Sunday, March 16, 2014

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.

அம்மா அம்மா என - நீ
அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம்
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள்
இன்று போல.....!
உன்னைக் கைவிடோமென நம்பிய
உனது பிள்ளைகளின் கனவுகள் மீது
உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன.

உனது கண்ணீரை உனது துயரங்களை
நீ சொல்லியழுகிற போதெல்லாம்
மறுமுனையில் உனக்காய் 
உனது குழந்தைகளுக்காய்
அழுத நாட்கள் அதிகம் தாயே....!


நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள்
விதையாகிப்போன பின்னும்
வீரத்தின் அடையாளமாய் அவர்கள்
விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில்
வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் 
அங்கேயே வாழ விரும்பினாய்....!

ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற
கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய்
அவனது வரவைத் தானே நீ தினமும் ஏந்தினாய்...!
'காணாமற்போனவர்கள் ஒருநாள் வருவார்கள்'
நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நீ
அவனைத் தேடித்தானே அலைந்து திரிந்தாய்....!

காணாமற்போனவனை நாங்களும் தேடித்திரிந்தோம் 
என்றாவது வருவானென நீ நம்பியது போலவே நம்பினோம்.
இன்றோ உன்னையும் உனது மீதி நம்பிக்கையான
குழந்தையையும் பறிகொடுத்து
உங்களிருவரையும் தேடுகிறோம் தாயே....!

மீண்டு வருவீர்களென்ற நம்பிக்கையில்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்
மனுக்களோடு மனிதவுரிமையாளர்கள் 
மனங்கள் மட்டுமல்ல – அவர்
கண்களும் திறக்குமென்ற நம்பிக்கையோடு
தாயே உங்கள் விடுதலைக்காக
உலகெங்கும் வேண்டுகிறோம்.....!

16.03.2014
 சாந்தி நேசக்கரம்

No comments: