Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு


அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)

No comments: