Thursday, April 24, 2014

காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....!

ஆளரவம் தொலைத்த
அடர் வனங்கள்
அன்றைக்கு மௌனித்து
மயானம் பூண்டு
ஆட்களற்றுப் போனது.

ஆழகான புற்தரைகளின் பச்சையம்
ஆட்களற்றுத் தனித்த
பனித்துளியின் ஈரம்
குருதித் துளியாகிக்
காயத் தொடங்கியது.

நீங்களும் வெடியாகி இடியாகி
வெளியில் வராத ஒளியாகிப்
போனீரென்றுதான் காலமழுதது.
எனினும் போரின் கறைகள் காயாமல்
கண்ணீரின் ஈரம் தோயாமல்
நீங்களெல்லாம் வனமளப்பதான
வதந்திகளையெல்லாம்
மௌனங்கள் காடேற்றிக்
கடந்தது காலநதி.

உங்கள் நிழலைக் கூடத்
தொட்டறியாத பேயெல்லாம்
உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது
அங்கென்றும் இங்கென்றும்
அறிக்கைகள் கொடுத்தது.

சொல்லியழ முடியாத் துயர்
கண்ணில் நிறைந்தாலும்
வெளியில் சொல்லியழும் தைரியமின்றி
தனிமையில் தொலைந்த நாட்கள்....!

தட்டச்சு விசைப்பலகை வீரரின்
வீணாய்ப் போன கதைக்கெல்லாம்
வாயடைத்து மௌனித்து
காலம் வருமென்றெண்ணிக்
காத்திருந்த காலமொன்றில்
கருவிழி நிறைந்த இருள்.

காலம் மீண்டும் கண்ணீரை
விழியெங்கும் நிரப்புகிறது.
மீண்டும் இருள் நிரம்பி உறைகிறது
வனங்களும் எங்கள் மனங்களும்
மேலும் இருள்கிறது.

காடறியும் பனித்துளியில் - உங்கள்
காற்தடங்கள் கரைகிறது.
ஊரறிய ஒப்பாரி வைத்து
நாடழுத காலங்கள் போய்
மீண்டும் காலமறியாக் கற்பூரங்களாய்
காடுகளில் நடந்தவரே....!

காலமும்மைக் கைபற்றி
வருமொருநாள்
அதுவரையும் காலமறியாக்
கடவுளர் அறியாத காலத்தின்
சுடர்களாய் வாழும் தெய்வமாய்
வாழ்ந்திடுவீர்.

20.04.2014
சாந்தி நேசக்கரம்

No comments: