Monday, December 10, 2012

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"

இவன் தனது சிறு வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.

இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.

2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.

பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.

காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.

ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.

வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.

வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.

இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.

எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?

No comments: