Thursday, September 10, 2009

இந்திய மனைவி திவ்யமதி.


ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்....

எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'எனக்கு இங்கை ஒருதருமில்லையென அழுதபடி என்னைச் சந்தித்த அவளா இவள் ? ஆச்சரியத்தால் அசந்து போனேன்.

5வருடம் முதல் அதுவொரு கோடைகாலம். நெரிசல் நிறைந்த கடைகளும் மனிதர்களும் நிறைந்த நடைபாதையின் ஒரு தொடக்கத்திலிருந்து அடுத்த முடிவுவரை கிட்டத்தட்ட 2மணித்தியாலங்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாள் ஒருத்தி. ஏதோ தனக்குள் முணுமுணுத்தபடி அங்குமிங்கும் திரிந்தாள். பார்க்கும் கண்களில் தலைபிழைச்ச ஆளோ என எண்ணும்படிதான் அவளது நடையும் முணுமுணுப்பும் இருந்தது. நகர் மத்தியில் புடவைக்கடையொன்றின் வாசலில் கட்டப்பட்டிருந்த குழந்தைகள் காசுபோட்டு ஏறும் குதிரையில் பிள்ளைகளை ஏற்றியிறக்கிக் கொண்டிருக்க....திடீரென நீ இந்தியாவா ? என்ற அந்தக் குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் இந்தியா இல்லை இலங்கை ? அப்ப நான் தனியத்தான் எனக்கொருதருமில்லை. என்று சொல்லியபடி போனவள் திரும்பி வந்து 'எனக்கு உதவி செய்வியா ? என்றதும் பயத்தோடுதான் அவளைப் பார்த்தேன். இந்த நகரின் மூலையெங்கும் திரியும் விஸ்கிக் கிழவன் மாதிரி இவளுக்கும் விசரோ ? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அந்தக் கடையொன்றின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவான இருக்கையில் போயிருந்து அழுதாள். அந்த வழியால் போய் வந்த யேர்மனியர்கள் ஒருவரும் அவளைப் பார்க்கமாலே போனார்கள். அவளது நிலை சிலவேளை வீதிகளில் கோப்பிக்கப்களோடு பிச்சை கேட்கும் பிச்சைக்காரியென நினைத்தார்களோ என்னவோ. அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்துவிட்டு எழுந்து போன வயோதிபச்சோடிகள் அவளுக்கு முன்னால் 2யூரோவை வைத்துவிட்டுப் போனார்கள்.

குதிரை ஓடி முடிந்து பிள்ளைகள் அந்தக் கதிரைகளைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குச் சற்றுத் தள்ளி நானும் போயிருக்கிறேன். நீ கிந்தி கதைப்பியா ? தானே மீண்டும் வந்து கேட்டாள். இல்லை நான் இலங்கைத்தமிழ் என்றேன். எனக்கு உதவி செய். எனக்கிப்ப என்ரை அம்மா அக்காவோடை கதைக்க வேணும் என கண்களைத் துடைத்துக் கொண்டு அருகில் வந்திருந்தாள். அவளுக்கு விசரில்லையென்பதை அவளே தனது கதையால் மெய்ப்பித்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் முதலில் தொலைபேசியைத்தான் கேட்டாள். கையில் வைத்திருந்த 2காட்டையும் சுரண்டி ஏதோ காச்சு மூச்சென அழுதழுது கதைத்தாள். திடீரென தொலைபேசியைத் துண்டித்துவிட்டு நான் போட்டுக்கொடுத்த தேனீரையும் குடித்து வாய்ப்பனையும் சாப்பிட்டாள். உறைப்புக் கறியுடன் சோறுசாப்பிட ஆசையென்று ஒருகதையையும் போட்டு வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் அழத்தொடங்கியவள் என்னிடம் தொலைபேசியைத் தந்தாள். மறுக்க மனமின்றி தொலைபேசியை வாங்கி காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.பாதித்தமிழ் பாதி ஆங்கிலம் கலந்து என்னோடு கதைத்தாள் அந்தப்பெண். 13வருடங்கள் தமிழ்நாட்டில் வேலைபார்ப்பதாகவும் அங்கிருந்தே தமிழை ஓரளவு பேசக்கற்றுக் கொண்டதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

அரசியல் கட்சியொன்றில் பணியாளனாக இருந்த அவளது கணவன் காரணம் தெரியாமல் கொலைசெய்யப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தியபடி கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்து மாலைபோட்டு மரணவீடு கொண்டாடி அவளிடமிருந்து ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்ட பொட்டு , பூ , புடவையெல்லாம் பறிபோய் கணவனின் தம்பி வாழ்வு தருகிறேன் என்றதை உதறிவிட்டு கன்னடத்திற்கு போயிருந்தாள் திவ்யமதி.

இறந்து போன கணவனின் பழைய படங்களைப் பார்ப்பதும் அழுவதுமாக 4வருடத்தை ஏனோ தானோவெனக் கரைத்தவள் 8வயதான தனது ஒரு மகளுக்காகவே இனி வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கன்னடத்திற்குப் போனாளாம். தோழியொருத்தி மூலம் விடுதியொன்றில் பணிப்பெண்ணாக வேலையும் கிடைத்தது.

வெளிநாட்டவர்கள் வந்துபோகும் அந்த இடத்திற்கு 55வயதான இவளது இன்றைய யேர்மன் கணவனும் கோடைகால விடுமுறையொன்றுக்குப் போயிருந்த போது அங்கு பணிபுரிந்த ஒருவனால் இவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் அவனது வெள்ளைக்கணவன். யேர்மன் மொழியில் ஒரு சொல்லும் தெரியாதவள் திவ்யமதி. ஆங்கிலத்தில் ஓம் இல்லை என்பதற்கும் அதைவிட்டால் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களையே தெரிந்தவன் அவன். இடையில் மொழித்தரகனாக நின்றவன் சொல்லிச்சொல்லி அவளை யேர்மனியனைத் திருமணம் முடிக்கச் சம்மதம் பெற்றுக் கொடுத்தான். இடையில் தடையாய் நின்ற மொழியையும் யேர்மனி போனால் படித்துவிடலாம் என அவன் சொன்ன தைரியத்தை நம்பி உறவுகளுக்கும் சொல்லாமல் அவனோடு திருமண எழுத்தை முடித்து 5மாதத்தில் யேர்மனி வந்து சேர்ந்தாள்.

தனது மகளின் எதிர்காலம் வண்ண வண்ண மலர்களால் சூழப்பட்டு அவள் ஒரு இராஜகுமாரியாக வலம்வருவாள் என்ற கனவில் தனது கற்பனையில் வந்து சேர்ந்தாள். நிலமையோ தலைகீழ் அல்ல அதனினும் மேலாய் உலகவரைபடத்தில் அவள் பார்த்த நிலமெல்லாம் உருண்டு திரண்டு வந்து தன்னை அழுத்துவது போல நம்பிக்கைகள் சிதைந்து உடைந்து போனாள்.

அவனது தேவைகளுக்காக மட்டும் அவள். மற்றும்படி அவன் டிஸ்கோ போய்வரும்வரை காத்திருந்து , அவனுக்கு வைன் குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ விரும்பும் தருணங்களில் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொள்வதையே அவளது கடமையெனக் கருதினான் அவன்.

அவளது ஒரே மகளுக்கு செஞ்சிலுவைச்சங்கத்தில் போய் பழைய உடுப்புக்கள் எடுத்து வந்து கொடுத்தான். அவளுக்கும் தான். நான் குடுத்து வைச்சவன். ஒரு இந்திய மனைவி கிடைச்சதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என போதையில் உளறுவான். பெண் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் விரும்புவதாய்ச் சொன்னவன் ஒரு உணவகத்தில் துப்பரவுப் பணியாளாக்கினான். சம்பளத்தை மட்டும் தனது வங்கிக்கணக்கில் விட்டு அதிலும் ஒரு சதமும் அவளுக்கோ அவளது மகளுக்கோ சிந்தாமல் பார்த்துக் கொண்டான்.

உன்னையும் உன்ரை மகளையும் கூப்பிட்டதுக்காக நானெடுத்த கடன் இன்னும் முடியேல்ல....எனச் சொல்லிக் கொள்வான். அவள் நினைத்தது ஏதோ நடந்தது ஏதோவாக....அவளால் இயலாத மாதவிடாய் நேரங்களில் கூட அவனுடன் படுத்துச்சாக வேண்டிய தொல்லைக்குள் அவள். சாகும் தருணம் வரும்வரை அவள் ரணமாகிக்கிடந்தாள். அடிக்கடி மருத்துவமனையும் அவளது நாட்களுமாக சில வருடங்கள் போயொதுங்கியது.

சின்னவளாய் அவளோடு ஒட்டித்திரிந்த மகள் பூப்படைந்துவிட்டாள். தனித்து அவன் நிற்கும் நேரங்களில் அவள் அம்மா இல்லாமல் நிற்க அச்சப்பட்டாள். அம்மா வா நாங்க இந்தியாவுக்கே போவோம் என்று அழுவாள். தனது நண்பிகளுடன் சினிமாவுக்குப் போவதாக நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வதாக சொல்லிப் பலநாள் வீட்டுக்கே வராமிலிருந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையிலிருந்து அழைப்புக்கள் வந்தது. அவளது ஒற்றைச் செல்ல மகள் பாடசாலைக்குப் போவதில்லை போதைமருந்து டிஸ்கோவென அலைவதாக. ஒருநாள் இரவு 7மணிபோல் வீட்டுக் கதவை காவல்துறை தட்டும் வரையும் தனது மகள் பற்றி எதையுமே அவள் அறியாமல்தானிருந்தாள். போதைவஸ்து விற்றதில் பிடித்ததாக ஒருநாள் காவல்துறை அவளைக்கைது செய்து கொண்டு போனதோடு இவளது உலகம் தலைகீழாகியது. அவளது அழகான பூங்காக்கள் நிறைந்த மாளிகையின் இராஜகுமாரியின் வில்லுவண்டில் உடைந்து நொருங்க அவளது மகளை அவள் இழந்து போனாள்.

துக்கம் மகளைப் பிரிந்த இயலாமையென தன்மீது கோபம் வரும் போதெல்லாம் யேர்மனியக் கணவனுடன் வாய்த்தர்க்கத்தில் மல்லுக்கு நிற்பாள். இந்திய மனைவி கிடைத்ததற்காக பெருமைப்படுவதாகச் சொன்னவன் சிகரெட்டால் சுடுவது கையில் கிடைப்பதால் அவளைக்காயப்படுத்துவது என ஆசியக்கணவனின் ஆயுதத்தைக் கையிலெடுத்தான்.

எல்லாம் தன் கைகளை விட்டுப்போய்விட்டதான ஏக்கம். மனசெல்லாம் சல்லடையாய் போயிருக்க அவன் விரும்பும் தருணங்களில் அவனுடன் ஒன்றாயிருக்க வேண்டிய நரகம் அவளுக்கு. குருதிப்போக்கு அதிகரித்து தொடர்ந்து இயங்க முடியாத நிலையிலும் அவனோடு உடன்பட்டு ஆகவேண்டிய தொல்லை. பொழுது இருள் போர்த்தினால் இவளுக்கு பேய்களும் பிசாசுகளும் சுற்றுவது போல.

இறுதியில் ஒருநாள் அவன் இல்லாத நேரமாகப் பார்த்து அயல் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவர்கள் சேர்த்து விட்டதே பெண்கள் விடுதி நிலையம். மகளுமில்லை மனதில் நிம்மதியுமில்லாமல் தனித்துப் போனாள் திவ்யமதி.

அன்றைய சந்திப்பின் பின் அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிள்ளைகளுடன் விளையாடுவாள். என்னவனுடன் கதைப்பாள். நீ என்ரை தம்பியைப்போல என்பாள். நீ எனக்குக் கடவுள் என கண்கள் பனிக்க என்னைக் கட்டியழுவாள். ஒருநாள் தொலைபேசியெடுத்துச் சொன்னாள் மருத்துவமனையில் இருப்பதாக நானும் என்னவனும் போய்ப்பார்த்தோம். தனது அக்காவின் தொலைபேசியிலக்கத்தைத் தந்து தகவல் சொல்லச் சொன்னாள். தலைக்குள் ஏதோ செய்வதாகவும் தற்கொலை பண்ண வேண்டும் போலிருப்பதாகவும் சொல்லியழுதாள். அவளை ஆற்றவோ தேற்றவோ வார்த்தைகளற்று நாங்கள் இருவரும்.....


2நாள் கழித்து மீளவும் மருத்துவமனை போனோம். திவ்யமதி அங்கில்லை. அவளை அவளது கணவன் கூட்டிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். தொடர்புக்கு இலக்கம் எதுவும் கொடுக்காமல் போய்விட்டாள்.

பின்னர் ஒருதரம் தொடர்பு கொண்டு சொன்னாள். தனது கணவன் ஒற்றுமையாக வந்து கேட்டதில் தானும் சம்மதித்துப் போனதாக. இப்ப பிரச்சனையில்லையென்றாள். ஒருமாதம் கடந்த நிலையில் யூன்பதினாறு ஒரு பாசல் வந்தது. அதில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் பிள்ளைகளுக்கு இரண்டு ரீசேட்டும் என்னவனுக்கு ஒரு ரீசேட்டும். அது திவ்யமதியிடமிருந்து வந்திருந்தது. அவள் தந்த தொலைபேசியிலக்கத்தை அழுத்தினேன் நன்றி சொல்ல. அவளது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதாவது இவள் நினைவில் வருவாள் நானும் என்னவனும் அவளைப்பற்றிக் கதைப்போம். அவள் எங்காவது நலமோடு இருக்க வேண்டும் என்ற எனது பிரார்த்தனை இருக்கும். அதற்கும் அப்பால் வேறெதையும் செய்ய முடியாதிருந்தது. பெண்கள் விடுதியிலும் அவள் பற்றிய எந்தவித பதிவுகளும் இல்லாமல் போயிருந்தது.

இத்தனைக்குப் பின் இன்று என் முன் நின்று என் ஞாபகத்தை கிழறிவிட்டுள்ளாள் அன்றைப்போல்... மருத்துவமனையொன்றில் தாதியாக இருப்பதாகவும் யேர்மனியக் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். தனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டும் என அந்தக்கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி அழைத்துப் போனாள்.

அந்த இலங்கைத் தமிழச்சிக்கும் அவளது கணவனுக்கும் நெடுகலும் பிரச்சனையாம். அவளை அவன் மிருகத்தனமாக அடிப்பானாம். அந்தப்பெண்ணின் மகளின் தோழியாயிருந்த 18வயது யேர்மனியப் பெண்ணோடு தொடர்பாம். இது பற்றி அவள் விசாரித்ததில் அவனுக்குக் கோபம் வந்து அந்தப்பெண்ணின் பெண்ணுறுப்பில் தும்புத்தடியால் குற்றி அடித்திருக்கிறான். இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வைத்திருக்கிறாள். முதல் நாள் கடைவீதியில் கண்டவள் திடீரென மருத்துவமனையில் என்றதைக் கேட்டு திவ்யமதி போயிருந்தாள் அவளைப் பார்க்க.அப்போதே இந்த அவலத்தை அந்தத் தமிழச்சி இவளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள்.

அவளின்ரை மகள் நல்லவடிவான பிள்ளை. என்ரை மகளைப் போலயிருக்கிறாள். அவள் பாவம். அவளுக்காகக் கட்டாயம் உதவ வேணும். பொலிஸ் இப்ப அந்தப்பிள்ளையை அவேடை வீட்டிலை விடாமல் இளையோர் பராமரிப்பிடத்திற்கு அனுப்பியிருக்கு. விசர் பிடிச்சாக்கள் மாதிரி தாயைப்பாக்க வருவாள். பிறகு அழுதபடி போயிடுவாள் என்றாள் திவ்யமதி.

கேட்கவே உயிர் வலித்தது. மனசெல்லாம் ரணமாகி அவளுக்காக அழுதது விழிகள். உன்ர மகள் எங்கே ? கேட்ட எனக்கு தனது மகளைப்பற்றி எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டாள். அவளது இராஜகுமாரி பற்றிய அவளது கனவுகள் பொடியாகி....கண்ணீர் மட்டும் மீதமாக....திவ்யமதி.

வீடு வந்து நெடு நேரமாகியும் திவ்யமதி சொன்ன தமிழச்சியின் நினைவாகவே இருந்தது.

09.07.2008

4 comments:

Jerry Eshananda said...

பிரிய சாந்தி, நலமாய் உள்ளீர்களா? ஏன் ரொம்ப இடைவெளி? இந்த பதிவு படித்தேன்,
விறுவிறுப்பான சொல்லாடல் வாசிப்பின் ஆர்வத்தை தூண்டியது.
பாரதி பிறந்த தினத்தில் பெண்ணை பற்றிய பதிவு, பொருத்தம் தான்.
பெண் விடுதலையும்,சுதந்திரமும் வேண்டும். தொடருங்கள் சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

அன்பான விசாரிப்பகளுக்கு நன்றிகள் ஜெரி ஈசானந்தா,

தொடர்ந்து இணையத்தில் மினைக்கெட முடிவதில்லை. தங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

பாரதியின் பிறந்தினத்தை நினைக்காமல் போட்ட கதை ஆனால் பாரதியின் நினைவுநாளில் பதிவாகியுள்ளது.

இந்தக்கதையின் நாயகி என்னோடு தொடர்போடு இருக்கிறாள். அவளது அனுமதியோடுதான் இக்கதை எழுதப்பட்டது.

வெளிநாட்டு வாழ்வை நம்பி வரும் இந்திய மனைவிகளுக்காக இதை எழுதென்று அவள்தான் எழுதுவித்தவள்.அவளை இங்கே நன்றியுடன் நினைவுகூருகிறேன்.

நன்றி

சாந்தி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//வெளிநாட்டு வாழ்வை நம்பி வரும் இந்திய மனைவிகளுக்காக இதை எழுதென்று அவள்தான் எழுதுவித்தவள்.அவளை இங்கே நன்றியுடன் நினைவுகூருகிறேன்.\\

வெளிநாட்டு மோகம் குறைந்தால் சரி

சாந்தி நேசக்கரம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை கிறுக்கன். இத்தகைய அவலங்களிலிருந்து வெளிநாடு சொர்க்கம் என கனவுகாணுவோர் விழிப்படைதல் வேணும்.

சாந்தி