Sunday, November 15, 2009

தனித்துப் போயினர் அவர்கள்


யாரது ?

இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட
குற்றவாழிகளாய்
தனித்தனி அடையாளங்களுடன்.....

தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில்
அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள்
பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப்
பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது....

மணியாய் ஒலித்த குரல்
மறக்காத குரலுக்குரிய மொழி
மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ
இருமருங்கும் தடுத்திருக்க
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் .

செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய்
சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய்
அறிமுகமானவள்......
மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு
களங்களில் நின்று காவியச் செதுக்கலில்
தன் கடமைகள் செய்தவள்.....

இன்று...,
எல்லாம் எல்லாருமாய்
ஆட்தேடும் வரிசையில்
அவளும் அடையாளம் தெரிகிறாள்....
மீட்கவோ அவள் துயர் கேட்கவோ
எந்தக் குரல்களுமின்றி
தனித்துப் போயினர் அவர்கள்.....

தடையரண்கள் தகர்த்த கைகள்
முட்கம்பி முடிச்சுகளுக்குள்
முகம் தொலைந்து
வெறுமையின் கோரங்களால்
சூழப்பட்ட நிழல்களாய்.
இழந்து போனோம் எல்லோரையும்.....

நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையெனப்
பாரதியின் எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்த ஞானக்கண்கள்
குழிவிழுந்து ஒட்டியுலர்ந்து ஒடுங்கிக் கிடக்க
இன்னும் கனவுகளில் நாங்கள்......

(10.11.09 அன்று பார்த்த UNHCR ஒளிப்படத்தில் பாடகி மணிமொழியைப் பார்த்த போது எழுந்த வரிகள்....)

Monday, November 2, 2009

மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !


கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட
ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய்
வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும்
வடிவு தந்த பச்சைய மரங்களும்
எட்டும் தூரம் வரையும்
எதுவுமில்லாத் தரைமட்டமாய்….

சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித்
தொண்டைக்குள் உறைகிறது….
ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக
மீளவும் தடையரணில்
கால்கள் தடையிடப்படுகிறது…..

போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய்
பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும்
நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு
காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய்
குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது……

*மீள்குடியேற்றம்*
மீண்டும் நிவாரணம் வரிசை
நிம்மதியற்ற நிகழ்வுகள் யாவும் வளமையாய்…..
பகலில் குடியிருந்த நிலத்தில் பணியும்
இரவில் பள்ளிக்கூடத்துள் பாய் விரித்தலும்
*அகதி* என்ற சொல்லுக்கு அர்த்தம் தரும் வகையில்
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் !

இன்ரனெட் இணையம்
உலகவிரிவு உள்ளங்கைக்குள் திரள
நொடியில் விடயங்கள் உலகைச் செல்லும் காலத்தில்
இன்னும் எங்களின் நிலத்தில் தடைவிதிக்கப்பட்டு
ஓமந்தையோடு ஒளிப்படக்கருவி ஒலிக்கும் செல்லுலா
எல்லாம் கைமாற்றிக் கொடுத்துவிட்டுக் கடக்கிறது வாகனம்
எத்தனைதான் உலகு மாறினாலும் இந்தத் தமிழின விதி
தரித்திரவிதியோ….?
உள்ளெரியும் இதயத்துத் துயர்
வாகன இரைச்சலுக்குள் புதைகிறது.

29.10.09 (மல்லாவிப் பகுதியில் இலங்கையரசினால் கொண்டு போய் விடப்பட்டுள்ள மக்களுக்குப் பொருட்கள் விநியோகத்திற்குச் சென்று வந்து ஒரு UNHCR பணியாளரின் கருத்திலிருந்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது)