Saturday, January 8, 2011

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.


06.01.2010

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்.
நேசக்கரம் அமைப்பானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக யாழ் இணையத்தில் இணைந்திருந்த சில உறுப்பினர்களால் நட்பு அடிப்படையில் சில வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பனூடாக புலம்பெயர் மக்களின் உதவிகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ததுடன் உதவிகள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றன என்பதும் உறுதிப்படுத்தபட்டும் வருகின்றது.

கடந்த 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் நேசக்கரம் அமைப்பினை தொடங்கிய பலரும் மனச்சோர்வு வேலைப்பழு என விலகிச்சென்ற போதும், மனம் தளராது சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரே நேசக்கரம் அமைப்பின் இயக்கம் நின்று போகாமல் அதனூடன சேவையை தொடர்ந்தனர். நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்னர் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், கணவர்களை இழந்த பெண்கள், கல்வியை இழந்த மாணவர்கள் காயமடைந்தவர்கள் என எங்கள் உறவுகளின் தேவைகள் பெரும் பூதாகாரமாய் வடிவெடுத்து நின்றது. அதன்காரணமாக நேசக்கரத்தின் வேலைத்திட்டங்களையும் விரிவாக்க வேண்டிய தேவை எமக்கிருந்தது.தங்கள் பெயர் சொல்ல விரும்பாத சில நல்ல உள்ளம் படைத்த உறவுகளின் உதவிகளுடன் நாமும் காலத்தின் தேவைகளையறிந்து இன்றைய உலகின் அனைத்து நவீன வசதிகளையும் பயன்படுத்தி வானொலி .பத்திரிகைகள் இணையத்தளங்கள் மின்னஞ்சல் என சகல வழிகளிலும் எமது மக்களின் தேவைகளை வெளிக்கொணர்ந்து கடந்த இரண்டு வருடத்தில் பெருமளவான உதவிகளை புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் செய்து முடித்தோம்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் இனி புலம்பெயர் மக்களிடம் உதவியென்றே போகமுடியாது போனாலும் எதுவும் தரமாட்டார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்து நிலவிய காலத்திலும் அதனையே ஆலோசனைகளாகப் பலர் எம்மிடம் சொல்லிய போதும் இல்லை மக்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் சரியான கணக்கு ஆதாரங்களுடன் சென்றால் நிச்சயமாக உதவுவார்கள் என்று அதனையே ஒரு சவாலாக நினைத்து எங்கள் வேலைத்திட்டங்களை வடிவமைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே உடனுக்குடன் உதவிகளும் வந்து சேர்ந்தது. உதவியவர்களும் நேசக்கரத்தினை பாராட்டி திருப்திபட்டுக் கொண்டார்கள். ஆனால் நேசக்கரத்தின் வேகமான செயற்பாடுகளும் அதன் சேவையின் பிரபலமும் இலங்கையில் பல அரசியல் வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது. சிலர் தங்களுடன் இணைந்து இயங்குமாறு அழைப்பு விடுத்தனர். சிலர் எங்கள் உதவிகளை பெற்று மக்களிடம் வினியோகித்து தங்கள் அரசியல் இலாபம் பெற நினைத்தனர். சிலர் மிரட்டினார்கள்.


ஆனால் நேசக்கரம் அமைப்பானது எவ்வித அரசியல் சாயமும் பூசிக்கொள்வதில்லையென்பதில் உறுதியாக நின்றது. இவை அனைத்தையும் சமாளித்தும் எதிர்த்தும் எங்கள் வேலைத்திட்டங்களை முடிந்தவரை முன்னெடுப்பது முடியாத நிலை வரும்பொழுது நிறுத்தி விடுவது என முடிவெடுத்திருந்தோம். எனவே அந்த முடிவினை எடுக்கும் நேரம் வந்து விட்டது. காரணம் எமது அமைப்பினை முடக்குவதற்கான அல்லது அதனை பறித்தெடுப்பதற்கான தொடர்ச்சியான அழுத்தங்கள்.தொடர்ச்சியான தொலைபேசி மிரட்டல்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
நேசக்கரம் அமைப்பினை இயக்குகின்ற சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரிற்கு எவ்வித அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள். வெறும் மனோபலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் முட்டி மோதி பல உதவித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தொடர்ந்தும் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்வையும் கவனித்தபடி மிகப்பெரிய அரசியல் பலங்கள் பிரபலங்களுடனும் மோதிக்கொண்டு எமது சேவைகளை தொடர முடியாத நிலையில் நேசக்கரத்தின் செயற்பாடுகளை நிறுத்துவது என்கிற மனவருத்தத்திற்குரிய முடிவினை எடுத்துள்ளோம்.

நேசக்கரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிற்கு தொடர்ந்தும் உறவுகள் உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடனும். வேறு ஏதோ ஒரு வடிவத்தில் அந்த உதவிகள் போய்சேரவேண்டும் என்கிற ஆதங்கங்களோடும் இதுவரை காலமும் நேசக்கரத்துடன் கைகோர்த்து நின்ற அனைத்து உறவுகளிற்கும் எங்கள் நன்றிகளையும் வணக்கங்களை கூறிக்கொண்டு நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.
நன்றி வணக்கம்.
இங்ஙனம் நேசக்கரம் நிருவாகம்.

No comments: