Saturday, December 31, 2011

எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா?

(இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.)

பன்னிரண்டு மணி
பட்டாடை கட்டி வானம்
விழித்துக் கொள்கிறது.

கருவானக் கதவுடைத்து
கனவு கலைந்து வான வெளி
கண்விழித்துக் கொள்கிறது.

வண்ண வண்ண ஒளிக்கலவை...
அழகின் இருப்பிடமெல்லாம்
அகன்ற வானில்
அள்ளிக் கொட்டியிருக்க
வீதிகளில் புகைமூடி
வர்ண ஒளிக்கீற்று
வடிவுதான்....

பனித்துளி சொட்டப்
பகலைத் தெளித்தது போல் பொழுது
பட்டாசுகளால் பல்வர்ணம்....
புத்தாண்டுப் பிறப்பு
பகற் சேமிப்பெல்லாவற்றையும்
பட்டாசாய் வெடித்து மகிழ்கிறது
பக்கத்து வீடுகள்.....

எனக்கு ?

புத்தாண்டு இன்று
என் மண்ணில்
பிணங்களின் மேலால் விடிகிறது.
முப்பதாண்டுச் சோகம்
முடியாமல் விடியாமல்
என் மக்களுக்குத்
துப்பாக்கிச் சத்தமும்
எறிகணைக் கூவலுமே
இருள் அகற்றிப் - போர்
முகம் காட்டுகிறது.

என் போராளித் தோழர்களின்
துப்பாக்கி முனைகள்
தூங்காமல்.....
என் தோழர்களின்
விழிகளைப் போல் தவமியற்றுகின்றன.
தமிழர் விதி மாற்றிவிடும்
கனவுடனே காவலரண்
கம்பி வேலிகளுக்கால்
தடையறுத்துச் சமர்க்களத்தில்
சத்தமின்றிப் போகின்றனர்.

எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?
பொன்னள்ளிச் சொரிந்து
வானப் பண்ணள்ளி
வெற்றிப் பரணி பாட
எங்களுக்கும் புத்தாண்டு
இப்படியாய் விடியாதா ?

01.01.09

Monday, December 19, 2011

முள்ளிவாய்க்கால் முடிவு.


அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை.

அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன்.

அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில் நின்றபடி கவிதைகள் எழுதியவள்.

ஊனமுற்ற பின் களத்தைவிட்டு அரசியல்துறையில் இணைக்கப்பட்டாள். அரசியலில் இருந்தவளின் எழுத்தாற்றலை இனங்கண்டு அவளது எழுத்துக்களை ஊக்குவித்தார்கள். அவள் எழுத்துகள் வானொலி பத்திரிகை வரை வியாபிக்கத் தொடங்கியது. போராளிகள் ஒயாத இயங்கு சக்திகள் என்பதற்கு இலக்கணமாய் அவள் இயக்கம் ஒரு பிரிமிப்புத்தான் வெளியாட்களுக்கு.

அது சமாதானக்கதவுகள் திறபட்டதாய் நம்பப்பட்ட யுத்த நிறுத்தகாலம். சிறைகளில் உள்ளவர்களும் தொலைபேசும் வசதிகள் முதல் விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை வசதிகளையும் வன்னிமண் பெற்றிருந்த காலம்.

சிறையில் இருந்தவர்களுடன் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கம்பிகளின் பின் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு மனிதர்களோடு பேசக்கிடைத்த தருணங்களை அவர்கள் வரமாகவே எண்ணினர். அத்தகைய ஒரு அழைப்பில் தான் அவனுடன் பேசக்கிடைத்தது அவளுக்கு. ஆரம்பம் அவன் எழுதிய எழுத்துக்களை அவள் தட்டச்சுச்செய்து வெளியீடுகளுக்கு அனுப்பினாள். தனது நிகழ்ச்சிகளில் சேர்த்தாள். அவன் அக்கா என்றும் இவள் தம்பியென்றும் உருவானது உறவு.

நாட்கள் போகப்போக அக்கா தம்பியுறவு அன்னியமாகியது. ஒருநாள் கதையோடு கதையாக அவன் அவளைக் காதலிப்பதாகத் தனது காதலை தொலைபேசியில் வெளிப்படுத்தினான். அதுவரை காதல் கல்யாணம் எவ்வித சிந்தனையும் அற்றிருந்தவள் திடுக்குற்றுப் போனாள்.

அடுத்த நாள் பொறுப்பாளர் அக்காவிடம் தனியே கதைக்க வேண்டியிருப்பதாய் சந்திப்பு நேரம் கேட்டாள். ஏதோ கொடுக்கப்பட்ட பணிபற்றிக் கதைக்கப் போகிறாள் என்றுதான் பொறுப்பாளரும் நினைத்தார்.

அக்கா…..,அவன் என்னைக் காதலிக்கிறானாம்…..!
பொறுப்பாளருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
என்னடியாத்தை விளையாட்டுக்கும் அளவில்லையோ ?
அக்கா சிரிக்காதையுங்கோ….
உண்மையாத்தான் சொல்றன்……
என்னட்டை முடிவு கேட்டிருக்கிறார்….
உங்கடை சம்மதம் வேணுமெனக்கு….
சரி அவனுக்கு உன்னில காதல்…உனக்கு…? நானும் காதலிக்கிறேன்…..
எடுத்த எடுப்பிலேயே அவள் சொன்னாள்.
இதப்பாரம்மா….,அவன் சிறையில….
நீ வெளியில….
மற்றது உனக்கும் அவனைத் தெரியாது…அவனுக்கும் உன்னைத் தெரியாது…..இது சினிமாமாதிரியில்லையா…?
இது சாத்தியமாகுமோண்டு யோசிச்சீங்களோ ?
நேரை பாத்து விரும்பிச் செய்த கலியாணங்களே எத்தினை தமிழீழ நீதிமன்றத்துக்கு வந்த கதையள் உங்களுக்குத் தெரியுமெல்லோ….?

அவள் பொறுப்பாளரின் விளக்கம் விபரம் எதையும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நின்றாள். தங்கள் காதல் புனிதம் , தூய்மை , தெய்வீகம் , காவியம் என்றெல்லாம் கனக்க விளக்கம் சொன்னாள்.

அந்த முறுகலுக்குப் பின்னர் அந்தப்பிரிவை விட்டு அவள் வேறு பிரிவுக்கு மாறிப்போனாள். காரணம் முகம் தெரியாத குரல்கள் மட்டும் அறிமுகமான காதலைப் பிரிக்க நின்ற பாவம் பொறுப்பாளர் மேல் விழுந்தது. ஆனால் அவளது இலட்சியக்காதலுக்கு பலரது ஆதரவு கிடைத்து அவளும் சிறையில் இருந்த அவனும் காதலர்கள் ஆனார்கள்.

சமாதானப்பறவை இரத்தத்தில் சிதைய யுத்தம் ஆரம்பமாகி பல்லாயிரம் உயிர்கள் இழப்பு காணமற்போனவை கடைசியில் சிதைக்கப்பட்டவையென விடுதலைப்போராட்டத்தின் முடிவு மர்மமாகியது.

2009மேமாதம் அவளும் ஆயிரமாயிரம் பேருடன் சரணடைந்தாள். ஆயிரமாயிரம் துயரங்கள் சுமந்து அவளுக்கும் புனர்வாழ்வு கிடைத்துச் சிறையிருந்து 2010 விடுதலையாகி வெளியில் வந்தாள்.

இலட்சியக்காதலனின் தொடர்பைத் தேடிப்பெற்றுக் கொண்டு அவனுடன் தொடர்பு கொண்டாள். காவியக்காதல்கள் பற்றி புராண இதிகாசங்கள் தோற்றுப் போயிருக்குமென்றுதான் அவளது காதலுக்குத் துணைநின்ற பலர் நினைத்தார்கள்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதல் என்றென்றும் வாழும் சாகாதென்ற சத்தியத்தோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. அவன் வரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் சபதமெடுத்தாள். அவனும் அப்படித்தான் அவளுக்குச் சொன்னான்.

2011வருட ஆரம்பம். புதுப்பிக்கப்பட்ட உறவு மெல்ல மெல்லக் கருகுவது போலிருந்தது அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடியோடு நின்ற நண்பர்களுக்கு.

ஒருநாள் ஒரு வெளிநாட்டுத் தோழி அவளுடன் பேசிய பொழுது அவர்களது காதல்பற்றிக் கேட்டாள் தோழி. அதைப்பற்றி அவள் அக்கறையெடுக்கவில்லை…..

என்னை வெளிநாடு எடுக்க முடியுமெண்டா உதவி செய்தால் நல்லம்….உதவ முடியுமா ? எனக்கேட்டாள்.

தோழிக்குப் பெரிய குழப்பமாகிவிட்டது. இலட்சியக்காதல் இதிகாசக்காதலென்ற தத்துவங்களையெல்லாம் நம்பியிருந்தவள். பச்சைக் கொடி மட்டுமில்லை அவர்களது திருமணத்திற்கு கட்டாயம் எங்கிருந்தாலும் போக வேண்டுமென்றிருந்தவளுக்கு ஆச்சரியம். அவள் சொன்ன காரணங்களுக்கான தனது தரப்புப்பதில்களைத் தோழி சொன்னாள். எதுவும் எடுபடவில்லை.

தகவல் பலமட்டங்களுக்குப் பரிமாறப்பட்டு இலட்சியக்காதலை வெல்ல வைக்கும் பிரயத்தனம் பல பக்கத்தால் நிகழ்ந்தது. எல்லாம் தோற்று கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையை சிறையில் இருந்த அவளது காதலனுடன் ஒருவர் நிகழ்த்தினார். முடிவு சுபமாகுமென நம்பிய யாவரின் நம்பிக்கையும் தோல்வியானது.

அவளுக்குப் புதிய வெளிநாட்டு உறவுகள் உதவிகளாகக் கிடைத்தது. அவர்கள் பற்றி அவளது பழைய நட்புகளுக்குப் பெருமையாய்ச் சொன்னாள். ஆபத்தில் அவளுக்காக உதவியவர்களையெல்லாம் அவள் மறந்தாள் போலிருந்தது நிலமை. உதவுகிறவர்கள் அவளை வெளிநாடு எடுப்பார்கள் அவளுக்கான புதிய நல்வாழ்வைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவள் கனவு காணுகிறாள் என்பதனை மட்டும் புரிய முடிந்தது.

2011 இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் எல்லாம் அந்தச் செய்தி வந்தது. அது இலட்சியக்காதலனின் விடுதலைச் செய்தி. அந்தச் செய்தியை அவளது நட்புகள் பார்த்த போது உண்மையான காதல் தோற்காதென்று நம்பிக்கையை மீண்டும் வளர்த்தார்கள்.

2011வருட இறுதியாகிவிட்டது. இலட்சியக்காதலன் வெளியில் வந்து 5மாதங்கள் ஓடிவிட்டது. காதல் புதுப்பிக்கப்படவுமில்லை முடிவு சுபமாகவுமில்லை. மர்மமானது அந்தக்காதலர்களின் காதல்.

அண்மையில் அந்தக்காதலனின் ஊரவன் ஒருவன் சொன்னான். அவனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக. பெண்யாரெனத் தோழியொருத்தி கேட்டதற்கு அவன் சொன்ன பெயர் அவன் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிக் காத்திருந்த காதலியின் பெயரில்லை.

அப்ப அவேடை காதலின்ரை முடிவு முள்ளிவாய்க்கால் முடிவுதானென்றாள் தோழி. அந்த நண்பனுக்குப் புரியவில்லை.
என்னது ? முள்ளிவாய்க்கால் முடிவு ? முள்ளிவாய்க்காலில என்ன நடந்ததெண்டது ஆருக்கேன் தெரியுமோ ? இல்ல….அது அதுதான் இந்தக்காதலின்ரை முடிவு.

நான் கொஞ்சம் ரியூப்லைட் கொஞ்சம் விளக்கமாச் சொன்னால்….? என அவன் இழுத்தான். எட கேணைப்பயலே முள்ளிவாய்க்காலில அப்பிடி நடந்தது இப்பிடி நடந்தணெ்டு ஆளாளுக்கு அலசுறமெல்லோ ஆருக்காவது உண்மை தெரியுமோ ? தெரியாதெல்லோ ? முள்ளிவாய்க்கால் முடிவோடை சம்பந்தப்பட்டவையைத் தவிர மற்ற ஒரு குருவிக்கும் ஒரு நாசமும் தெரியாது. அதுமாதிரித்தான் நாங்கள் நம்பியிருந்த இந்த இலட்சிய காதல் சோடியைத் தவிர மற்ற ஒருதருக்கும் இலட்சியக்காதல் ஏன் தோற்றதெண்டது தெரியாது. அதுதான் சொன்னன் முள்ளிவாய்க்கால் முடிவு.

19.12.2011