Friday, May 21, 2010

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம்.

மரணம் !
அது உனது முகம் முழுவதும்
வியாபித்திருக்கிறது....
சொல்ல எழுகிற சொற்களைக்
குற்றித் துளைக்கும்
கூர்முனைக் கத்தியிலிருந்து
உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது.

உதிரும் குருதித் துளிகள்
உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும்
உறிஞ்சிக் கொண்டு போகிறது.....
கத்தியின் இடுக்கிலிருந்து
ஒழுகுகிறது உனது
கடைசிக் கனவுகள்.....

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய
எந்தவித கவலையுமின்றி
உன்னைக் குற்றிக் குருதியில்
குளிப்பாட்டி மகிழ்கிறது
காடேறிகளின் கர்வம்.....

இன்றைய முகப்புச் செய்திகளிலும்
தலைப்புச் செய்திகளிலும்
நீ நிறைந்து வழிகிறாய்.....
வியாபாரிகள் வயிறு முட்ட நீ
வலியில் துளித்துளியாய்
செத்துப் போகிறாய்.

எத்தனையோ கொடுமைகள்
படங்களாய் வந்து போயிற்று
அதுபோல நீயும்
நாலுநாள் செய்தி - பின்
நாவுகளில் மட்டுமல்ல
நமது வீரங்களின்
நினைவுகளிலிருந்தும்
நிரந்தரமாய்
மறந்து போய்விடுவாய்.....

உன்போல் பல கதைகள்
அவ்வப்போது வந்து
ஆயுளை அழித்துச் செல்லும்
ஆயினும் வீரமாய் விடுதலை பேசி
நாசமாய்ப்போவோம்....

நீங்கள் சாவது
குருதியில் மிதந்து போவது
நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு
விடுதலையின் அடையாளம்....

`மனிதம் மனிதவுரிமை`
மேற்படி சொற்களின் பெறுமதி
உனக்கானதும் உன்போன்ற
ஆயிரமாயிரம் பேருக்கான முடிவுகள்
இதுதான் என்பதை மீள்பதிவாக்குகிறது.

தோழனே !
தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி
இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா
நீங்கள் சாகத்துணிந்ததும்....?
சயனைட் அணிந்ததும்.....?

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)

3 comments:

VijayaRaj J.P said...

\\தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி
இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா
நீங்கள் சாகத்துணிந்ததும்....?
சயனைட் அணிந்ததும்.....?//

வேதனையால் மனம் கனத்து போகிறது...

சாந்தி நேசக்கரம் said...

துயரங்களே எங்கள் வாழ்வாகிப்போனது VijayaRaj. என்ன செய்வோம் எங்கள் விதி இப்படியாய் இருக்கிறது.

- இரவீ - said...

niraya yosikka vachchenga saanthi, varuththam mattume vaazvaa irukku...