமது செயற்பாட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற வெள்ள நிவாரணத்தை எமது மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

வெள்ள அனர்த்தத்தில் தத்தளிக்கும் ஒங்கள் உறவுகளை மீட்டெடுக்க எங்கள் முயற்சிக்கு ஆதரவும் பலமும் தந்த புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிகளை அவசரமாக வேண்டுகிறோம். விரைந்து உதவிகளை வேண்டுகிறோம்.

நன்றிகள்

- நேசக்கரம் செயற்பாட்டாளர்கள் -

No comments: