Monday, September 16, 2013

அன்புள்ள சின்னண்ணா....!

அதுதான் நான் அவனுக்கு வைத்தபெயர் அவனும் தனது பெயரைச் சொல்லாமல் அடம்பிடித்துக் கொண்டு திரிந்தான். மற்றவர்களும் தனது பெயரைச் சொல்லக் கூடாதென்று எல்லோரையும் தனது சொற்களால் கட்டிவைத்திருந்தான்.

சமாதிகோவிலடிக் காவலரணில் அறிமுகமான அந்தச் சின்னண்ணா ! எங்கேயிருக்கிறாய் ?

1987இல் இராணுவம் கட்டுவனுக்கு வந்ததோடு வீடுகளைவிட்டு வெளியேறிய நாங்கள் வளவுமரங்களைக் காயவிடாமல் தண்ணீர் ஊற்றுவது வளக்கம். அப்படியொரு மாலைப்பொழுதில் தான் இளனீர் தந்து உறவானான் சின்னண்ணா.

கிணற்றிலிருந்து பெரியவாளியைத் தூக்கக்கச் சிரமப்பட்ட எனக்கும் உதவி செய்து அம்மம்மாவோடும் ஆச்சியென்று உறவு சொல்லியழைத்து அந்தப் போராளிகள் இருவரும் அறிமுகமானார்கள்.

சிறிய உருவம் , சிரிப்பு மாறாத முகம் , தங்கைச்சியென்றழைக்கும் அவர்கள் அடிக்கடி வீடுபார்க்கப் போகும் போது வருவார்கள். அரசியல் பேசுவார்கள், இனிப்புத்தருவார்கள் , தவமன்ரிவீட்டு மாங்காய் ஆய்ஞ்சு தருவார்கள் , பேய்வரும் கதையெல்லாம் சொல்லுவார்கள் , பேய்க்கதை கேட்காது விலகும் எனக்கு வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.
தண்ணீரள்ளி உதவுவார்கள். தங்கள் போராட்டம் பற்றி விளக்குவார்கள்.மீண்டும் அடுத்தோ அல்லது மறுநாளோ வருவார்கள். கதைப்போம் சிரிப்போம். போய்விடுவார்கள்.

அந்தப் போராளிகளில் அவன்மட்டும்தான் கொஞ்சம் ஓயாத வாய். மற்றவன் சிரிப்பான் அதிகம் கதைக்கமாட்டான்.

உங்கடைபேரென்ன ? கேட்ட எனக்கு திண்டுவளந்தான் என்றான் சிரித்தபடி. திண்டுவளந்தான் ! கேட்டவுடனேயே நான் சிரித்த சிரிப்பைப்பார்த்துவிட்டு என்ரை பேர் திண்டுவளந்தான் என்று திரும்பவும் சொன்னான்.

ஆனால் நான் அடிக்கடி சின்னண்ணாவென்றே கூப்பிடுவேன். அதுவே என்வரையில் அவன் பெயராயும் போயிருந்தது. அவனது இயக்கப் பெயரோ வீட்டுப்பெயரோ அறியவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

அவன் சாகக்கூடாது என்வீட்டில் ஒருவனாய் எண்ணி அவனுக்காயும் பிரார்த்திப்பேன். இலங்கை , இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டு இலங்கை இராணுவம் பழையபடி பலாலிக்குள் போய்விட போராளிகளும் காவலரண்களைவிட்டு தங்களது முகாம்களுக்குப் போய்விட்டனர்.

அதன்பின் என் சின்னண்ணாவைக் காண்பதுமில்லை. அந்தத்திண்டு வளந்தான் வருவதுமில்லை. ஆனால் ஞாபத்தில் நிற்கும் பலருள் அவனும் மறக்காத நினைவாய்....!

தியாகி திலீபனண்ணா 5அம்சக்கோரிக்கைகளோடு நல்லூர் மேற்குவீதியில் உண்ணாநோன்பிருந்து இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் 12ம் நாளன்று வீரச்சாவடைந்து தேசமே அழுதுதுடித்திருந்த அந்தநாள் திலீபனண்ணாவுக்கு அஞ்சலிசெய்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறோம்.

தனது போராளி நண்பன் ஒருவனுடன் மோட்டார் சயிக்கிளில் போனான் என் சின்னண்ணா. வாடிய முகமும் , குழம்பிய தலையுமாய் , முதுகில் இருந்த துப்பாக்கியைத் தாண்டி காற்றில் ஒரு கையசைப்போடு போனான். அன்றைய அந்தச் சோகத்தில் யாரையும் தேடும் நினைவும் இருக்கவில்லை. என் சின்னண்ணாவும் போய்விட்டான்.

அதன்பின் ஒரு நாள் மதியம் பாடசாலைவிட்டு வரும் வழியில் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ராஜேஸ்வரியம்மன் கோவிலடியில் சின்னண்ணாவைச் சந்திக்க நேர்ந்தது. மோட்டார் சயிக்கிளில் வந்தவன் சற்றுத்தூரம் போய் திரும்பி வந்தான். சற்று வளர்ந்துவிட்டவன் போலிருந்தான்.

திடீரென வந்தவனுடன் கதைக்கத் தொடங்க சில விநாடிகள் கரைந்தது....! மறந்திட்டீங்களோ திண்டுவளந்தானை ? அவன் தான் கேட்டான். எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் ?  சுகமாயிருக்கிறீங்களோ ? அம்மம்மாட்டைப் போனனான்.

பதில் சொல்லி முடிக்க முன்னம் அவன் படபடவென்று பல்லாயிரம் வார்த்தைகள் பேசிமுடித்தான். பின்னால் இருந்தவனுக்கு தனக்கு திண்டுவளந்தான் பெயர் வந்தது பற்றிச் சொன்னான். அப்போதும் தனது பெயரை அவன் சொல்லவேயில்லை. அன்றைக்கும் ரொபி தந்தான்.

நல்லாப்படிக்க வேணும்...! அம்மம்மாட்டை சொல்லுங்கோ திண்டு வளந்தான் திரும்பி வருவனெண்டு....! வரட்டா ? சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் திண்டு வளந்தான் சின்னண்ணா....!


அதுதான் அவனைக்கண்ட இறுதிநாள். அதன்பின் அவனைக் காணவேயில்லை. இன்று வரை காணவே இல்லை.

ஓ...
என் சின்னண்ணாவே
எங்கேயிருக்கிறாய்....?
களத்தில் நிற்கிறாயா.....?
கல்லறையில் உறங்குகிறாயா....?
நீயும் உனது தோழர்களும்
சென்றியிருந்து காத்த எங்களது ஊர்
சிங்களம் ஆள்கிறது.

நீ நடந்த
அந்தத் தெருக்கள் பற்றைக்காடாயும் ,
பதுங்கு குழியாயும்
மிதிவெடியாயும் இருக்கிறதாம்.

நீ தந்த இளனீர் மரம்
அதுவும் அழிந்திருக்கும்.
ஓ....
என் சின்னண்ணாவே எங்கேயிருக்கிறாய்.....?
21.07.2000

000            000           000

காலம் 2002. முல்லைத்தீவு  ஒரு தென்னந்தோப்பு நிறைந்த வளவு. அதுவொரு பெண் போராளிகள் முகாம். இரவு 10மணிதாண்டியிருந்தது. பழைய கதைகள் பழைய மனிதர்கள் பற்றிய கதையில் சின்னண்ணாவின் கதையும் வந்தது....!

உன்ரை சின்னண்ணாவை இப்ப எந்த அண்ணாவெண்டு தேடுறது ? ஒருத்தி சொன்னாள். அன்றைய பலரது கதைகளில் திண்டு வளந்தான் சின்னண்ணா அதிகம் பேசப்பட்டவனாகினான்.

உனக்குக் கோதாரி மறதி மருந்து தர வேணும் சின்னண்ணா பெரியண்ணாவெண்டு ஒருதரையும் மறக்கேல்ல....! சொன்னாள் ஒருத்தி.

மறக்கக்கூடியவர்களாகவா விடுதலையை நேசித்தவர்கள் எங்களுடன் வாழ்ந்தார்கள்....? நினைவு மட்டும் மீதமாக எத்தனையோ பேர் இன்று வரை நினைவுகளில் மட்டும் தேங்கி நெஞ்சங்களில் வாழ்ந்தபடி....!

மறுநாள் ஒரு சந்திப்பு. அதில் பலர் வந்திருந்தார்கள். அப்போது திண்டு வளந்தான் பற்றி ஒரு தளபதி பகிடியாகக் கேட்டார். யாரடா அந்தத் திண்டு வளந்தான்....? முதல்நாள் இரவு கதைத்தது விடிய முதல் அந்த மதிப்புக்குரிய தளபதியின் காதிலும் விழுந்து....! நமது பிள்ளைகள் தங்கள் தகவல் பரிமாற்ற வேகத்தை நிறுவியிருந்தார்கள்.

தலையைக் கவிழ்த்துச் சிரித்தாள் தோழி. காலில் மிதித்து மெல்லச் சொன்னாள். உனக்குத்தான் நடக்குது நக்கல்...!

அன்று எல்லோராலும் திண்டு வளந்தான் சின்னண்ணா நினைக்கப்பட்டான். ஆனால் 16வருடம் முதல் பார்த்த அந்தத் திண்டு வளந்தானை அங்கிருந்த எவரிலும் காண முடியவில்லை....!

கால மாற்றத்தில் திண்டு வளந்தான் எப்படி ? எங்கே ? இருப்பான்....எவராலும் கண்டுபிடிக்க முடியாதவனாய்....! ஆனால் நினைவுத் துளிகளில் அவ்வப்போது நினைவில் வந்து போகிறான்...!

23.03.2002.
(11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது)

No comments: