Monday, September 24, 2012

போராளிகளுக்கான உதவிகளும் தொடர் குழப்பங்களும்.

23.09.2012 அன்று முகப்புத்தகத்தில் திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் (நோர்வே) அவர்களால் ஒரு முன்னாள் பெண் போராளியின் யுத்த முடிவின் பின்னரான அவரது நிலமையும் பற்றி எழுதப்பட்டிருந்தது. குறித்த பெண்போராளியின் புகைப்படமும் வந்திருந்தது.

அந்தப்பெண் பற்றிய விபரங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானது போலிருந்தது. அதுபற்றி சஞ்சயனுக்கு ஒரு மின்மடலிட்டேன். மின்மடலை வாசித்த சஞ்சயன் அவர்கள் உடனடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். அந்தப்பெண் பற்றிய மேலதிக விபரங்கள் கூறினால் தான் வெளியிட்டுள்ள பெண்போராளி பற்றி தகவல் தர முடியுமென்றார்.

நானும் அந்தப் பெண்ணின் பெயர் சதீஸ் ஜெயக்குமாரி (வேணுகா) மற்றும் அவரது நிலமை உதவி ஒழுங்குகள் பற்றியும் அவரது கணவரை நவம்  அறிவுக்கூடத்தில் சந்தித்திருக்கிறேன் போன்ற விபரங்களையும் தெரிவித்த போது எனது தரவுகள் சரியாக இருந்ததைக் உறுதிப்படுத்திய சஞ்சயன் அப்பெண்ணுக்கான உதவி பற்றியதும் அவரைச் சந்தித்தது பற்றிய தகவலையும் பரிமாறிக் கொண்டார்.

குறித்த பெண்போராளிக்கு ஏற்கனவே த.தே.ம.மு கயேந்திரன், மற்றும் வேறு சிலரும் உதவிகளை வழங்கியிருந்தனர். தொடர்ந்து மாதாந்த உதவியாக அல்லாமல் பெரியதொரு தொகையினை அவர்கள் வழங்கியிருந்தார்கள். அந்த உதவியிலிருந்து குறித்த பெண்போராளி தனக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொண்டார்.

2012 பெப்ரவரிக்குப் பின்னர் அவருக்கான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென்பதனை நமது தொடர்பாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு வேண்டியிருந்தார். ஆனால் வேறு உதவி அமைப்புகள் தன்னிடம் விபரங்கள் பெற்றதாகவும் மேலதிகமாக எதனையும் செய்யவில்லையென்று தெரிவித்துமிருந்தார்.

அவரது நிலமையின் தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் 02.04.2012 அன்று 58100,00 ரூபாய்களை உடனடி உதவியாகவும் வழங்கி மேமாதத்திலிருந்து மாதாந்தம் ஒரு உறவு மூலம் 8ஆயிரம் ரூபாய்களையும் இம்மாதம் வரை வழங்கிக் கொண்டு வருகிறோம்.

இத்தோடு இப்பெண்ணுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊனமுற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு 3ஆயிரம் ரூபாவும் மேலும் ஒரு உதவித்திட்டத்தின் மூலம் 500ரூபாவும் கிடைத்துக் கொண்டிருந்தது. எமது உதவியோடு மாதாந்தம் இப்பெண் 11500ரூபாய்களை மாதாந்த உதவியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இது ஒரு தாயும பிள்ளையும் பசியின்றி வாழப் போதுமானது.

இத்தோடு இப்பெண்ணுக்கான சிகிச்சைக்கு பிரத்தியேக வைத்தியர் ஒருவரிடம் போனால் தனது கை மீளவும் சரியாக இயங்க முடியுமென்று கோரியதன் அடிப்படையில் நேரடியாக யாரும் தொடர்பு கொள்ள முடியாத பணியில் உள்ள அந்த மருத்துவரை அவரது நெருங்கிய நட்பொன்றை அணுகி அவரைச் சந்திக்க மருத்துவம் பெறவும் ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

இத்தோடு தனது மருத்துவ தேவைக்காக ஒன்றரை லட்சரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். அந்தக் கடனையும் குறித்த உதவும் உறவு கட்ட முன்வந்ததோடு இப்பெண்ணுக்கு உதவிக்கு ஒருவரை வைத்து இவரை கவனிக்கவும் தன்னால் உதவ முடியுமென்ற தனது ஆதரவையும் அந்த உறவு வழங்க முன் வந்ததோடு எதிர்காலத்தில் அவருக்கான சுயதொழிலுக்கும் உதவுவதாக முன்வந்து தனது தற்போதைய மாதாந்த உதவியையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இந் நிலமையில் சஞ்சயனின் செய்தி வெளியாகியிருந்தது.

உதவி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவருக்கு இன்னொரு இடத்தாலும் உதவிக்கு விண்ணப்பித்து விளம்பரங்கள் வருவதனை உதவுகிற எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இச்செய்திகளானது உதவுகிறவர்களுக்கு பயனாளிகள் மீதான அவநம்பிக்கையையே தோற்றுவிக்கும்.

இத்தகைய இருபக்க அல்லது பலபக்க உதவிகள் ஒருவருக்கு செல்வதன் மூலம் உதவிகளை ஒருங்கிணைப்பவர்களுக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தரும். இத்தகைய சிக்கல்களில் பலமுறை நானும் மாட்டுப்பட்டுள்ளேன். இதனால் பல அரசியல் தலைவர்கள் முதல் பெரும்புள்ளிகள் வரை கோபித்து ஏதோ தங்களது பணிகளை இடையறுப்பதான தவறான புரிதல்களும் நிகழ்ந்துள்ளது. தவறாக  சஞ்சயன் புரிந்து கொண்டு என்னுடன் சண்டைக்கு வரமாட்டார் என்ற நம்பிக்கையிருக்கிறது. பொதுவாக பெற்ற அனுபவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

சஞ்சயனுடன் இதுபற்றி பேசிய பின்னர் ஜெயக்குமாரியிடம் விசாரித்த போது ஜெயக்குமாரியின் கருத்தும் கதைகளும் சஞ்சயனின் உதவிகோரலுக்கு மாறாகவே இருக்கிறது. தனக்கு 20ஆயிரம் ரூபா பணம் தந்துவிட்டு தன்னையொரு படம் எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகவும் தனக்கான உதவியை தொடர்ந்து செய்வதாக எவ்வித உத்தரவாதமும் தரவில்லையெனவும் அவரை சஞ்சயன் நேரில் சந்தித்த பின்னர் ஒருமுறைதானும் தன்னுடன் பேசவில்லையென்றும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். நேசக்கரம் தன்னை கைவிடாமல் தொடர்ந்த உதவியை ஏற்கனவே தருவதுபோல தருமாறும் கேட்டிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க இப்போராளி பற்றி சஞ்சயன் எழுதிய பின்னர் சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அவற்றில் வேறொரு உதவி அமைப்பின் தொடர்பாளர் ஒருவரும் மடலிட்டிருந்தார். தம்மிடமும் மேற்படி பெண்ணின் விபரம் உதவிகோரி வந்திருப்பதாக.

ஆயினும் குறித்த பெண்போராளிக்கான சஞ்சயனின் உதவிகோரல் முகப்புத்தகத்தில் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நேசக்கரம் தன்னுடன் இதுபற்றி தொடர்பு கொண்டு பேசியதாகவும் எழுதியுள்ள சஞ்சயன், எனினும் ஜெயக்குமாரிக்கு நிரந்தர வருமானத்தை கொடுக்கும் வழிவகையினை தாங்கள் ஆராய்வதாகவும் பின்னூட்டமிட்டுள்ளார்.

சஞ்சயனின் இம்முயற்சிக்கு 100பேர் விருப்பிட்டும் 112பேர் செய்தியை பகிர்ந்தும் இருக்கிறார்கள். கருத்தெழுதிய பெரும்பாலானோர் தங்களது உதவிகளை ஜெயக்குமாரிக்கு வழங்க முன் வந்திருக்கிறார்கள்.

ஜெயக்குமாரிக்கு உதவியை வழங்குகிற உறவுக்கு இத்தகவலைத் தெரிவித்தேன். குறித்த உறவு தனது உதவியை உதவியற்ற இன்னொரு குடும்பத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

சஞ்சயன் ஜெயக்குமாரிக்கு நிரந்தரமான வாழ்வாதார உதவியை வழங்க ஆலோசிப்பதன் மூலம் நிச்சயம் அவருக்கான நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

நேசக்கரம் அடுத்த மாதத்தோடு ஜெயக்குமாரிக்கான உதவியை நிறுத்துவதோடு அவருக்காக செய்ய முன்வந்த இதர உதவிகளையும் உதவி தேவைப்படுகிற வேறு போராளிகளுக்கு உதவுகிற உறவின் அனுமதியோடும் விருப்பத்தோடும் வழங்க முடிவெடுத்துள்ளது.

இச்செய்தியை பகிர்ந்த விருப்பளித்த செய்தியை மின்னஞ்சல்களில் பரப்பிய அனைவருக்கும் எமது முடிவினை இத்தால் அறியத்தருகிறேன்.

ஜெயக்குமாரி தொடர்பாக சஞ்சயன் எழுதிய பகிர்வும் படமும்  கீழே இணைக்கிறேன் :-
நண்பர்களே! இப்படத்தினை பகிர்வதன் மூலம் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞையை எம்மக்களிடமும், மக்களமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உருவாக்க உதவுங்கள்.

இவர் முன்னாள் போராளி. அவரின் ஒரு கை சிதைந்து, உருக்குலைந்து, எலும்புகளுக்கு பதிலாக தகடுகள் வைக்கப்பட்டு இயங்கமுடியாதிருக்கிறது.

மற்றைய கையினாலும், வாயினாலுமே தண்ணீர் அள்ளுகிறார். உடைமாற்றுதற்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. மூன்றரை வயதான மகனை பராமரிக்கவும் உதவி தேவைப்படுகிறது.

தனது சிதைந்துபோயிருக்கும் கை
யினை அகற்றாது காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு அறுவைச்சகிச்சைக்காக தனது கிராமத்தில, 20.000 ரூபாய் வட்டிக்கு எடுத்தார். மாதாந்த வட்டி 1200 ரூபாய் கொடுக்கிறார். அவருடைய மாதாந்த வருமானம் 2000 ரூபாய். அதுவும் நிரந்தரமில்லை. ஒரு மாதத்திற்கு 800 ரூபாயே அவர்களிடம் இருக்கிறது.

அறாவட்டிக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள்; போராட்டத்தின் பெயரால் சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்ட புலம்பெயர் அமைப்புக்களோடும், அதற்குப் பொறுப்பாக உட்கார்ந்திருக்கும் பெரு மைந்தர்களோடும் ஒப்பிடும் போது.
 

6 comments:

சஞ்சயன் said...

வணக்கம் சாந்தி ரமேஷ்!

நான் எவரையும் கோபித்துக்கொள்வதற்காக இந்தப்பதிலினை எழுதவில்லை. உங்கள் பதிவில் தொக்கிநிற்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், என் மீது ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை மேலும் அதிகரிக்காதிருப்பதற்காகவுமே இதை எழுதுகிறேன்.

பகுதி ஒன்று:



உங்கள் பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்:
”உதவி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவருக்கு இன்னொரு இடத்தாலும் உதவிக்கு விண்ணப்பித்து விளம்பரங்கள் வருவதனை உதவுகிற எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இச்செய்திகளானது உதவுகிறவர்களுக்கு பயனாளிகள் மீதான அவநம்பிக்கையையே தோற்றுவிக்கும்”


நாம் மேற்கொண்டு எனது பதிலினை பார்க்க முன்பு எனது முகப்புத்தகத்தில் நான் எழுதி இருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டுகிறேன். அது இவ்வாறு இருக்கிறது:

-----------------
நண்பர்களே! இப்படத்தினை பகிர்வதன் மூலம் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞையை எம்மக்களிடமும், மக்களமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உருவாக்க உதவுங்கள்.

இவர் முன்னாள் போராளி. அவரின் ஒரு கை சிதைந்து, உருக்குலைந்து, எலும்புகளுக்கு பதிலாக தகடுகள் வைக்கப்பட்டு இயங்கமுடியாதிருக்கிறது.

மற்றைய கையினாலும், வாயினாலுமே தண்ணீர் அள்ளுகிறார். உடைமாற்றுதற்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. மூன்றரை வயதான மகனை பராமரிக்கவும் உதவி தேவைப்படுகிறது.

தனது சிதைந்துபோயிருக்கும் கையினை அகற்றாது காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு அறுவைச்சகிச்சைக்காக தனது கிராமத்தில, 20.000 ரூபாய் வட்டிக்கு எடுத்தார். மாதாந்த வட்டி 1200 ரூபாய் கொடுக்கிறார். அவருடைய மாதாந்த வருமானம் 2000 ரூபாய். அதுவும் நிரந்தரமில்லை. ஒரு மாதத்திற்கு 800 ரூபாயே அவர்களிடம் இருக்கிறது.


அறாவட்டிக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள்; போராட்டத்தின் பெயரால் சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்ட புலம்பெயர் அமைப்புக்களோடும், அதற்குப் பொறுப்பாக உட்கார்ந்திருக்கும் பெரு மைந்தர்களோடும் ஒப்பிடும் போது.


மேற்கூறிய செய்தியில் நான் எங்காவது அப் பெண்ணுக்கு பொருளாதார உதவி தேவை என்று கோரியிருக்கிறேனா?

முன்னாள் போராளிகளின் வாழ்க்கை அவலங்களை பலரும் புரிந்துகொள்ளவேண்டும், அது பற்றி பலரும் பிரஞ்ஞை கொள்ளவேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தியிருந்தேன். அதுவே எனது நோக்கமும் ஆகும்.

தவிர, பலரும் அவருக்கு உதவி வழங்குவதற்கு விலாசம் மற்றும் வங்கிக் கணக்கு கேட்டபோதும் நான் அவர்களுக்கு எவ்வித தகவலையும் தரவில்லை. அதற்கான காரணத்தையும் அங்கு குறிப்பிட்டிருந்தேன்.

உங்களின் மின்னஞ்சல் வந்ததும் உங்களுடன் உடனே தொடர்புகொண்டு இது பற்றிப் உரையாடினேன். நாம் அவருக்கு செய்திருந்த உதவியையும் குறிப்பிட்டேன். எம் இருவருக்கும் நாமிருவரும் செய்திருந்த உதவியினை குறிப்பிட்ட அந்தப் பெண் மறைத்திருக்கிறார் என்பது அப்போது தெளிவானது.

எமது உரையாடலின் போது நான் அவரின் அந்தச் செயல் தவறானது என்றாலும் அவரின் உடல், உள மற்றும் சமூகநிலை ஆகியவ்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையினை நாம் நிறுத்தக்கூடாது என்றும். அவர் ஈடுவைத்திருப்பதாகக் கூறிய அவரின் காணியை மீட்க உங்கள் மூலமாக உதவி செய்வதாகக் கூறியவரின் உதவியையும் நிறுத்தாதீர்கள் என்னும் கேட்டிருந்தேன்.

உங்களுடன் உரையாட முன், நேற்று முன்தினம் அவருடன் உரையாடியபோதும் அவர் தனக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை என்றும் தனது காணியை மீட்டுத் தருமாறும் கேட்டார். இன்று எனது நண்பரிடம் நீங்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே உதவியதாகவும், தற்போது உதவுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

பதில் அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறது.

சஞ்சயன் said...

பகுதி இரண்டு:

நீங்கள் உங்களுக்கு அப் பெண், தனக்கு 20ஆயிரம் ரூபா பணம் தந்துவிட்டு தன்னையொரு படம் எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகவும் தனக்கான உதவியை தொடர்ந்து செய்வதாக எவ்வித உத்தரவாதமும் தரவில்லையெனவும் அவரை சஞ்சயன் நேரில் சந்தித்த பின்னர் ஒருமுறைதானும் தன்னுடன் பேசவில்லையென்றும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள்.


அதாவது நான் அந்தப் பெண்ணுக்கு கையில் 20.000ருபாய் கொடுத்திருக்கிறேன். பணம் கொடுத்தே படம் எடுக்கப்பட்டது என்னும் குற்றச்சாட்டுஅங்கு தொக்கிநிற்கிறது. (நீங்கள் இவை பற்றி என்னுடன் நேரடியாக உரையாடியிருப்பின் இதை நான் குற்றச்சாட்டாக கருதியிருக்கமாட்டேன்.)

நான் அப் பெண்ணிற்கு பணம் கொடுத்த பின்பே படத்தினை எடுத்திருக்கிறேன் என்று அப் பெண் உங்களுக்குக் கூறியிருக்கிறார்.

எனது கேள்வி என்னவெனில் நான் இப்படத்தை எடுத்த திகதி 02.09.2012 (ஆதாரபூர்வமாக நிருக்க முடியும்). எனவே நான் அப் பெண்ணின் கூற்றுப்படி அவருக்கு கொடுத்ததாகக் கூறப்பட்ட பணம் 02.09.2012 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் இல்லையா? தவிர அவர் கூற்றுப்படி நான் அவருடன் அன்றை தினத்தின் பின் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியாயின் 02.09.2012 க்கு பின்னான திகதியொன்றில், அவரின் வங்கிக்கு எனது நண்பர் ஏன் ரூபாய் 25.000,- வைப்பீடு செய்யவேண்டும்? அவருடன் தொடர்பு கொள்ளாதிருந்தால் நான் வைப்பீடு செய்து மறுநாளே அவர் கடனை அடைத்தது எப்படி? (இவற்றையும் வங்கிகளின் பற்றுச்சீட்டு மூலமாக என்னால் நிரூபிக்க முடியும்)

என்னுடன் முதல் நாள் உரையாடியது போன்று, அப்பெண்ணுடன் உரையாடிய பின், ஏன் உங்களால் இதை எழுதுவதற்கு முன்பு இச் செய்தியின் உண்மைத்தன்மையை என்னுடன் உரையாடி எனது கருத்தையும் உங்கள் பதிவில் எழுதமுடியாது போனது? காரணம் என்ன?

நான் அப் பெண்ணுடன் உரையாடிய பின் உங்களோடு உரையாடுவதற்காக என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று Skype, மின்னஞ்சல் முலமாக முயற்சிந்திருந்ததையும் என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும்.

நான் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பலமுறையும், நேற்றுக்காலை 09:48 மணிக்கும், இன்று காலையும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். உங்கள் பதிவினை நீங்கள் 24ம் திகதி வெளியிட்டிருக்கிறீர்கள். அதாவது நீங்கள் இணையத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் எனது மின்னஞ்சல்களை பார்க்காது இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதுவரை (25.09.2012 மதியம் 13:00 மணி) நீங்கள் என்னுடன் எதுவித தொடர்பிலும் இல்லாதிருப்பதன் காரணம் என்ன?

உங்கள் பதிவினை நான் முன்றாம் நபர் ஒருவரினூடாகவே அறியக்கிடைத்தது. உங்களின் பதிவின் இணைப்பை ஏன் உங்களால் எனது முகப்புத்தத்தில் எனது பதிவின் கீழ் இடமுடியாதுபோனது?

உங்கள் பதிவினை மட்டும் வாசிப்வர்களுக்கு என்மீதான ஒரு தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த இது வழிசெய்திருக்கிறது என்ப‌தை உங்களால் உணர முடிகிறதா?

முகமறியாத ஒரு நண்பரின் உதவியினாலேயே உங்கள் பதிவினை நான அறிந்து என்நிலைவிளக்கத்தினை தரமுடிந்திருக்கிறது. உங்கள் பதிவினைப் பற்றி என்னுடன் தொடர்பில் இருந்த உங்களால் ஏன் அறிவிக்கமுடியாது போனது?


பதில் கீழே தொடர்கிறது..


பகுதி மூன்று:

உங்கள் பதிவு சில தொக்கிநிற்கும் கேள்விகளையும் இணைய வாசகர்களுக்கு முன்வைக்கிறது. அவை என் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அதனாலேயே இந்த நீண்ட பதிலை எழுதவேண்டியிந்தது.

எனது பதிலை உங்களது பதிவிற்கு பின்னூட்டமாகவும், உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலிலும் இணைத்திருக்கிறேன்.



நன்றி

நட்புடன்
சஞ்சயன்

http://visaran.blogspot.com

சாந்தி நேசக்கரம் said...

திரு.சஞ்சயனுக்கு,

உங்கள் முகப்புத்தகத்தில் நீங்கள் இணைத்த பதிவின் கீழ் எனது கருத்தை இரவு இணைக்க என்னால் முடியாது போனது. ஒரு நீண்ட கருத்தை அப்படியே பிரதியிடும் வகை தெரியாதிருந்தது. பலமுறை முயற்சித்துப் பார்த்த பின்னரே தனியாக பதிவிட்டேன்.

நீங்கள் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞை கொள்ள வேண்டுமென்ற உங்களது சிந்தனை மீதோ அல்லது எண்ணம் மீதோ எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அது உங்களது உரிமை. பிரக்ஞையை ஏற்படுத்துதற்கும் உதவி கோரலுக்கும் உதவி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சாந்தி நேசக்கரம் said...

மேற்கருத்தின் தொடர்:-

மன்னிக்கவும் உங்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எவ்வித நோக்கமும் என்னிடம் இல்லை. எனக்கு உங்களை தனிப்பட தெரியாது. துமிழ்மணம் மூலம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கிற ஒரு வாசகி மட்டுமே.

ஆக உங்களை குற்றவாளியாக்கும் எவ்வித உள்நோக்கமும் என்னிடம் இல்லை.

மற்றும் உங்களுடன் பேசிய உங்களுக்கு நான் எழுதிய மின்மடல் நீங்கள் எனக்கு எழுதிய 2வரி மின்மடல்கள் யாவும் என்னிடமும் பதிவில் உள்ளது. தேவையேற்படின் என்னாலும் அவற்றை உங்களுக்கு தந்து உதவ முடியும்.

குறித்த பெண்பற்றி உங்களுடன் பேசிய பின்னர் நானும் அதுபற்றிய எவ்வித கருத்தும் எழுதவில்லை.

ஆனால் உங்கள் முகப்புத்தக இணைப்பில் அந்தச் செய்தி தொடர்பான கருத்துக்கள் பகிர்வுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அதில் நீங்களும் நான் பேசிய விடயம் பற்றியோ அல்லது அந்த விடயம் தொடர்பான எவ்வித பதிலையும் போடவுமில்லை.

தேவைப்படின் யெயக்குமாரிக்கு பணம் அனுப்பிய வங்கி ரசீதுகளையும் தருவதாகவும் சொல்லியிருந்தேன்.

எனது மடல் பற்றி அல்லது உங்களுடன் பேசியது பற்றி தெளிவான ஒரு பதிலையும் நீங்கள் போடவில்லை. ஏன்....? பட்டும் படாமலுமான பதிலே எழுதியிருந்தீர்கள். இதிலிருந்து நீங்கள் எழுதிய அதாவது பிரக்ஞை ஏற்படுத்த விரும்பிய விடயத்தில் நிகழ்ந்த கவனயீனத்தை கவனிக்காதது போல இருந்தீர்கள்.

குறித்த பெண்ணுக்கான உதவி தொடர்பில் பல்வேறு மின்னஞ்சல்கள் தனிமடல்கள் வந்து கொண்டிருந்தன. ஏற்கனவே அவர்சார்ந்த அவருடன் ஒன்றாயிருந்த பலருக்காக செய்யப்பட்டுக் கொண்டிருந்த உதவிகளையும் இடையூறு செய்வதாக அமைந்தது.

உதவிக்கொண்டிருக்கிற சிலர் உங்கள் செய்தியின் படத்தை பார்த்துவிட்டு யெயக்குமாரியுடன் தொடர்பில் உள்ள மற்றைய சிலர் மீதும் சந்தேகங்களை முன்வைத்தனர். பொய் சொல்லி இவர்கள் எங்கும் உதவிகளை பெறுவதாகவும் குற்றம் சுமத்தி உரிய குடும்பங்களுடனும் முரண்படத் தொடங்கினர்.

சாந்தி நேசக்கரம் said...

ஓரு யெயக்குமாரியின் படம் மேலும் 10பேரின் வாழ்வாதார நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்கிய போது மௌனமாக எனக்குச் சம்பந்தமில்லையென்று இருக்க முடியவில்லை.

உங்கள் செய்தி குறித்த பெண்ணின் தொடர்பில் இருந்த அவரை 10வருடம் முன்னர் பார்த்தவர்கள் முதல் எல்லோருக்கும் அவரை யாரென இனங்காட்டியது. ஆனால் அவரை நீங்கள் படம் பிடித்த போது அதனை வெளியிடலாமா என்று கேட்டீங்களா ? இல்லை.

பிரக்ஞையை ஏற்படுத்த முனைந்த நீங்கள் ஏன் ஒருவரின் படத்தை பொதுத்தளத்தில் போடுவதனால் ஏற்படுகிற அசௌகரியத்தை அந்தப் பெண்ணுக்கு தொடரவிருக்கும் சிக்கல்களை அறியவில்லை ?

நீங்களே நேரில் பார்த்த இடங்களின் நடைமுறைகளை நேரில் அறிந்து வந்தவர்.

ஆனால் நீங்கள் யெயக்குமாரியுடன் அதாவது ஊரில் சந்தித்து திரும்பிய பின்னர் ஒருமுறையும் பேசவில்லை. உங்கள் நண்பர் என அறிமுகமானவரும் தன்னை இனங்காட்டாமலெயே பேசிக்கொண்டிருக்கிறார். நான் உங்களுடன் பேசிய பின்னர் தான் நீங்கள் யெயக்குமாரியிடம் பேசியிருக்கிறீர்கள். இன்றுவரையும் உங்கள் நண்பர் தான் யெயக்குமாரியுடன் கதைத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் நண்பரின் கதைகள் அந்தப் பெண்ணின் வாழ்வதாரத்தையும் வாழிட பாதுகாப்பையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

நீங்கள் எங்கேயும் பொருளாதார உதவி கேட்டுள்ளதாக நான் எங்கும் குறிப்பிடவில்லை.

உங்களது பதிவில் பலர் உதவ முன் வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களது உதவிகள் குறித்த பெண்ணுக்கு செய்யுங்கள் நாம் அவருக்கான உதவியை இன்னொரு குடும்பத்திற்கு செய்கிறோம் என்றுதானே குறிப்பிட்டுள்ளேன்.

கவனிக்க :-

நீங்கள் பணம் கொடுத்து படம் எடுத்தீர்களோ இல்லையா என்றெல்லாம் நான் குற்றம் சுமத்தவில்லை. நீங்கள் படம் எடுத்த போது யார் நின்றார்கள் எப்படி படம் எடுத்தீர்கள் என்ற எவ்வித விபரமும் எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்த இடத்தில் நானும் நிற்கவில்லை.

யெயக்குமாரி சொன்னவற்றையே அப்படியே என் பதிலிலும் பதிவு செய்துள்ளேன். உங்கள் படம் தொடர்பான மற்றும் உதவி தொடர்பான விளக்கங்களை பெற வேண்டியது யெயக்குமாரியிடமிருந்தே.

மற்றும் நீங்கள் அவருக்கு கொடுத்த பணம் எவ்வளவு எந்தத் திகதி என்ற எதுவுமே எனக்கு தெரியாது. அந்தப்பெண்ணிடம் தான் உங்கள் பணவிபரம் வங்கிவிபரம் ஆதாரங்களை கேட்க வேண்டும்.

உங்களுடன் பேசியது பற்றி நான் விளக்கமாக எழுதவில்லையென்று குறைப்பட்டுள்ளீர்கள். நீங்கள் நான் இவ்விடயம் பற்றி கதைத்த விடயங்கள் எதனையும் குறிப்பிட்டு எழுதாமல் மொட்டையாக உங்கள் பிரக்ஞையிலேயே கவனமாக இருந்தமைக்கு நான் எதுவும் செய்ய முடியாது.

மற்றும் நானும் உங்களைப்போல வேலை வீடு குடும்பம் அதற்கப்பால் அம்மா குடும்பத்தலைவியென பொறுப்புகளோடு தான் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தல் அவரச வேண்டுகோள்களுக்கு உதவுதல் போன்றவற்றையும் செய்கிறேன். உங்களைப்போல எனக்கும் 24மணித்தியாலம் தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக பேச வேண்டுமென்றவுடன் நான் வேலையை விட்டுவிட்டு உடனடியாக ஓடிவர முடியாது.

பிற்குறிப்பு :-

யுத்தம் முடிந்து 3வருடங்களின் பின்னாலும் எனக்காகவும் உங்களுக்காகவும் போராடியவர்களை அவர்களது வாழ்வை நிமிர்த்திவிட மறந்த பிரக்ஞை அடையாத எங்கள் மரமண்டைகளுக்கு எத்தனைதான் படம்காட்டினாலும் புரியாது.

சில நாளாவது அந்தப் போராளிகளுடன் வாழ்ந்து அவர்களது குடிசைகளின் கீழ் படுத்து , அவர்கள் குடிக்கிற மண் தண்ணீரையும் வெறும் சோற்றையம் உண்டு அனுபவித்தால் மட்டுமே இந்த முன்னாள் போராளிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் பதில் கண்டு எனது பதில்கள் தொடரும்.

நன்றி
சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

திரு.சஞ்சயன், நீங்கள் உதவியற்று வறுமையில் வாடுவதாக பதிவிட்டுள்ள மேலும் சிலர் உதவிகள் பெற்று கடை விவசாயம் என் முன்னேறியிருக்கிறார்கள். அவர்களையும் படம்காட்டியிருக்கிறீங்கள். நீங்கள் படம்காட்டில ஒருவரின் பிள்ளையை ஆங்கில பாடசாலையில் படிக்கவும் வழிசெய்து கொடுத்துள்ளோம். அதற்கான உதவியை ஒரு சகோதரி கடந்த 2வருடங்களாக செய்து வருகிறார். உங்கள் படம்காட்டலை இன்னும் அவா கவனிக்கேல்ல கவனிச்ச பிறகுதான் இனி ஆளாளுக்கு வரிசைகட்டி கேள்வி கேட்க வரப்போகினம். உண்மையிலே உங்கள் நோக்கம் தெளிவூட்டலா அல்லது கிடைத்த சோற்றை தட்டி விழுத்தும் செயலா ?

நன்றி
சாந்தி