Tuesday, February 15, 2011

அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக

பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது.

அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந்து தருவோர் போலிருந்தது அவர்களது கவனிப்பு. தேய்ந்து போன நம்பிக்கை துளிர்விட்டுச் செளித்து மதாளித்து வேர்பரப்புவது போல அவர்கள் மிகுந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனது கடைசி நாட்களை அவள் சொல்லத் தொடங்கினாள்…..

°°° °°° °°°

நான் குப்பியடிக்கிறன் நீ பிள்ளையைக் கொண்டு போம்மா….எங்கடை பிள்ளை வாழ வேணும்…அவனைக் கொண்டு போ…..

அவளது இறுகப்பற்றிய கைகளிலிருந்து தனது கைகளை விலக்க முயன்றான்.

வேண்டாம் நானுங்களைச் சாகவிடமாட்டேன்…..எவ்வளவு பேர் போயிட்டினம்….நீங்க மட்டுமேன் சாக வேணும்…..?

அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீரின் கனம் நெருப்பிருந்தால் இவள் அவனுக்காக கண்ணகியாய் மாறுவாள் போலிருந்தது. தங்களது கணவர்களை இழந்த பெண்கள் பலர் அவர்களைத் தேடித்தேடி அழுத முகங்கள் இவன் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தது.

அவளது மறு கையில் நின்ற குழந்தையைப் பார்த்தான். அவன் முகமெங்கும் ஆயிரம் காலத்துத் துயரங்கள் அப்பியிருந்தது. தந்தையர்களை இழந்த பிள்ளைகளின் முகங்களில் நிறைந்திருக்கும் ஏக்கம் தனது குழந்தையின் முகத்திலும் நிரந்தரமாய்விட்டது போலிருந்தது.

அவன் தனது கதையை முடித்துக் கொள்ள வைத்திருந்தது பழுதடைந்ததாய் சொல்லப்பட்ட ஒரு குப்பியை மட்டும் தான். அதனையும் அவளுக்காக அவனது குழந்தைக்காக கழற்றி எறிந்தான். எல்லாம் இழந்த வெறுமை எல்லாரையும் இழந்து விட்ட துயரம் இனி எதுவும் இயலாதென்ற நிலமையில் நடப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே விதியென்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் வாழ்ந்த அவர்கள் போராடிய மண்ணைக் கடந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியாய் மண்ணைப் பாதம் தொடுகின்ற நொடியிலும் ஆயிரம் கத்திகள் நடுவில் நடப்பது போலிருந்jது உணர்வு. இரத்தமும் சதையுமாய் போரின் எச்சம் சாவுகளால் நிறைந்து கிடந்தது. ஏன்….? எப்படி….? எதற்கு….? எதற்கும் விடை தெரியாத மர்மமாய் எல்லாம்…..

எத்தனையோ தோழர்கள் இரத்தம் சிந்திய நிலம். எத்தனையோ மக்களின் உழைப்பால் உயர்ந்த நிலம் நெருப்பெரிந்து முடிந்த சாம்பல் மேடாய்……அவனது ஞாபகங்கள் யாவும் ஒவ்வொரு நினைவுகளையும் மீள மீள இழுத்து வந்து அவனது கண்ணுக்குள் புதைத்துக் கொண்டிருந்தது.

என்னையும் என்னையுமென காயமடைந்தவர்களின் கெஞ்சுதல்கள் கடைசிச் சொட்டு உயிரைக் காக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புகளோடு குருதியில் குறையுயிரில் கிடந்த உயிர்கள் மனசை அரித்து உயிரைக் குடித்த வலியால் இதயம் துடித்தது.

°°° °°° °°°
அவர்களை நிராயுதபாணிகளாய் நிறுத்தி வைத்து ஆள்பிடி ஆரம்பித்தது. அவன் அவளைப் பார்த்தான். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவனையும் அழைத்தார்கள்.

என்னையங்கை சாகவிடாமல் இஞ்சை குடுத்திட்டுப் போறீங்களே….? நானந்த மண்ணுக்கை போயிருப்பன் என்னை வா வாழ வேணுமெண்டீங்கள்….? இனி நான் வரவேமாட்டன்….என்னைத் தேடித்தேடியழப்போறீங்களம்மா….சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் தோழைப்பிடித்து ஒரு கை தள்ளியது. ஒரு உலகத்திலிருந்து வேற்றுலகம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். அவளது அழுகையொலி மட்டும் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. அவளால் காப்பாற்ற முடியாமல் அவன் அவளுக்குத் தெரியாத இடம் கொண்டு செல்லப்பட்டுவிட்டான்.

அவன் விரும்பியது போல் அன்று செத்துப்போவென்று விட்டிருந்தால் கூட அவனுக்கு நிம்மதியான மரணத்தையாவது கொடுத்திருக்கலாமென நினைத்தாள். குற்றமிழைத்தது போல மனச்சாட்சி அவளைக் கொன்று கொண்டிருந்தது.

ஆழிப்பேரலையின் கூத்து முடிந்த நிசப்பத்தால் நிறைந்தது பொழுது. அவர்கள் முன்னால் அவள் சாட்சியம் சொல்லி முடித்துவிட்டு வெளியில் வந்தாள்.

சுனாமி அடித்து ஓய்ந்த போது கரையோரம் முழுவதும் கேட்ட அவல ஒலிகளும் உறவுகளைத் தேடுவோரின் அழுகையொலிகளும் திரும்பி வருவது போலிருந்தது. தன்னையும் இழப்பின் வலி அழுத்துவதை உணர்ந்தாள். கையில் அவளது குழந்தை மட்டும் மிஞ்சி நின்றான். காணமற்போன அவனது அப்பாவை அம்மா கொண்டு வருவாளென்ற நம்பிக்கையை அழித்துவிட்டது போல் அவனை ஒற்றைக்கையால் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

°°° °°° °°°

தணலாய் கொழுத்திய வெயிலில் இருந்து சற்று ஆற வீதிக்கு மறுபுறமாய் அமைந்திருந்த குளிர்பானக்கடைக்குள் போனாள். குழந்தை விரும்பிக் கேட்ட ஐஸ்கிறீமையும் தனக்காக ஒரு சோடாவையும் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் குழந்தையும் அவளும் இருந்தார்கள்.

மகன் சிரித்துக் கொண்டு கடவாயில் ஐஸ்கிறீமைப் பிரட்டிப் பிரட்டிச் சாப்பிட்டான். அவனது மறுபிறவி போலிருந்தது மகனின் சிரிப்பு. குழந்தையின் தலையைத் தடவிவிட்டாள். இவனைப்பற்றி அவனும் எவ்வளவு கனவுகளைத் தனக்குள்ளே புதைத்திருப்பான்….? ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது. கற்கள் இரும்பாய் திரண்டு தொண்டைக்குளிக்குள் புகுந்து நெஞ்சுக்கூட்டைப் பிழப்பது போல வலித்தது.

மகனை சயிக்கிளின் பின்புறம் ஏற்றிக் கொண்டு சயிக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். எப்பம்மா அப்பா வருவார்…? அவன் கேட்கத் தொடங்கினான். கெதியிலை வருவரய்யா…..பிள்ளையை சமாதானப்படுத்தினாள். எங்கம்மா அப்பா இருக்கிறார்….? தெரியேல்லயடா செல்லம்….அம்மா தெரிஞ்சா போய் கூட்டி வந்திடுவனெல்லோ…..இப்படித்தான் தருணங்கள் அறியாமல் அப்பாவைத் தேடும் குழந்தையை சமாளிக்க அவளுக்கு பொறுமையே செத்துவிடும்.

°°° °°° °°°

அவன் செத்துப்போயிருப்பான்…..இனிமே வரமாட்டான்…..என்னைக் கலியாணங்கட்டினா உனக்கான எல்லாத்தையும் தருவன்…முடிவைச் சொல்லுவியா….? 6வது நபராக அவளது முடிவை எதிர்பார்த்திருக்கும் அயல் ஊரவன் அருகாய் சயிக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான்.

ஆரம்பத்தில் இந்த முடிவு கேட்கும் முகங்கள் மீது கோபமும் எரிச்சலும் தான் வந்தது. இப்போது அதுவும் பழகிப்போயிற்று. புலியில்லா இடத்தில் நரிகள்.... அவளை அச்சுறுத்தியது….அவஸ்தைப்படுத்தியது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளை மட்டுமே உறவாய் நம்பியிருக்கும் தனது மகனுக்காக.

அடுத்த தெருவின் திருப்பத்தில் அயல் ஊரவன் திரும்பினான். இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். திரும்பவும் வருவேன் என்பது போல அவனது பார்வையும் சிரிப்பும் அவளைக் கலவரப்படுத்தியது.

ஊரவங்கள் காட்டான்களெண்டு யாழ்ப்பாணியைக் கட்டி அதுவும் யாழ்ப்பாணத்துப் புலியைக் கட்டி அதான் அந்தத்திமிர்தான் இப்ப உன்னை இஞ்சை கொண்டு வந்து விட்டிருக்கு….அதுவும் எங்கடை கண்ணுக்கு முன்னை நீ இருக்க வேண்டிய விதியைத் தந்திருக்கு….. அடுத்தொருவன் ஏளனமாய் சொன்னது அதற்கடுத்துக் கேட்டது.

அவமானத்தால் கூனியது மனசு. எண்டாலும் எங்களுக்குப் பெரிய மனசு மறுவாழ்வு தரத்தயாராயிருக்கிறோம்….சொல்லியபடி இரண்டாமவன் அவளை விலத்திக் கொண்டு போனான். ஒரு நரகத்தின் வாயிலுக்குள் மாட்டுப்பட்ட நிலமையில் அவனது ஏளனம் திரும்பத்திரும்ப புது வடிவங்களாய் துரத்திக் கொண்டிருந்தது.

வீட்டுப் படலையை விலத்திக் கொண்டு மகனை இறக்கிவிட்டாள். நான்கு பக்கக் கப்பின் துணையோடு உக்கிய கூரையால் காப்பிடப்பட்ட செத்துப்போன குடிசைக்குள் போனாள். அம்மா ஒரு ஓரமாய்க் கிடந்தாள். என்ன மகள்…? ஏதேன்….? கண்ணீர் தான் முன்னுக்கு வந்து விழுந்தது. அம்மா தனது நோயின் வலியோடு மகளுக்காக அழுதாள். அம்மா ஏதேதோ சொன்னாள். அம்மாவின் கண்ணீர் எப்போதும் போல அவளுக்கானதாயிருந்தது.

வெளியில் கிடந்த சுள்ளிகளை முறித்துக் கொண்டு வந்து அடுப்பை மூட்டி கேற்றிலை அடுப்பில் ஏற்றனாள். மகன் புதிதாய் வாங்கிக்கொடுத்த சித்திரக்கொப்பியை பாயில் விரித்து வைத்துக் கீறிக்கொண்டிருந்தான். அடுப்பு புகையத் தொடங்கியது. தலைக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் ஏதோ உருண்டு திரண்டு உலைத்துக் கொண்டிருந்தது மனசு. சொற்களால் வெளிப்படுத்திவிட முடியாதளவு துயரம் அடுப்பிலிருந்து நெளிந்து பரவிப்போகும் புகைக்குள்ளால் அவளை இழுத்துக் கொண்டிருந்தது.

°°° °°° °°°

2மாதங்களின்பின்னர்……

ஒரு வெள்ளிக்கிழமை மாலை அம்மா தனது கடைசி மூச்சினை தனது மகளிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் விடுவித்துக் கொண்டு போய்விட்டாள். 1990இல் அப்பாவை ஆமியின் துப்பாக்கிகள் பிரித்துக் கொண்டு போய் பிணமாய்ப் போட்டது. வீட்டின் செல்லப்பிள்ளை ஒற்றைப்பிள்ளையவள் 1990ஆனிமாதம் அம்மாவைத் தனிக்கவிட்டுக் கொள்ளையோடு காடுகளில் கடுந்தவம் புரிந்து பாரதிகண்ட புதுமையின் அவதாரமாய் நாட்டுக்குள் உலவிய பெண்களோடு அவளும் போனாள்.

19வருடப்போராட்ட வாழ்வு. அதற்குள் எத்தனையோ மாற்றங்கள்….ஒன்றாய் களப்பணி செய்த கட்டத்தில் கொள்கையால் ஒன்றுபட்ட காதலில் அவனும் அவளும் காதலர்களாகி……அவர்கள் தாயினும் மேலாய் நேசித்தவர்களின் முன்னால் நடைபெற்றது திருமணம். இருவராய் சந்தித்தவர்கள் இன்னும் ஒரு உயிரை நேசிக்க வைத்த குழந்தையின் வரவு எல்லாம் இனிமையான அனுபவங்கள்.

இனிமைகள் தொலைந்து நினைப்புகளுக்கு மாறாய் நிகழ்வுகள் முடிந்து அவளுக்காய் அவளது குழந்தைக்காய் குப்பியை எறிந்துவிட்டுக் கூட வந்தவனும் போய்…. உறவென்று கொண்டாட உயிர்வாழ்ந்த அம்மாவையும் புற்றுநோய் கொன்று அம்மாவின் வரலாறு அந்த வெள்ளி முடிந்து போனது.

எத்தனையோ அர்த்தங்கள் குறிக்கப்பட்ட அவளது துணிச்சல் துடினம் இயல்பு எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். அவளுக்குள் இருப்பதாய் அவள் நம்பிய புரட்சிக்காரியைக் காணவில்லை. குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்கிற பெண்களின் குரல்கள் அவளுக்குள்ளும் குடிகொண்டது. மிஞ்சிய பிள்ளைக்காக அவனது எதிர்காலம் நல்லவிதமாய் அமைய வேண்டுமென்ற ஒரு அம்மாவின் இயல்பு அவளுக்குள் தானாயே வந்து சேர்ந்தது.

அம்மாவின் முதிசம் அவளுக்காகவே விட்டுச் செல்லப்பட்டுள்ள குடிசையும் வேலியில்லாத ஒன்றரைப்பரப்பு வளவும் மிஞ்சிக்கிடந்தது. இரவுகள் இப்போது நிம்மதியாயில்லை. பகல்கள் இப்போது பசுமையாய் இல்லை. பயங்கரம் மிக்கதாய் எல்லாப் பொழுதுகளும் அவள் சிங்கத்தின் குகைக்குள் அடைக்கலம் புகுந்த மான்குட்டியின் நிலமையில்……சிங்கங்கள் பல அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடிய துணிச்சல் மிக்க ஒரு மனிசியாய் கூட நிமிர முடியாது சோர்ந்து போனாள்.

அவள் தோழில் கையிரண்டையும் இறுக்கி அப்பாவைப் பற்றிக் கேள்விகளால் குடையும் குழந்தைக்கான பதில்களைத் தேடுகிறாள். வெடியோசைகள் நின்றுபோன மண்ணிலிருந்து அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக……

05.02.2011

No comments: