Wednesday, November 3, 2010

மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

ஈரம் காயாத உனது குருதிச்
சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது
வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்……
உறைந்து போன கனவுகளை அள்ளியபடி
அலைகிறது உனது உயிரின் காற்று……

நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும்
உனது ஆத்ம அலைவின் எச்சமாய்
இரவெல்லாம் காய்ந்து
பகலில் பயங்களோடு தேய்கிறது…..

கடைசிச் சாட்சியங்களுடன்
கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை
கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து
கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன்
நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்….

கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும்
களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும்
கடைசிவரையும் நீ நேசித்த எதையுமே தப்பிக்க விடாமல்
சாம்பராக்கிச் சாம்பலாக
நின் கனவுகள் மெய்க்குமென்றுதான் நம்பினாய்…..
மெளனமாகிறேன்…..உனக்காக…..உன்போன்றோருக்காக…..

‘‘நானில்லாட்டி…என்ரை ஞாபகமாய்‘‘
நீயனுப்பிய பொக்கிசமாய் மிஞ்சிச் சிரிக்கும்
உனது நிழற்படங்களை சாமிகளோடு
சமன்படுத்துகிறேன்…..
சேமிக்கப்பட்ட உனது நினைவுகளுடனும்
நெஞ்சுக்குள் கனக்கும் உனது கனவுகளுடனும்
காலக்கொலைஞரின் கண்களின் முன்னால்
மறைக்கப்பட்ட உங்களது வாழ்வைச் செதுக்குகிறேன்…..
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

17.10.10 (மே 2009 கனவுகளுக்காக தன்னையும் தனது கணணியையும் தன்னோடு எஞ்சிய யாவையும் எரித்துச் சாவை எய்தியதாய் அவனோடிருந்து பின்னர் சரணடைந்து வந்த ஒருவனின் உறுதிப்படுத்தலின் பின்னால் எழுதப்படுகிறது இவ்வரிகள். எப்போதாவது சந்திப்போமென்ற நம்பிக்கை போய் இனி எப்போதுமில்லைச் சந்திப்பென்று ஸ்கைபில் விடைபெற்றுப் போன தோழன் நினைவுகளோடு பிறந்த வரிகளை அவனுக்காக.....)

No comments: