நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....
"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....
"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....
ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....
வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?
"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?
விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.
06.05.09
No comments:
Post a Comment