Tuesday, December 10, 2013

பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான்

இன்பசோதி'
பெயரோடு இணைந்த சோதிபோல்
நீயும் ஒளிபொருந்தியவன்.

காற்றிலேறிக் கைவீசிச் செல்லும்
வண்ணத்துப் பூச்சியாய்
உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில்
நீயொரு ராசகுமாரன்.

காலம் உனக்காய்
கட்டியெழுப்பிய கோட்டையில்
நீயே கடவுளாய்
காலவிதியின் கதையாய்....!

நிலவாய் நீல வானமாய்
நீயுருவாக்கிய காலத்தின் கோலம்
உனது எண்ணங்கள் போல
வர்ணங்களாய்.....!

காலச்சக்கரம்
மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி
உனது வர்ணங்களாலான உலகை
இரத்தச் சிவப்பாக்கிய போது
நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி
தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....!

ஊரான் உனது பெயர் போலவே
ஊரைக்கவர்ந்த புலிவீரன்  நீ.
உன் போல உருவாக
உன்போல உடையுடுக்க
உன்போல வாகனமோட
உன் போல் வாழ ஆசைப்பட்ட
உன் சக தோழர்களின் கனவு நாயகன் நீ.

கண்களில் சூரியப்பெருநதி
என்றென்றும் கருணையை மட்டுமே
சுமந்த ஈரநிலம் உன்னிதயம்.
ஆதனால் தானே எல்லோரையும்
உன்னை நேசிக்க வைத்த
வித்தியாசமானவன் நீ.

உன் ஆற்றலும் ஆழுமையும்
உன்னை வித்தியாசப்படுத்தியது
அதனால் தானே
வித்தியாசமான வேங்கையாய் - நீ
புலியாய் புலனாய்வாளனாய்
சக போராளிகளுக்கெல்லாம் ஆசானாய்
அறிவியல் ஞானியாய் நீயொரு அவதாரம்.

முல்லைமண் கொள்ளையிட்ட பகைவர்கள்
முகாம் மீது தீமூட்ட நீயும் தீயாகி
வந்த பகைவிரட்டிச் சமராடி
அளம்பில் மணல்வெளியில்
ஆகுதியாய் போனாய்.

கனபுரம் துயிலிடத்தில்
ஓய்வெடுத்துறங்கிய வேங்கையே....!
சொல்வதற்கு உன் சாதனைகள்
பெருமை கொள்ளும் செயல் வீரன் நீ.

ஆண்டுகள் பல சென்று - நீ
அமைதியாய் போனாலும்
ஆறாது அலையும் அலகைளின்
ஓசையாய் ஒலியாய்
என்றுமே வாழ்வாய்
கப்டன் ஊரானாய் கௌதமனாய்
காலமுள்ள வரையும் உன் சாதனைகள்
வாழந்து கொண்டேயிருக்கும்.

- சாந்தி நேசக்கரம் - Email :- rameshsanthi@gmail.com

Friday, December 6, 2013

ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா !


நிறவெறிக்கெதிராய்
நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
காலம் ஆபிரிக்க இருளகல
கைபிடித்தேற்றிய பேரொளி.

இருள் கொன்று ஆபிரிக்கர்
ஓளிகொண்டெழ உதித்த
மூத்தவன் மண்டேலா.
இனவிடுதலையை
உயிராய் கொண்டதால் - நீ
இருபத்தேழு வருடங்கள்
இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
வெளியில் வந்த போது நீயே
உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.

போராடும் தேசங்களின்
வழிகாட்டியாய்
ஒளியூட்டிய இரும்பு.
இறந்து போனாயாம்
இன்றைய செய்திகள்
உன்னையே நினைவில்
உடுத்திக் கொள்கிறது.

தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
உன்னையும் சொல்லியே
உருவாக்கினான் தமிழனை
தமிழீழ விடுதலைப்போரை
வரலாறாக்கினான்.

உனக்கு நிகராய் உனக்கு நேராய்
வாழ்ந்த எங்கள் தலைவனை
உன்னில் காண்கிறோம்
உலகில் வாழ்கிறோம்.
என்றோ நாங்களும்
இவ்வுலகை வெல்லுவோம்.

உண்மையின் குறியீடே
உலகின் ஒப்பிலா வீரனே
இருள் அகற்றிய ஒளியே
 போய் வருக
போராடும் பூமியெங்கும்
போராடியவர்கள் யாவரின் சார்பாய்
உனக்கெங்கள் வீரவணக்கம்.

ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
உறங்கினாலும் ஓயாத வேகம்
கல்லறைக்குள்ளிருந்தும்
படைநடத்தும் அவன் வாழ்வு.
நீயும் காலமெல்லாம்
படை(கை) வெல்லும் வீரனாய்
இந்தப் பாருள்ளவரை
படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
போய் வருக மண்டேலா
உலகின் போர் விதியை வென்றவனே
போய் வருக.

06.12.2013
சாந்தி நேசக்கரம்

Friday, November 29, 2013

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர்


ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ?

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

வீட்டிலும் உறவுகளாலும் தம்பியென்றும் இமையாளன் என்றும் அழைக்கப்பட்ட இன்பசோதி நகைச்சுவையோடும் நட்போடும் எல்லோரது அன்பையும் பெற்றிருந்தான்.

குடும்பத்தில் செல்லப்பிள்ளையான அவனுக்கு சின்ன வயதில் இறைச்சி , மரக்கறி உணவுகள் பிடிக்காது. அவனது தந்தையார் அடைக்கலம் ஐயா தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட தமிழ்த்தேசியவாதி.

தனது மகனை மரக்கறி , இறைச்சி வகைகளைச் சாப்பிட வைப்பதற்கு அடிக்கடி சொல்லுவார். இவற்றையெல்லாம் நீ சாப்பிட்டால் தான் பலமுடையவனாவாய். உனது தாயகத்திற்காக போராட உனக்குப் பலம் கிடைக்கும். அப்போதுதான் நீ தமிழீழத் தாயகத்திற்காகப் போராட முடியும்.
அவன் சாப்பிட மறுத்த இறைச்சி ,மரக்கறி உணவை அவன் சாப்பிடத் தொடங்கியதே பலமுள்ளவனாகி தமிழீழ தேசத்துக்காகப் போராடுவேன் என்ற வைராக்கியத்தோடுதான் வளர்ந்தான். 

அப்பா சொன்னது போலவே அவன் பலமுள்ளவனாக வளர்ந்து ஒரு நாள் தமிழீழ தாயகத்திற்காகவே தனதுயிரையும் தருவானென்று அன்று யாரும் அறிந்திருக்கவேயில்லை.

வீட்டின் செல்லப்பிள்ளையை ஊரின் மதிப்புக்குரிய பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது. அவன் அப்படித்தான் வாழ்ந்தான் வரலாறாகினான். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணிதமேதையை அவனது குடும்பம் எதிர்பார்த்திருந்தது. அதே கனவோடுதான் யாழ் சென் பற்றிக்ஸ்சின் மாணவனாகினான்.

படிப்பில் திறமையான மாணவனான இன்பசோதி சென் பற்றிக்ஸ் கிறிக்கெற் விளையாட்டு அணியின் சிறப்பு வீரனாகவும் திகழ்ந்தான் என்பதை அந்தப்பாடசாலை தனது வெற்றிக் கிண்ணங்களில் நிச்சயம் நினைவு கொள்ளும்.

இடது கைப்பந்து வீச்சாளனான இன்பசோதியின் வேகப்பந்து வீச்சில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தை நடுவர்களே அசந்து போகும் வண்ணம் அவனது பந்துவீச்சும் வேகமும் ஆச்சரியப்படவைக்கும். இன்பசோதி களமிறங்கினால் வெற்றியை அவனது அணியே வென்று செல்லும். அவ்வளவு திறமையான கிறிக்கெட் விளையாட்டுக்காரன்.

வெடியோசைகளும் மரணங்களும் யாழ்மண்ணின் அமைதியைக் கலை(ரை)த்துச் சாவோலம் நிரம்பிய காலமது. சாதரணதரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்துறையைத் தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்த இன்பசோதியை அவனது அமைதியைக் கொன்றது யுத்தம்.

வாழ்வதற்கான சுதந்திர தேசம் இல்லாத வரை உயர்கல்வி கற்றும் தன்னால் நிம்மதியைப் பெற முடியாதென்ற உண்மையை உணர்ந்தான். துடினமும் அதே நேரம் கண்டிப்பும் மிக்கவனைக் காலம் அழைத்தது களம் நோக்கி.

சென்பற்றிக்ஸ் கல்லூரியிலிருந்து தாயகப்போரில் தங்களை இணைத்து தாயகம் மீட்கவெனப் புறப்பட்ட 30மாணவர்களில் இன்பசோதியும் ஒருவனாக 1991இல் விடுதலைப்புலியாக இணைந்தான். எதிர்காலம் பெறவிருந்த 30 கல்விமான்களை அடக்குமுறையாளர்கள் ஆயுதம் தரிக்கக் காரணமாகினார்கள். ஒவ்வொரு போராளியின் உருவாக்கத்தின் பின்னும் ஓராயிரம் கதைகளும் துயர்களும் இருக்கும். அந்தத் துயர்களும் கதைகளுமே அவர்களை விடுதலைப்போரில் வீச்சோடும் வீரியத்தோடும் வீழும் வரையும் வாழ வைத்தது வரலாறு.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு 3 இன்பசோதியையும் உள்வாங்கியது. இன்பசோதி ஊரான் அல்லது கௌதமன் என்ற பெயரோடு பயிற்சியை நிறைவேற்றி வரிச்சீருடை தரித்த புலியாகினான்.

தோற்றத்தில் கடுமையும் , பார்வையில் கடமையும் அந்தக் கண்ணில் இருந்த கர்வமும் ஒரு சிறந்த இராணுவ வீரனை எங்களுக்குத் தந்தது. ஊரான் என்ற இளம்புலிவீரனை சிறந்த ஆற்றலாளனை கடமையை மட்டுமே கவனத்தில் நிறைத்து ஈழக்கனவை இதயத்தில் சுமந்து திரிந்த எரிமலையை விடுதலைப்புலிகள் அமைப்பின் வேர்களில் ஒருவனாக ஊரானும் இருந்தான் என்றால் அது பெருமையே.

பயிற்சி முடித்து வெளியில் வந்த ஊரான் சண்டைக்களத்திற்கே செல்லும் கனவோடு வந்தான். ஆயினும் அவனது ஆற்றல் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் வல்லமை பொருந்தியது என்பதனை உணர்ந்தவர்களால் 1992இல் தோற்றம் பெற்ற வெளியக பாதுகாப்பணியின் முதலாவது அணியின் சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 30பேரில் ஊரானும் இணைக்கப்பட்டான்.

களத்தில் சென்று நேரடிச்சமராடும் போருக்கு நிகராக சவாலாக இருந்த பாதுகாப்பணியின் தேவையும் விரிவாக்கமும் உணரப்பட்ட பொது ஊரான் மிகவும் சாதுரியம் மிக்க போராளியாக பாதுகாப்பணியின் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டான்.

1993 – 1994 காலப்பகுதி விடுதலைப் போராட்ட காலத்தில் சவால்களையும் சதியையும் சந்தித்த காலப்பகுதிகளில் மறக்கப்படாத வடுக்களால் நிறைந்த காலம். அக்காலத்தில் ஊரானின் பங்கும் திறமையும் வெளிப்பட்ட விதம் தலைவராலேயே கௌரவம் பெற்றது.

அக்காலப்பகுதியில் தளபதிகளான சொர்ணம் , பொட்டு அம்மான் போன்றவர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஊரான் என்பது அவனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த வெற்றிதான். மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக்காலத்தில் ஊரானின் புத்திசாலித்தனமான செயற்பாடு வெற்றிகளை அவதானித்த தலைவர் 1995இல் வெளியகப் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக ஊரானை நியமித்தார்.

ஓவ்வொரு விடுதலைப்புலி வீரனுக்கும் உரிய வித்தியாசமான ஆற்றல்களில் ஊரானின் ஆற்றல் புலனாய்வுத்துறையில் மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாகவும் அமைந்திருந்தது. இயல்பிலே அமைதியான போராளி. அது வீட்டிலிருந்து வரும் போதே கூட வந்த இயல்பு. தோற்றத்தில் கம்பீரமும் பார்வையில் கூட அவனொரு புரியாத புதிர். ஆனால் அவனை நெருங்கி அவனோடு பழகியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஈரநெஞ்சுக்காரன்.

'கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் விழிகளில் நீர் வழிவதுமுண்டு'' என்பது பாடல் வரியொன்று. ஆனால் ஊரான் என்ற கடுமையான மனிதனுக்குள்ளும் ஈரமும் வீரமும் அந்தக் கண்களில் சுரந்த கருணையும் அவனோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வித்தியாசமான போராளி.

இவனின் நடையை,மோட்டார் சைக்கிள் ஓடும் திறனை ,உடை அழகைப் பார்த்து அவனைப் போல இருக்க ஆசைபட்டவர்கள் பலர். எல்லோரையும் தனது பார்வையால் கட்டிப் போடுகிற ஆளுமையால் வெல்லுகிற வல்லமையைப் பெற்றிருந்த ஒரு இரும்பு அவனென்றால் அது மிகையில்லை.

சிறந்த கிறிக்கெட் வீரனான அவன் மீளவும் கிறிக்கெட் விளையாட விரும்பினான். அவனது ஆசைக்குத் தடையின்றி அவனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிக்கெட் போட்டிக்கு அனுப்பியது. இடது கைப்பந்து வீச்சாளன் இன்பசோதி ஊரானாகி கிறிக்கெட் போட்டியில் பங்கெடுத்து பள்ளிக்காலத்து மாணவனாகி அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றியைத் தனதாக்கினான்.

அவன் பங்கேற்று விளையாடிய அணியே அந்தப் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற நாயகனாக வந்தான். அப்போது யாழ் மண்ணில் வெளியாகிய பத்திரிகைகளை ஊரான் நிறைத்திருந்தான். அவனது வெற்றிச் செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள் பெருமையடைந்தன. அந்தப் புலியின் விளையாட்டு வீரத்தை யாழ் மண்ணெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன பத்திரிகைகள்.
கிறிக்கெட் மட்டுமன்றி சதுரங்க விளையாட்டிலும் சாதனை படைத்தவன். போராளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளின் வெற்றி நாயகனாகவும் வலம் வந்தான்.

தான் பொறுப்பு வகித்த துறையில் பணியாற்றிய போராளிகள் விடுமுறையில் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களைத் தானே வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவது வளமை. ஒவ்வொரு போராளியுடனும் சென்று அவனது வீட்டு நிலமைகளை அவதானித்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தி சக போராளிகளிடத்தில் நீங்கா அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட போராளி.

எத்தனையோ சிறந்த போர்வீரர்களை உருவாக்கி சிறந்த புலனாய்வாளர்களை உருவாக்கி படையணிகளுக்குப் பணிக்கு அனுப்பிய ஊரானின் மனவுறுதியை அந்த இரும்பு நெஞ்சை உறைய வைத்து உருக வைத்த சம்பவம் அவனைக் களம் போகத் தூண்டுகோலானது.

சென்பற்றிக்ஸ்சிலிருந்து போராளிகளாக வந்த அவனது நண்பர்களில் அவனது ஆத்ம நண்பனான உதயச்சந்திரன் அல்லது கண்ணாடியின் வீரச்சாவு அவனையும் களம் சென்று எதிரியை வீழ்த்த வேண்டுமென்ற ஓர்மத்தை விதைத்தது.

1995ல் திருகோணமலை பன்குளம் இராணுவ மினிமுகாம் மீதான தாக்குதலில் களமாடி தனது இன்னுயிரை ஈகம் தந்து வீரச்சாவடைந்த மேஜர் உதயச்சந்திரனின் மரணம் ஊரானை உறங்க விடாமல் அலைத்தது. தன்னிடம் வழங்கப்பட்டிருந்த வெளியகப்பாதுகாப்பணியின் பொறுப்பை விட்டு சண்டைக்குச் செல்லப் போவதாக மேலிடத்திற்கு தொல்லைகொடுத்துக் கொண்டிருந்து ஒருநாள் தனது ஆசையை நிறைவேற்றும் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.

பாதுகாப்பணியின் பொறுப்பு ரட்ணம் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டு ஊரான் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் அணியில் இணைக்கப்பட்டான்.
யாழ்மண் புலிகளிடமிருந்து அரசபடைகளிடம் போனதோடு புலிகளின் பலமெல்லாம் போய்விட்டதென சந்திரிகா அரசும் ராணுவத் தளபதி ரத்வத்தையும் புலம்பித் திரிந்த காலமது. 

முல்லைத்தீவில் முகாமிட்டு கடல் பாதைக்கும் பெரும் சவாலாக இருந்த முல்லைத்தீவு முகாமின் அழிவில் புலிகளின் வீரம் மீண்டுமொருமுறை உணர்த்தப்பட வேண்டிய காலத்தை சந்திரிகா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.தமிழர்களும் போராட்டம் மீது சற்று அவநம்பிக்கையில் யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என மனச்சோர்வடைந்த காலமது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகள் பூனகரி படைத்தளத்தையண்டிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சிகளில் இணைந்திருந்த போராளிகளால் கூட அந்தப் பயிற்சியானது எந்த முகாமுக்கான தாக்குதலாக அமையப்போகிறதென்பது தெரியாமல் கடும் பயிற்சி ஆரம்பித்திருந்தது. அந்தப் பயிற்சிகளில் ஊரானும் இணைந்து முல்லைத்தீவு மீட்புச் சமருக்கு தயாராகினான்.

தொடர் பயிற்சி உறக்கம் மறந்து உண்ண மறந்து மண்ணை மீட்கும் போருக்கான பயிற்சியில் கலகலப்பும் காலத்தின் கட்டளையை ஒவ்வொரு போராளியும் நெஞ்சில் தாங்கியபடி பொறுமையோடும் கவனத்தோடும் பயிற்சியில் நின்றார்கள். கடுமையான பயிற்சி இலகுவான சண்டைக்கான சிறப்பு. ஒவ்வொரு போராளியின் கடுமையான பயிற்சியும் பெருமைமிகு வெற்றியைப் படைக்கும் பேராயுதமாகியிருந்தது.

ஓயாத அலைகள் 1 முல்லைத்தீவை மீட்கும் முனைப்போடு அதிகாலை இருளோடு அணிகள் நகர்த்தப்பட்டது. வெற்றி பெற்ற மிதப்பில் கனவோடிருந்த சந்திரிகா அரசு திகைத்துப் போனது. புலிகளால் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் மூர்க்கமான தாக்குதலில் முல்லைத்தீவு படைமுகாமிலிருந்த படைகள் வழங்கல் , விநியோகம் , தொடர்புகள் யாவும் அறுபட்டு செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தாக்குதல் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல திருகோணமலையிலிருந்து டோறா விசைப்படகுகள் முல்லைத்தீவு நோக்கி விரைந்தன. கடலில் வந்த பகைவனைக் கடற்புலிகள் மறித்துச் சமரில் ஈடுபட்டனர். கடற்சமருக்கு நிகராக தரையிலும் புலிகளணி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கடலில் விநியோகத்திற்கென வந்த ரணவிரு என்ற போர்க்கப்பல் கடற்கரும்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. வான்வழியாய் படையினரை தரையிறக்க முயன்று வான் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கந்தக வாசனையால் முல்லைமண் நிரம்பியது.

முல்லைத்தீவில் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளான படைகளைக் காக்கவும் படைத்தளத்தைக் காப்பாற்றவும் அரசபடைகளால் அவசரமாகத் தரையிறக்கமொன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் தளத்திற்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ள அளம்பில் கடல் வழியால் பெருமெடுப்பிலான தரையிறக்கத்தை மேற்கொண்டது இலங்கை அரசபடைகள்.

அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத் தரையிறக்கத்திற்கு திரிவிட பகர எனப்பெயர் சூட்டப்பட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெட்டைவெளியும் எவ்வித காப்பு வசதிகளும் இல்லாத அளம்பில் பகுதியில் சண்டையணிகளை இறக்கி சமரை நடாத்தினர் புலிகள்.

இப்பகுதியில் சமரிட்ட புலிகளின் படையணிகளுடன் தளபதி கேணல்.ராஜேஸ் தலைமையில் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்கு கொண்டது. தளபதி.கேணல்.ராஜேஸ் 2009ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆனந்தபுரம் சமரில் வீரகாவியமானார்.

தளபதி கேணல் ராஜேஸ் அவர்களது பொறுப்பிலான ஒரு பிளாட்டுனுக்கான அணிப்பொறுப்பாளனாக ஊரானும் ஊரானின் அணியும் தாக்குதலில் இறங்கியது. அளம்பில் பகுதியில் முழுமையான வலுவையும் பிரயோகித்தது அரசு. அளம்பிலில் மறிப்புச்சமரை மேற்கொண்ட புலிவீரர்களின் சமரையும் வெல்ல முடியாது தோற்றது படைகள்.

புலிகளின் அகோர தாக்குதலில் இலங்கையரச படைகள் அடைய நினைத்த வெற்றியும் அவர்களது கனவும் சிதைந்து போக இறுதியில் புலிகள் வென்றார்கள். முல்லைத்தீவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவ முகாமும் இராணுவப்படைகளும் அழிக்கப்பட்டு 3நாட்களில் முல்லைத்தீவு முகாம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்து முல்லைத்தீவு மண் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

புலிகளின் வரலாற்றில் முதல் முதலாக இருபெரும் ஆட்லறிகளையும் பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லைச்சமர் முடிந்தது. அந்த வெற்றிக்கு வித்தாக 400வரையிலான போராளிகள் தங்கள் இன்னுயிர்களை விதைத்து விழிமூடிப்போயினர்.

அந்த 400 வரையானவர்களில் ஒரு வீரனாக கப்டன் எனும் பதவிநிலையோடு ஊரான் அல்லது கௌதமனும் விழிமூடி மாவீரனாய் சந்தனப்பேழையில் நீட்டி நிமிர்ந்து உறங்கிப் போனான்.

சமருக்குச் செல்கின்ற வீரர்கள் யாவரும் சாகப்போவதில்லை. அவர்கள் சாதிக்கவே களம் போகிறார்கள். அதுபோலவே எங்கள் கௌதமனும் சாதனை புரிந்து வருவானென்றுதான் தளபதிகள் போராளிகள் காத்திருந்தனர். ஆனால் அவனோ யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனையை முடித்த திருப்தியில் முல்லைத்தீவு மண்ணின் மூச்சோடு நிறைந்து போனான்.

தான் வீரச்சாவடைகிற போது தனது வித்துடல் தன் ஆத்ம நண்பன் மேஜர் உதயச்சந்திரன் அல்லது கண்ணாடி விதைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட வேண்டுமென்று விரும்பியது போலவே கனகபுரம் துயிலிடத்தில் நிரந்தரமாய் துயின்றான்.
 விழிகள் கரைய உருகியுருகி (முல்லைத்தீவு வெற்றிக்காய் வீழ்ந்தவர்கள் நினைவுப்பாடல்

ஊரானை இழந்த போது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஒரு சிறந்த புலனாய்வாளனை சாதனையாளனை இழந்து போனோமெனத் துயர் கலந்த அவனது இழப்பின் கனதியை நினைவு கூர்ந்தார். அது போல தளபதி சொர்ணம் அவர்களும் ஊரானின் இழப்பை மிகுந்த துயரோடுதான் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு காலம் பெற்றிருக்க வேண்டிய பெறுமதி மிக்க போர்த்தளபதியை இழந்து போனது போலவே போராளிகளும் தளபதிகளும் ஊரானின் இழப்பை நினைவு கொண்டார்கள். அதிகம் அலட்டாத ஆனால் ஊரான் இருந்தால் கலகலப்பிற்கு குறைவில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியுமே நிறையும் நாட்களை நண்பர்கள் துயரத்தோடு கடந்து உறுதியோடு நிமிர்ந்தார்கள்.

கனகபுரம் துயிலுமில்லம் வருடாவருடம் ஊரானுக்காகவும் விளக்கெரித்து தன்மடியில் அவனைத் துயிலவைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தது. 

கல்லறைகளில் விளக்கேற்றி அவர்கள் கனவுகளை நனவாக்கும் உறுதியோடு வருடம் தோறும் போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவன் சென்ற வழி வெல்லும் வழி என்றோ ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அவனது நினைவுகளைச் சுமந்தபடி அவனது தோழர்கள் அவனோடு களமாடியவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இறைச்சி வேண்டாம் மரக்கறி வேண்டாமென்று அடம்பிடித்த குழந்தை ஒருநாள் உறுதியோடு தனது தாயகத்திற்கான பணி முடித்துப் பாதியில் போய்விடுவானென்று அறியாத அவனது அம்மா , அப்பா, அக்காக்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் நினைவுகளில் இன்பசோதி கப்டன் ஊரானாக , கௌதமனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தேசம் மீட்கப்போனவர்களின் நினைவோடு எங்கள் ஊரானும் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருப்பான் வரலாறாக....!

29.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 நிலமும் வானும் கடலும்நேற்று அழுதது அந்த நிலவும் இரவு வானில் அழுதது

Monday, November 25, 2013

வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி

வீரத்திருவே
எங்கள் வேரின் தணலே
விடியாத வாழ்வுக்கு
வெளிச்சம் தந்த
ஈகப்பெரு நதியே....

அகவை ஐம்பத்து ஒன்பது காணும்
அணையாச் சுடரே
அன்பின் உருவே
அலையாய் கரையாய்
நிலவாய் நீராய் நெருப்பாய்
நீயே எங்களின் நிச்சயம்....

ஏன்றென்றும் எங்களின்
வழிகாட்டி ஒளிகாட்டி
வுரலாற்றின் திசைகாட்டி
எல்லாம் நீயே
எங்களின் தலைவனே....

பெருமைமிகு தோழனே
பெறுதற்கரிய பெருமையே
தலைநிமிரும் வீரத்தையும்
ஈகத்தையும்
தந்த பேரூற்றே....

தளபதியே எங்களின் தந்தையே
எல்லாமுமான வல்லமையே
நீ பிறந்த பின்னாலே
நாங்கள் வீரம் பெற்றோம்
விடுதலையின் சுவையறிந்தோம்...

நீயில்லாமலெங்களுக்கு
நிமிர்வில்லை நண்பனே
நீயே எங்களின்
வல்லமைச் சூரியனாய்
வழிகாட்டும் பேரொளி
வாழ்த்துகிறோமுன்னை.

26.11.2013

சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன்

லெப்.கேணல் அன்பழகன் (பலாலி – கைலாயபிள்ளை ஜெயகாந்தன்)

விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது.

எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில் இருந்த படைகள் கொண்டிருந்தாலும் புலிகளின் உறுதியின் முன்னால் எல்லாமே தூசாகிப்போனது தான் விடுதலைப்புலிகளின் வெற்றியின் ஆதாரம்.

ஈழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியின் ஆரம்பம் முதல் பலாலி மண்ணுக்கும் போராட்ட வீரர்களுக்கும் இடையிலான உறவும் தொடர்ந்து கொண்டேயிருப்பதற்கான சாட்சியமாக பலாலி மண்ணும் தனது புதல்வர்களை விடுதலைக்காய் விலையாய் தந்து எத்தைனையோ இழப்புகளின் வலிகளையும் விலைகளையும் கொடுத்திருக்கிறது.

1986களிலிருந்து இடப்பெயர்வும் இழப்புகளும் இந்த மண்ணுக்குப் பழகிப் போனதாயினும் இந்த மண்ணின் வீரர்களின் தடங்களில் எழுதப்பட்ட வீர வரலாறுகளை காலம் ஒரு நாள் இந்த உலகத்திற்குச் சொல்லியே தீரும் நாளை இன்றே எழுதிக் கொள்வோம்.

ஒவ்வொரு குழந்தையும் பூமியில் பிறக்கின்ற போது சாதனைக்குரிய இயல்புகளோடும் சாதனையாளருக்குரிய பண்புகளோடுமே பிறக்கின்றது. ஆனால் காலமே ஒவ்வொரு குழந்தையின் கனவுகளை வெல்லச் செய்யும் திறனையும் கொண்டிருக்கிறது.

எல்லாத் திறன்களையும் ஒருங்கே கொண்ட ஒரு குழந்தையாக தனது ஊரின் இழப்பை சிறுவயது முதல் பார்த்து அதனது பாதிப்புகளோடு வளர்ந்த ஜெயகாந்தன் என்ற சிறுவனையும் இந்தப் பலாலி மண்ணே பெற்றெடுத்தது.

இவன் பிறந்த போது யாருமே கனவில் கூட நினைத்திருக்கமாட்டாத சாதனையாளனாக வாழ்ந்து முடிந்த வரலாற்றை இவன் எழுதிச் செல்வானென்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. போரின் ஆரம்பம் வடக்கில் ஆரம்பிக்கிற போது முதலில் இடம்பெயரும் ஊர் பலாலியும் பலாலியை அண்டிய பிரதேசங்களுமே முதலாவதாக இடம்பெயரத் தொடங்கும்.

இப்படித்தான் ஜெயகாந்தன் குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. ஊரைப்பிரிகிற துயரை அனுபவிக்கிற உலகில் நாடற்றுப் போயிருக்கும் மில்லியன் கணக்கான மனிதர்களின் துயருக்கு நிகராக அதையும் விட மேலாக துயரத்தை அனுபவித்த ஈழத்தமிழர்களின் வலியை பலாலி மண்ணும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துயர் இன்றுவரையும் மாறாமல் அப்படியே....!

அண்ணாக்கள் இருவரோடும் அக்கா , தம்பி , தங்கையென குடும்பத்தின் மகிழ்சிக்கு குறையில்லாத குடும்பத்தில் 18.08.1972அன்று கைலாயபிள்ளை தம்பதிகளுக்கு மகனாய் வந்து பிறந்தான் ஜெயகாந்தன்.

தனது ஆரம்பக்கல்வியை பலாலியிலும் பின்னர் 5ம் வகுப்பிலிருந்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மாணவனாகி கல்வியைத் தவிர கனவுகள் ஏதுமில்லாத மாணவனின் கல்வியில் தடை வீழ்ந்தது 1989ம் ஆண்டில் தான்.

அப்போது இந்திய இராணுவ காலம். தேசிய இராணுவம் என்ற பெயரில் அப்போது சிறுவயதுப் பிள்ளைகளை EPRLF என்ற மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இயக்கம் யாழ்மாவட்டத்திலும் இதர பகுதிகளிலும் பிள்ளைபிடியில் இறங்கியிருந்தது.

வீடுகளில் பயமும் அடுத்த வினாடி எந்த வீட்டின் பிள்ளை வதைக்கப்பட்டுப் பிடித்துச் செல்லப்படுவான் என்ற ஏக்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தரமான காலமாகியிருந்தது. திறமையான மாணவனாக கல்வி கற்றுக் கொண்டிருந்த ஜெயகாந்தனையும் EPRLF இயக்கத்தின் பிள்ளைபிடி விட்டு வைக்கவில்லை.

எதிர்காலம் கனவு கண்ட ஒரு சிறந்த கல்விமானை EPRLF பிள்ளைபிடி சிதைத்துப் போட்டது. தனது பாடசாலைக் காலத்தை நிறுத்தி ஊரூராய் ஒளித்துத் திரியத் தொடங்கி இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறி EPRLF தொலைந்து போன போதிலும் அந்தக்காலம் அனுபவித்த அவலத்தை அவனது மனசிலிருந்து யாராலும் அழித்துப் போட முடியவில்லை.

வருடக்கணக்கான அலைவு படிப்பு பாதியில் பறிக்கப்பட்டதோடு சோர்ந்து ஒதுங்காமல் 1993 வரையிலும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக்கல்லூரியில் மின்னியல் கல்வியைத் தொடந்து கொண்டிருந்தான். நாடே போராடிக் கொண்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்மண். ஆயினும் முழுமையாக மீட்கப்பட வேண்டிய சுதந்திர தமிழீழக் கனவோடு ஒருநாள் எங்கள் ஜெயகாந்தனும் புலியாகினான்.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு7 ஜெயகாந்தனையும் வரவேற்றது. அன்பழகன் என்ற இயக்கப் பெயரைப் பெற்று பயிற்சியைத் தொடங்கினான். மிகவும் உயரமான தோற்றம் பலவேளைகளில் பயிற்சியில் சிரமங்களைக் கொடுத்த போதும் தன்னை வருத்தி தனது இலட்சியத்தில் உறுதியோடு பயிற்சியை முடித்துக் கொண்டு தனது முதல் கள அனுபவத்தை 11.11.1993அன்று பூனகரி தவளைப்பாச்சல் தாக்குதலில் பெற்றுக் கொண்டான்.

விளையும் பயிரை முளையில் தெரியுமென்றது தமிழ்ப்; பழமொழியொன்று. பழமொழிக்கே புதுமொழி வகுத்த வீரனாக முதல் கள அனுபவமே அன்பழகனை ஒரு சிறந்த போர் வீரனாக அடையாளம் காட்டியது. முதல் களம் முடிந்து வந்த அன்பழகன் இம்ராம் பாண்டியன் வெளிப் பாதுகாப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

பாதுகாப்பணிப் பிரிவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தனது கடமைகளை கவனத்தோடும் நேர்மையோடும் செய்து கொண்டிருந்ததோடு மட்டுமன்றி சக போராளிகளோடு இனிமையாகவும் பொறுப்புணர்வோடும் அதேநேரம் எல்லோரையும் நேசிக்கும் பண்போடும் தன்னை வெளிக்காட்டிய வீரன்.

எல்லா விடயங்களிலும் நிதானமும் பணியின் தேவை காத்திரம் யாவையும் புரிந்து தேவைக்கேற்ப தனது ஆற்றலை வழங்கி அன்பழகன் இயங்கிய காலமும் பணிகளும் காலத்தால் அழியாதவை.

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அன்பழகனும் முன்னுரிமையைப் பெற்ற போராளியாகவே இருந்தார். அதற்கு நல்லுதாரணமாக 2000ம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டு வரையும் வெளியகப்பாதுகாப்புப் பணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். தலைவரின் வெளியகப் பாதுகாப்பணியில் தனது கடமைகளை கவனமாகச் செய்து கொண்டிருந்தார்.

2002இல் திருமணம் நடைபெற்றது. குடும்ப வாழ்வும் போராட்ட வாழ்வும் எப்போதும் புலிகளின் வரலாற்றில் வேறு வேறாக இருந்ததில்லை. அன்பழகனின் குடும்ப வாழ்வும் போராட்டத்திற்கான பலமாகவே இருந்தது.

குடும்பத்தோடு செலவிடும் நேரத்தைவிட கடமைக்காய் நாட்கணக்காக , வாரக்கணக்காக , மாதக்கணக்காக இரவுபகல் பராது உறங்காது உழைத்த போராளி. மிகவும் நெருக்கடி மிக்க காலங்களிலெல்லாம் தனது அயராத பணியால் உயர்ந்து விடுதலைப் போராளியென்பவன் எப்படி வாழ வேண்டுமென்ற உதாரணமாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப்புலிகளின் மரபை மீறாத சத்தியனாக வாழ்ந்த கடமை வீரன்.

தலைவரின் நம்பிக்கையை அன்பை மதிப்பைப் பெற்றவர்களுள் அன்பழகனும் ஒருவர். 2005 ஆரம்பத்தில் நிதிப்புலனாய்வுக்குத் தலைவரால் நியமிக்கப்பட்டார். வழங்கப்பட்ட கடமையை மதித்தும் கவனத்தோடு பொறுப்போடும் தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நடைமுறை அரசை நிறுவி ஒரு சிறந்த நாடு எப்படி அமைய வேண்டும் எப்படி அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் வரையப்பட வேண்டும் நடைமுறையில் இருக்க வேண்டும் இராணுவ அரசியல் கட்டமைப்புகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட சுதந்திரமான அரசொன்றிற்கான அனைத்துத் தகுதிகளையும் உலகிற்குச் சொல்லிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அபரிமித வளர்ச்சியின் வெளிப்பாடு உலகையே உறுத்திக் கொண்டிருந்தது.

தனது காலில் வீழாத எந்த விடுதலைப் போராட்ட அமைப்பையோ அல்லது சிறுபான்மையினத்தையோ உலகின் பெரியவீட்டுக்கார அரசியல் விட்டு வைத்ததில்லை. அங்கங்கே விடுதலையடைந்த ,விடுதலை வேண்டிப் போராடும் தேசங்களிலெல்லாம் ஏதோ ஒரு வகையிலான தலையீட்டைச் செய்து தலையிடியைக் கொடுத்து தனது காலில் வீழ வைத்த வரலாற்றை விடுதலைப்புலிகளுக்கும் எழுதிவிட சமாதானம் என்ற பெயரில் உலகம் கட்டுப் போட்டது.

மெல்ல மெல்ல உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்து ஈழவிடுதலைப்போரை அழிக்கத் தொடங்கி 2008 இன் இறுதிக்காலங்கள் வன்னி நிலத்தின் வளமும் வல்லமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது மட்டுமன்றி தினமும் மரணமும் தொடர் இராணுவ நகர்வும் யுத்தகாண்டமாக மாறியது வன்னிக்களம்.

பணியாதோரை வஞ்சத்தால் பணிய வைத்தல் அல்லது இல்லாதொழித்தல் இவ்விரண்டில் ஒன்றை இலங்கையரசிற்குத் துணையாகி உலகம் புலிகள் மீதும் தமிழர் நிலம் மீதும் கடும் போர் தொடுத்தது.

தமிழரின் வீரத்தையும் தமிழரின் நிலத்தையும் அழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் நடாத்தப்பட்ட போரில் புலிகளின் மனவுறுதி மட்டுமே அன்றைய நாட்களில் என்றும் போல இறுக்கமாகவே இருந்தது. அந்த உறுதியே இறுவரையும் கலை(ரை)யாதிருந்தது.

2009 தொடக்கம் அன்பழகன் தானாகவே சண்டைக்களத்திற்கு போனார். தேவிபுரத்தில் சண்டையில் காயமடைந்தும் களத்தைவிட்டு விலகாது காயத்திற்குக் கூட மருந்திடவோ மாற்றுச் சிகிச்சை செய்யவோ இயலாத அந்த இறுக்கம் மிகுந்த காலத்தில் அன்பழகன் களத்தைவிட்டு விலகவேயில்லை.

போராளியாக இணைந்த போது எத்தனை வேகமும் வீரமும் இருந்ததோ அதே வீரத்தோடு களமாடி 2வது முறையும் காயமடைந்து அதுவும் சரியாக ஆறாத நிலமையில் 3ம் முறை உடல் முழுவமும் காயமடைந்தும் கடைசி வரை களத்திலே நின்று சாவெனென்ற உறுதியோடு களமாடிய புலிவீரன்.

2009 மேமாதம். வாழ்வெனிலும் போராடுவோம் சாவெனிலும் சமராடுவோமென்ற உறுதியோடு குண்டுமழைக்குள்ளும் தலை நிமிர்த்த முடியாத எறிகணை வீச்சுக்குள்ளும் உறுதி குலையாத இறுதி வரையும் போராடுவோமென்ற புலிகளின் உறுதியோடு களத்தில் நின்ற அன்பழகன் 05.05.2009 அன்று தான் நேசித்த மண்ணுக்கான கடமையை நிறைத்த நிறைவில் உயிரைக் கொடுத்து உறங்கிப் போனார்.

அந்த மாவீரன் கண்ட கனவை தன்வழி நின்றோர் நிறைவேற்றுவார்களென்ற நம்பிக்கையோடு சண்டையில் சமர்க்கள வீரனாக உயிர் மூச்சை நிறுத்திக் கொண்ட அன்பழகனின் கனவுகள் அந்த முல்லை மண்ணில் வியாபித்துப் பரந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவைக் காணாமல் தனது இலட்சியப்பாதையில் உறுதியோடு பயணித்து உயிரைத் தந்து இன்று எங்கள் முன்னால் மாவீரனாகி வரலாறாகிவிட்ட லெப்.கேணல் அன்பழகனுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிற சம நேரத்தில் அன்பழகனதும் அன்பழகன் போன்ற ஆயிரமாயிரம் வேங்கைகளதும் கனவுகள் நனவாக ஒவ்வொருவரும் பயணிப்போம் பணிசெய்வோம்....!

அன்பழகன் கனவு பலாலிக் கிராமத்தின் கடலலைகளோடும் கரைந்து நிறைந்து ஈழதேசமெங்கும் உலவும் காற்றாய் உலகத் தமிழர் வாழும் நாடெங்கும் வேங்கை மாவீரரின் கனவுகள் சுமந்து விடுதலை வேண்டி நகர்கிறது....!

காரியம் பெரிது தோழா
http://thesakkaatu.com/uploads/2013/03/09-Track-913.mp3
22.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Wednesday, November 20, 2013

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை.

விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும்.

இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை.

Thesakaatru
1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதாரண குழந்தையாகவே பிறந்தான். சாதாரணமானவர்களின் பிறவியே பெரும் சரித்திரங்களை உருவாக்கிவிட்டுச் செல்லும் சக்தி கொண்டவையென்பதற்குச் சாட்சியமாய் ஜெயதீபனின் வரலாறும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத பெயர்களில் ஒன்று.

அம்மா ஆசிரியை அப்பா வங்கி ஊழியர் வீட்டில் அண்ணாவுக்கும் தங்கைக்கும் நடுவில் வந்து அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியின் பிறப்பாய் பிறந்த பிள்ளை படிப்பில் ஒரு சாதனையாளனுக்குரிய ஆற்றலோடு தான் ஊரில் ஆரம்பக்கல்வியை முடித்து யாழ் இந்துக்கல்லூரியின் மாணவனாகினான்.

70களில் பிறந்த எல்லாப்பிள்ளைகள் போலவும் போரின் காயங்களையும் போராயுதங்களில் ஒலிகளையும் கேட்டுக் கொண்டே உலவிய ஜெயதீபனை காலத்தின் தேவை புலிவீரனாக்கியது. தனது 16வது வயதில் 1990களின் இறுதியில் சொல்லாமல் கொள்ளாமல் போராளியாகிய மாணவன் ஜெயதீபனை சரத்பாபு 2 பயிற்சி முகாம் வரவேற்றுக் கொண்டது.

றட்ணம் என்ற பெயர் சூட்டப்பட்டு ஆரம்பப்பயிற்சியை முடித்துக் கொண்டு களமாடும் வீரனாகவே ஆனையிறவுச் சமரில் பங்கெடுத்தார். வெட்டைவெளியும் மணல்தரையும் , வெளிகளையே அதிகமாய் கொண்ட ஆனையிறவின் உப்பள வெளியில் கனவுகளோடு கரைந்தவர்கள் நினைவோடு களமாடிக் கொண்டிருந்தனர் புலிவீரர்கள்.

ஆனையிறவை நோக்கிய பல்முனை இராணுவ முன்னேற்றத்தில் இயக்கச்சிப் பகுதியில் நடந்த சமரில் றட்ணம் விழுப்புண்ணடைந்தார். களம் காணுதல் காயமடைதல் மீள களமடைதல் என்பது விடுதலைப்புலிகளுக்கே உரித்தான இயல்போடு றட்ணம் தனது காயம் ஆறி மீண்ட போது அவரது ஆற்றலின் மீதான நம்பிக்கையும் திறமையும் அவரைப் பிரதான பயிற்சியாசிரியனாக்கியது.

சரத்பாபு 04 தொடக்கம் சரத்பாபு 09 வரையுமான பயிற்சியணிகளின் சிறப்புப் பயிற்சியாசிரியனாகி பலபோராளிகளை போர் வீரர்களாக உருவாக்கி றட்ணம் என்ற பெயரோடு மாஸ்ரர் என்ற அடைமொழியும் சேர்ந்து றட்ணம் மாஸ்ரராகினார்.

விடுதலைப் பயணத்தில் ஒன்றாக இணைந்த போராளிகள் ஒவ்வொருவரும் தேசத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அந்தப் போராளிகளின் இயல்புகள் கூட வேறுபட்டவை. ஆனால் எல்லா வகையான குணவியல்புகளைக் கொண்டிருந்த போராளிகளையெல்லாம் அவரவருக்கு ஏற்ப அவர்களோடு தானும் ஒருவராகி எல்லாப் போராளிகளையும் அரவணைக்கும் பண்பானது றட்ணம் மாஸ்ரரை போராளிகளிடத்தில் மேலுயர்த்தி வைத்தது.

ஏற்கனவே தலையில் காயமடைந்து மருத்துவம் பெற்றிருந்தும் அதிக வெயில் அல்லது வேலைப்பழு கூடினால் இரத்த வாந்தியெடுத்து முடிந்ததும் பழையபடி இயல்பாகிவிடும் கடமை வீரனை போராளிகளே வியந்து பார்த்தது வரலாறு.

பயிற்சியில் போராளிகளோடு ஓடிக்கொண்டு வரும் மனிதன் திடீரென எங்காவது ஓரிடத்தில் நின்றுவிடுவார்.

ஓடிக்கொண்டு வந்தவர் எங்கே காணவில்லையென போராளிகள் தேடுகிற போது மீளவும் வரிசையில் இணைந்து ஓடி வருவார். தனது வலிகளையும் தாங்கிக் கொண்டு போராளிகளோடு இணைந்திருக்கும் அற்புதமான அதிசயமான போராளி.

இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளக வெளியக கட்டமைப்புகளுக்கான பயிற்சிகளை சரத்பாபு பயிற்சி முகாமிலிருந்தே உருவாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தப் பயிற்சிகளை வழங்கி இம்ரான் பாண்டியன் படையணிக்கான வலுவை வழங்கியதில் றட்ணம் மாஸ்ரரின் பங்கும் திறமையும் அளப்பரியது.

இவரது திறமையை அவதானித்து ஆளுமையை அறிந்து கொண்ட தளபதி சொர்ணம் அவர்களால் மாஸ்ரர் தலைவரின் வெளிப்பாதுகாப்பு அணியில் நியமிக்கப்பட்டார். 95இறுதிப்பகுதியில் வெளிப்பாதுகாப்பு அணியிலிருந்து விசேட கொமாண்டோவாகத் தெரிவாகி ஆறு மாதங்கள் நடைபெற்ற விசேட கொமாண்டோ சிறப்புப்பயிற்சியில் பங்கெடுத்தார்.

இப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பணியின் பொறுப்பாளராயிருந்த கப்டன் கௌதமன் (ஊரான்) முல்லைத்தீவு சமரில் பங்கெடுக்க தானாகவே விரும்பிப் போயிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக றட்ணம் மாஸ்ரர் தளபதி கடாபி அவர்களால் நியமிப்பட்டார்.

முல்லைச்சமரில் வெற்றிகளைப் பெற்றுத் திரும்பிய வீரர்களோடு எங்கள் வீரர்கள் பலர் திரும்பி வராமல் அந்த வெற்றியின் வேர்களாக களத்தில் வீழ்ந்தார்கள். வெற்றின் விழுதாக வீரச்சாவடைந்த வெற்றி நாயகர்கள் வரிசையில் கப்டன் கௌதமன் (ஊரான்) வீரச்சாவடைந்தார்.

தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் பொறுப்பில் உயர்ந்த மாஸ்ரர் தனது வாழ்விலும் மிகவும் எளிமையாகவே இறுதிவரை வாழ்ந்த பெருமைக்குரியவராகினார். இயக்கத்தின் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்ட கடமைகளை சரியான முறையிலும் தவறாமலும் செய்து முடித்துக் கொள்ளும் கடமையுணர்வை முதன்மையாகக் கொண்டவர்.

பொதுவாக போராளிகளுக்கு வெளியில் பொதுமக்களின் வீடுகளுடன் தொடர்புகளும் பழக்கமும் இருக்கும். அவர்களுக்கான உணவு முதல் பலரது அன்பை நிச்சயம் ஒவ்வொரு போராளியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக கடைசி வரை வாழ்ந்த போராளியென்று குறிப்பிட்டால் அது றட்ணம் மாஸ்ரராகவே இருக்கும்.

சக போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுக்காக மட்டுமே வெளியில் வீடுகளுக்குச் சென்றிருந்ததைத் தவிர தனக்காக வெளியில் எவ்வித உறவுகளையும் வைத்துக் கொள்ளாத வளர்த்துக் கொள்ளாத முற்றிலும் நாட்டையும் தலைவரையும் சக போராளிகளையுமே உலகாகக் கொண்டு வாழ்ந்தார்.

அன்பைக் கொடுத்த தம்பியாகவும் அண்ணாவாகவும் வீட்டின் செல்லப்பிள்ளை ஜெயதீபன் .அண்ணா தங்கை மீது மிகவும் அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்த போதும் தங்கை மீது அதிகம் அன்புடைய அண்ணனாகவே வாழ்ந்தார். எனினும் தனக்கு கிடைத்த விடுமுறை நாட்களைக் கூட தனது பாசத்துக்கினிய தங்கையோடு அல்லது குடும்பத்தினரோடு கழித்ததில்லை.

94ம் ஆண்டில் கிடைத்த விடுமுறையில் 2நாட்கள் மட்டுமே குடும்பத்தினரோடு தங்கிவிட்டு நீண்ட விடுமுறையை அனுபவிக்காமல் முகாம் திரும்பியிருந்தார். அந்த விடுமுறையின் பின்னர் சமாதான காலத்தில் குடும்பத்தார் வந்து சந்தித்தது தவிர வீட்டாருடனான தொடர்பு என்பது வேறெந்த வகையிலும் இருக்கவில்லை. வீட்டாருடனான தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளவில்லை. தனக்காக காத்திருக்கும் பணிகளையே என்றும் மனதில் கொண்டு ஓயாது இயங்கிய எரிமலை.

வெளியில் எங்கு சென்றாலும் தனது பணிகளை முடித்து அது எத்தனை மணியானாலும் தனது முகாமிற்கு வந்த பின்னரே தனக்கான சாப்பாட்டைத் தேடுவார். வெளியில் எங்கும் கடைகளிலோ அல்லது வேறெந்த இடங்களிலோ ஒரு போதும் சாப்பிட்டது வரலாறில்லை. முகாமிற்குத் திரும்புகிற போது சிலவேளைகளில் உணவு இல்லாது போயிருக்கும். ஆனால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கிவிடும் இயல்பு கொண்ட போராளி.

தனது போராட்ட வாழ்வுக் காலத்தில் தனக்காக எதையுமே ஆசைப்பட்டதோ அனுபவித்ததோ இல்லையெனும் அளவு மிகவும் எளிமையாக வாழ்ந்து முடித்த பெருமைக்குரிய வீரன். தனக்கான உடைகள் கூட இயக்கம் கொடுக்கும் வரையும் காத்திருந்து பெற்று அணிவதையே வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டிருந்தார்.

ஒரு தளபதியாக உயர்ந்த பின்பும் ஆடைகளிலிருந்து தனக்கான எதையும் மேலதிகமாகப் பெற்றதில்லை. வழங்கல் பகுதியிலிருந்து வரும் உடுப்புகளைத் தவிர வெளியிலிருந்து ஒரு போதும் உடைகள் பெற்றதுமில்லை அணிந்ததுமில்லை. மறுமுறையும் வழங்கலில் இருந்து உடுப்புகள் வரும் வரையும் முதல் முறை கிடைத்த உடுப்பையே தொடர்ந்து அணிவார்.

தளபதி சொர்ணம் கூட பலமுறை கடிந்திருக்கிறார். ஒரு தளபதியாக உயர்ந்துள்ளாய் அதற்கேற்ப மாறிக் கொள்ளென. ஆனால் தனது எளிமையான வாழ்விலிருந்து ஒருதுளியும் மாறாமல் எல்லாவற்றிற்கும் சிரிப்பாலே பதில் சொல்லி மௌனமாகி தனது கடமைகளில் கவனமாக இருக்கும் காரியக்காரன்.

இயக்கத்தின் மீதான தனது நேசத்தை என்றென்றும் தனது பணிகள் மூலமே வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீரத்தளபதி. தானொரு பொறுப்பாளர் தளபதியென்ற நிலையில் என்றும் சக போராளிகளுடன் பழகியதில்லை. ஒவ்வொரு போராளியின் இயல்புக்கும் ஏற்றவாறு அவர்களாகவே தான் மாறியிருந்து சகலத்தையும் சரி சமானமாகப் பகிர்ந்து அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வார். எளிமையும் இனிமையும் கடமையும் மட்டுமே றட்ணம் மாஸ்ரர் என்ற போராளியின் அடையாளமாகியது.

1999 ஆரம்ப காலத்தில் இம்ரான் பாண்டியன் படையணியில் சிறப்பாகச் செயற்பட்டமையின் அடிப்படையில் தலைவரின் பணிப்பின் பேரில் தளபதி கடாபி அவர்களால் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக மேலுயர்த்தப்பட்டார். 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் தலைவரால் இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2002 வரையிலும் புதிய பழைய போராளிகளை வைத்தே தனது பணிகளைத் திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்து கொண்டிருந்தார்.

2002காலத்தில் மீண்டும் தலைவரின் வெளி பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமனம் பெற்று உறங்காது இரவு பகலென்ற வேறுபாடு காணாத உறங்காத சூரியனாக வெளியில் வராத வெளியில் தெரியாத வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

பின்னர் 2003 இறுதிப்பகுதியில் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புத்தளபதியாக உயர்வடைந்தது தொடக்கம் 2008 தளபதி சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடையும் வரையும் சிறப்புத்தளபதியாக இருந்து கடமையைக் கவனித்த பெருமைக்குரிய மனிதர்.

2004கருணா பிரிவின் காலம். மிகவும் இறுக்கமான சூழல். எனினும் தனது சிறப்பான வழிநடத்தலால் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்த தளபதி. தலைவருக்கு எவ்வித இடைஞ்சலோ தடைகளோ வரக்கூடாதென்ற உறுதியில் தடைகள் நீக்கிய தடைநீக்கியாய் தலைவரை பாதுகாத்த தளபதியாய் தலைவரின் பிள்ளைகளின் கல்வியில் தடைகள் வராவண்ணம் பணியாற்றி உறங்காத விழியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த நெருப்பு.

காலம் மறைத்து வைத்திருந்த பேரொளியாகவே வாழ்ந்திருந்த தளபதி.
05.01.2008 அன்று எங்கள் தேசத்தின் பெறுமதி மிக்க தளபதிகளில் ஒருவரான தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைகிறார்.

புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக இயங்கிக் கொண்டிருந்த கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவு பேரிழப்பாகியது. புலனாய்வுத்துறையின் ஆளுமைகளில் ஒருவராகவும் பல வெற்றிகளின் வேராகவும் இருந்த இயங்கிய தளபதி சாள்ஸ் அவர்களின் வீரச்சாவின் பின்னர் அவரது பொறுப்பை றட்ணம் மாஸ்ரரே ஏற்றுக் கொள்கிறார்.

2007இல் உலகிற்கு ஆச்சரியத்தையும் இலங்கையரசிற்கும் அழிவையும் கொடுத்த அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையின் வெற்றியின் வேராக மூலமாக அந்தத் தாக்குதலின் ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைத்து எல்லாளன் நடவடிக்கையின் ஆதாரமாக இருந்த வெற்றியின் பெருமைகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்கென்பது முக்கியமானது.

எப்போதும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி திறமையானவர்களை வளர்த்துவிடுவதில் றட்ணம் மாஸ்ரருக்கு நிகர் அவரேதான். வயது தோற்றம் எதையும் பார்த்து திறனை எடைபோடாமல் ஒவ்வொரு போராளிக்குள்ளும் உள்ள ஆற்றலை அறிந்து அவர்களை அவர்களது ஆற்றலுக்கு ஏற்ப வழிகாட்டியாகி றட்ணம் மாஸ்ரரால் உயர்த்தப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரே எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான இளங்கோவும் அடங்குகிறார்.

இராணுவப் புலனாய்வு காலத்தில் எடுக்கப்பட்ட தரவொன்றை அடிப்படையாக வைத்தே எல்லாளன் நடவடிக்கையைத் திட்டமிட்டு நெறிப்படுத்தி அத்தாக்குதலை வெற்றிபெற வைத்தார் மாஸ்ரர். எத்தனையோ மௌனமாக நடந்து முடிந்த சமர்கள் வெற்றிகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்களிப்பும் முழுமையான உழைப்பும் இருந்ததை காலம் ஒரு பொழுதும் வெளியில் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவரது தாயகம் மீதான நேசிப்பின் முன்னால் காலம் கூட மௌனமாகவே கௌரவப்படுத்தி வைத்திருந்தது.

தலைவரின் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியதிலிருந்து தலைவரின் அனைத்து விடயங்களையும் இவரே கவனித்து காப்பாற்றி தலைவரின் நிழலாக ஒளியாக நெருப்பாக இயங்கிய காலத்தை இயற்கையே அறியும்.

தலைவரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற தளபதிகளில் இவரும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.தலைவரின் பணிகளில் பாதிக்குமேல் கண்காணிப்பு நெறிப்படுத்தல் திட்டமிடல் என எல்லாத்தளங்களிலும் இவரது பங்கு மிகவும் காத்திரமானது. தலைவரின் அனைத்து விடயங்களையும் தானே கவனித்து செயற்படுத்துவதற்கான தலைவரின் சிறப்பான அனுமதியையும் பெற்று அனைத்துத் தளபதிகள் போராளிகளின் அனுமதியோடும் தலைவருக்குத் தேவையான சகலத்தையும் கவனித்த பெறுமதி மிக்க போராளி.

பல போராளிகளுக்கு எழுத்தறிவித்த ஆசானாக கல்வியில் முன்னேற்றமடையக் காரணமாக தனது ஆற்றலுக்கும் மேலாக ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் நேசித்தார். எதையும் முடியாது அல்லது இயலாது என ஒதுங்கியதே இவரது வரலாற்றில் இல்லையெனலாம்.
இதயத்தில் நெருப்பின் இருப்பு கண்ணில் கடமையின் கவனமும் எல்லாவற்றையும் தனது பார்வையாலேயே கணிப்பிட்டு திறனறியும் ஆற்றல் பெற்றவர்களில் இவரும் அடங்குகிறார்.

எல்லாமே எங்களால் முடியுமெனத் துணிந்து எல்லாவற்றிற்கும் வெற்றியைக் காட்டிய வெற்றியைத் தந்த அமைதியான தளபதியாக எளிமையோடும் எல்லோராலும் நேசிக்கப்பட்ட எல்லோரையும் நேசித்த தளபதி.

உலக விடுதலை வரலாறுகளுக்கெல்லாம் உதாரணமாயும் ஆதர்சமாயும் இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் வீரம் மிக்க தளபதிகள் வெற்றி கொள்ளப்பட முடியாத பலத்தையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினை சதியால் மட்டுமே வெல்ல முடியுமென்று உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்தது.

அந்த இறுதிக் கால நாட்களில் கூட தளபதிகள் தொடக்கம் போராளிகள் வரை றட்ணம் மாஸ்ரரையே தேடுவார்கள். படையணிகள் தங்களது செயற்திட்டங்கள் திட்டமிடல்கள் தொடக்கம் அனைத்துத் திசையிலும் ரட்ணம் மாஸ்ரரின் ஆளுமையும் இரண்டறக்கலந்திருந்தது.

ஆயுதங்களை விட மனவலிமையால் 30வருடகால போராட்டத்தை நடாத்திய உலகிற்கே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலத்தையும் கொள்ளையிடும் வஞ்சத்தோடு வன்னிமண் மீது அனைத்துலகமும் ஒன்றிணைந்து போர் தொடுத்தது.

கிழக்கில் மாவிலாற்றில் தொடங்கி பிறகு மன்னாரை உலக வல்லரச பலம் தின்று கொண்டு நகர்ந்து செல்லத் தொடங்கியது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் வரையிலும் வஞ்சம் எங்களது வரலாற்றையும் வீரத்தையும் கொன்று முடித்துக் கொண்டு போனது.

வெளியில் வராத சூரியனாய் வெளிச்சம் காணாத ஆனால் வேருக்கு நீராய் வெற்றிகளின் வேராய் வாழ்ந்து மடிந்து போன மாவீரர்கள் வரிசையில் மே18 நந்திக்கடல் முனையில் முடிந்து ஆனாலும் முற்றுப்பெறாத கனவுகளோடு மீண்டும் துளிர்க்கும் விடுதலை வீச்சோடு றட்ணம் மாஸ்ரர் என்ற சமுத்திரமும் ஓயாது அடித்துக் கொண்டிருந்த அலைகளின் மௌனத்தோடு ஓய்ந்து போனது.

பருவக்காற்றின் அலைவு ஆழக்கடல் அலைகளை ஒருபோதும் அள்ளிக் கொண்டு தொலைந்து விடுவதில்லை. அதுபோலவே றட்ணம் மாஸ்ரரும் ஒரு பெரும் ஆழக்கடல். அந்தக்கடலின் அமைதியான அலைகளின் அழகை மட்டுமே உலகறியும் ஆனால் எங்கள் றட்ணம் மாஸ்ரரை உலகம் கூட அறிந்ததில்லை. ஏன் ஊர்கூட அதிகம் அறிந்ததில்லை. காலக்கடல் தனது கதைகளை எழுதிக் கொண்டு நகர்கிறது றட்ணம் மாஸ்ரரின் ஆழுமையை இன்றும் காலம் கௌரவித்தபடியே நகர்கிறது.

கண்ணீரஞ்சலியென்றுங்கள் புனிதம் மிகுந்த தடங்கள் மீது நாங்கள் காயங்களைத் தரமாட்டோம். தலைநிமிரும் தமிழ் வீரத்தின் குறியீடாய் எங்களின் இனிய தளபதியாய் இறுதிவரை வாழ்ந்த உங்களுக்கு வீரமுடன்  வீரவணக்கத்தையே தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊழிப்பெருந்தீயாய் எங்கள் தளபதியே நீ ஒருநாள் காலப்பெருவெளியில் மட்டுமல்ல இந்த ஞாலப்பெரு விதியின் போராயுத ஆய்வாய் , அறிவாய் அறிவியலாய் நீளக்கிடக்கும் காலவிதியின் பதிவாய் எங்கள் தாயகத்தின் கடைசிக் காற்றின் மூச்சுள்ள வரை வாழ்ந்து கொண்டேயிருப்பாய்….

எங்கள் வரலாற்றின் பொக்கிசமாய் உலகின் கடைசி இராணுவ வல்லமையின் வடிவாய் எங்களோடும் எங்கள் கனவுகளோடும்; பார்த்திபனாய் படைநடத்திய அருச்சுனனாய் றட்ணம் மாஸ்ரராய் என்றென்றும் விடுதலையின் கதைகளாய் வீரமாய் வாழ்ந்து கொண்டே எங்களோடு…வெளியில் வராத சூரியனாய் காலத்தின் கதையோடு பயணித்தபடி வருவாய்….!

 வெஞ்சமர் கொல்லாத புலியானவன் இன்று வஞ்சகம் வென்றதே  பலியாகிறேன்.
20.11.2013
நினைவுப்பகிர்வு –- சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 காலத்தின் மாற்றம் அறியாத உள்ளங்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கும் காலமிது. தாயகத்துக்காக என்றும் ஓயாமல் இயங்கிய  ஓர் வீரனின் வரலாறு  போய்விடக்கூடாது எனும் ஆதங்கத்தின் இந்த வீரன் பற்றிய படைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, November 15, 2013

புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்)

(இயற்பெயர் -  கந்தசாமி.ஜெயக்குமார்)
வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992
Mejar Tamilarasan
வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :

புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ்  குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுபிடிகளின் அலைச்சலும் அச்சுறுத்தலும் நிறைந்த காலப்பகுதியில் குலம்மாமா தனது வீட்டில் தலைவரை காத்து கவனித்தது பற்றி தலைவர் அடிக்கடி நினைவு கூருவாராம்.

வசதிகள் குறைந்த தனது வீட்டில் தனது 3 தங்கைகளையும் வீட்டின் வெளியே இராணுவ நடமாட்டத்தை அவதானிக்க விட்டு தலைவரை வீட்டினுள் நித்திரை கொள்ள இடம் கொடுத்து தலைவனைக் காக்க தான் உறங்காமல் குலம்மாமா விழித்திருப்பாராம். அவரைப் போல அவரது தங்கைகளும் தலைவரைக் கண்ணாகக் கவனித்துப் பாதுகாத்து அனுப்புவதாக கூறுவாராம்.

தனது ஆரம்பகால வாழ்வு பற்றி தலைவரின் நினைவுகளில் அடிக்கடி நினைவு கொள்ளப்படும் மனிதராக குலம்மாமா இருந்தார். தலைவரால் நினைவு கொள்ளப்படும் உயர்ந்தவர்களுள் தலைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்த குலம்மாமா பிறந்ததும் இதே புன்னாலைக்கட்டுவன்தான்.

80களில் அவ்ரோ விமானம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலின் சந்தேகத்தின் பெயரால் அரச படைகளால் கைது செய்யப்பட்டு குலம்மாமா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சிறந்த முன்னுதாரணமான போராளியும் கூட. இயக்கம் நாடு இவ்விரண்டையும் தன்வாழ்வாக வாழ்ந்து இன்று கடனாளியாக ஆனாலும் தேசத்தின் இழப்பின் முன்னால் தனது இழப்பொன்றும் பெரிதில்லையென வாழும் அற்புதமனிதன்.

இவரைப் பற்றி இவரது ஆரம்பம் இயக்கம் விசுவாசம் நேர்மை பற்றி அறியாதவர்கள் சிலர் சிலகாலங்கள் முதல் துரோகிப்பட்டம் வழங்கியது இங்கு நினiவுகூரத்தக்கது. எவர் எத்தகைய விமர்சனத்தை குலம்மாமா மீது கொண்டிருந்தாலும் இன்றும் தான்நேசித்த தலைவனை , தேசத்தை இதயபூர்வமாக நேசித்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் குலம் என்ற மனிதனை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து யாராலும் விலக்கிவிட முடியாது.

இந்த ஊரில் குறிப்பிடத்தக்க போராளிகளில் முதல் வீரச்சாவடைந்த போராளி லெப்.குவிசாசன். 85 காலமென நினைவு. யாழ் நகரப்பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலொன்றில் வீரச்சாவடைந்த மாவீரர். இவரது குடும்பமும் முழுமையாகத் தங்களை ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தியாகங்களைப் புரிந்த குடும்பங்களில் ஒன்று.

லெப்.குவிவாசன் மாமாவின் அம்மா புனிதமன்ரி. எங்கள் தலைவனின் குழந்தைகளான துவாரகா , சாள்ஸ் இருவரையும் குழந்தைகளாய் இருந்த காலத்தில் பராமரித்து வளர்த்தது எல்லோராலும் வீரத்தாய் என 80களில் மதிக்கப்பட்ட புனிதமன்ரி என்பதனை வரலாறு ஒரு போதும் மறந்துவிடாது.

இவர்கள் வரிசையில் புன்னாலைக்கட்டுவனில் இருந்து போராளிகளாக புறப்பட்ட பலரில் வீரச்சாவடைந்தவர்கள் வரிசையில் கப்டன் லோலோ (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு)  , கப்டன் றங்கன் (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) வரிசையில் 1992இல் வீரச்சாவடைந்து தனது இலட்சியத்தில் உறுதியோடு பயணித் மாவீரர் மேஜர் டொச்சண்ணாவும் ஒருவர்.

குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்த டொச்சரண்ணாவின் இயற்பெயர் ஜெயக்குமார். ஊரில் ஜெயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட இளைஞன். புன்னாலைக்கட்டுவன் தொடக்கம் குப்பிளான் , ஏழாலை , குரும்பசிட்டி , வசாவிளான், பலாலி என அயல் ஊர்களெங்கும் அறியப்பட்ட ஜெயாண்ணா இராணுத்தின் கெடுபிடிகள் அதிகரித்த காலங்களில் அந்தக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தான்.

ஊரைச் சுற்றிவளைக்கும் இராணுவத்தினரால் ஊரிலிருந்து இழுத்துச் செல்லப்படும் இளைஞர்களின் துயரில் அலையும் அம்மாக்களின் கண்ணீரின் கனதியும் பள்ளிமாணவனாக இருந்த ஜெயாண்ணாவையும் போராட்டம் பற்றிச் சிந்திக்க வைத்தது.

எல்லாக் கொடுமைகளுக்குமான தீர்வு தானும் விடுதலைப் போராட்டத்தில் இணைவதே தீர்வென்றெண்ணித் தன்னையும் விடுதலைப்புலிகளுடன் இணைத்து தனது பிரதேசத்துக்கே ஆயுதம் தரித்துத் திரும்பி வந்தார்.
86களில் இராணுவத்தினர் முழுமையாக முகாம்களில் அடக்கப்பட்ட காலம். அப்போது பலாலி முகாமிலிருந்த இராணுவத்தினர் வசாவிளான் நோக்கி முன்னேற முயன்ற காலம்.

திடீரென காணாமற்போன ஜெயாண்ணா போராளியாக ஊரில் வந்திறங்கினார். இரவுகளில் வசாவிளான் பகுதியில் சென்றியிருக்கும் போராளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கேணியடியில் அமைந்த எங்கள் கடைக்கு வந்து போவார். அப்பாவோடு அதிக நெருக்கத்தைக் கொண்ட போராளிகளில் டொச்சண்ணாவும் ஒருவர்.

டொச்சண்ணாவுக்கு அப்பாவின் பிரத்தியேக கவனிப்பு எப்போதுமே காத்திருக்கும். எங்களோடு அடிபட்டு எங்கள் வீட்டிலும் ஒருவனாக வந்து போன போராளி. அம்மா இல்லாத பிள்ளையென்றதால் அதிகம் அன்பை எங்களிடத்திலும் பெற்றுக் கொண்டார். பதின்ம வயதுகளில் தனது வீட்டிற்காகவும் தன்னை வளர்த்த அம்மம்மாவுக்காகவும் உழைத்த பொறுப்புள்ள பிள்ளை.

விவரிக்க முடியாத துயரையும் வெளியில் தெரிவிக்க முடியாத இழப்பின் கனத்தையும் இதயத்தில் சுமந்து திரிந்த தென்றல் அது. மெல்லிய உயர்ந்த உருவமான டொச்சண்ணா அன்றைய காலத்து நினைவுகளில் எப்போதுமே சிரித்தபடி சயிக்கிளில் வந்திறங்கும் இனிமையான போராளி.

நாய்க்குட்டியென டொச்சண்ணாவை சொல்வார்கள். நாய்க்குட்டியென்ற அடைமொழி ஏன் அவரது பெயருக்குப் பின்னால் வந்ததெனத் தெரியாத வயது அது. கோபம் வந்தால் நாய்க்குட்டியென்று சொல்லிச் சினத்தாலும் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு போய்விடும் மனிதன்.

ஒருமுறை நாய்க்குட்டியென்ற பெயருக்கான காரணத்தை அந்த வீரனின் தோழன் ஒருவனிடமிருந்து அறிந்த போது அந்த இனிமையான போராளி மீதான மதிப்பு மேலுயர்ந்தது.

வீதியில் கண்டெடுத்த நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து அந்த நாய்க்குட்டியைத் தன்னோடு கொண்டு திரிந்து அன்பைப் பொழிந்த இளைஞனின் கருணையை காலம் ஒரு போதும் தனது நன்றியால் நினைவு வைத்திருக்கும்.

பலாலியிலிருந்த இராணுவத்தினரால் ஏவப்படும் எறிகணைகள் புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் ஏழாலையென நீண்டது. உலங்குவானூர்தியின் தாக்குதல் தொடர் மரணத்தின் கொடிய கையால் பலரது உயிர்கள் இடுங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வாசவிளான் மத்தியமகா வித்தியாலயம் மாணவர்களின் நடமாட்டம் கலகலப்பு எதுவுமின்றி அனாதையானது. டொச்சண்ணாவையும் சிறந்த மாணவனாக உருவாக்கியதும் அதே பாடசாலைதான்.

இரவிரவாக தொடர் தாக்குதல். வெடிச்சத்தங்கள் இரவை அறுத்து எங்கள் அமைதியைக் கொன்றது. வசாவிளான் மத்தியமகாவித்தியாலத்தைக் கைப்பற்றும் கனவோடு  இராணுவத்தின் இலக்கும் நகர்வும் ஆரம்பித்தது.

டொச்சண்ணா படித்த பாடசாலையான வசாவிளான் மத்தியமகா வித்தியாலயத்தினைக் கைப்பற்றும் முயற்சியில் புறப்பட்ட இராணுவத்தினரோடு சமராட எங்களது டொச்சண்ணாவும் இணைந்து கொண்டது வரலாறு. எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சியோடு தனது பாடசாலையை தான் நேசித்த ஊர்களைக் காக்கும் கனவோடு களமாடிய வேங்கை.

வசாவிளான் மத்தியமகா வித்தியாலயம் இராணுவத்தினரிடம் பிடிபடுகிற போது அவர்களுக்கான வசதிகள் எதையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் போராளிகள் ஈடுபட்டார்கள். மெல்ல மெல்ல இராணுவத்தின் முன்னேற்றம் தொடர் எறிகணைகள் விமானத்தாக்குதல் ஒரு கட்டத்தில் வசாவிளான் பகுதி இராணுவத்தினரிடம் பறிபோக வேண்டிய நிலமை வந்தது. புலிகள் பின்வாங்கி நின்று வசாவிளானில் தங்கியிருந்த இராணுவத்திற்குப் பெரும் தலையிடியாகினர்.

சமரொன்றின் போது களத்தில் நின்று கழுத்துப் பகுதியில் காயமடைந்து டொச்சண்ணா விழுப்புண்ணடைந்தார். என்றும் மாறாத இலட்சியக்கனவோடு காயமென்ன கடுமையென்ன எதுவும் அந்த இரும்பின் உறுதியின் முன் வெறும் துகள்களாக….!

1987 அமைதி காக்க வந்தார்கள். ஆயுதங்கள் கையளிப்பு நிறைவாகி. நிராயுதபாணிகளாய் புலிகள் நின்ற நேரம் தியாகி திலீபனண்ணா உண்ணாவிரத காலத்தில் ஓயாமல் ஓடித்திரிந்து இயங்கிய புலியாய் டொச்சண்ணா.

10.10.1987 அமைதிகாக்க வந்தபடையுடனான யுத்தம் ஆரம்பம். ஆறாத விழுப்புண்ணோடு அலைந்து களங்களில் விழியுறக்கம் மறந்த வேங்கை இந்தியப்படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையென்ன பெரிதென்ற எங்கள் புலி எல்லா வதைகளையும் தாங்கியபடி காங்கேசன்துறை தடுப்பு முகாமில் சிறைவாசத்தை அனுபவித்தது. தான் கொண்ட கொள்கைளில் கறையில்லாமல் புனிதத்தோடே டொச்சண்ணா சிறை வாழ்வை ஒரு போராளியின் உறுதியோடு வாழ்ந்து காட்டினார்.

இந்தியப்படைகள் ஈழத்தைவிட்டு வெளியேறிய போது சாரத்தோடு எங்கள் முன் சாறக்கட்டுப்புலியாகாத் திரிந்த புலி வரிச்சீருடையோடு எங்கள் ஊருக்குள் வந்திறங்கிய போது யாராலும் நினைக்காத வளர்த்தியும் மாற்றமும் ஆனாலும் நாங்கள் அன்று பார்த்த பழகிய பழைய அதே டொச்சண்ணாவாக எங்களோடு மீண்டும்….!

ஒவ்வொரு போராளியும் தனது மரணத்தின் நாளை தனது மனவேட்டில் பதிவு செய்து கொண்டேயிருப்பார்கள்.  ஆனால் அவர்களது பயணத்தில் எவ்வித பயமும் இல்லாது தொடர்வார்கள். அப்படியே டொச்சண்ணாவும்…!

குப்பிளான் பிரதேசப் பொறுப்பாளனாக பதவியேற்று வந்த டொச்சண்ணா தான் பழகிய வீடுகளை மறக்காமல் எங்கும் வந்து போவார். 1990மேமாதம் புன்னாலைக்கட்டுவன் பெற்ற வீரப்புதல்வர்களுக்கான நினைவுநாள் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி அந்த நினைவு நாளில் அந்த ஊரில் புலியாகி வீரச்சாவடைந்த லெப்.குவிவாசன் , கப்டன் லோலோ, கப்டன் ரங்கன் ஆகியோரின் திருவுருவப்படங்கள் தாங்கிய மேடையில் நடந்த நிகழ்வில் டொச்சண்ணா தனது தோழர்கள் பற்றி நினைவு கூர்ந்த போது ஒரு சிறந்த பேச்சாளனாகவும் எங்களது மதிப்பைப் பெற்றார்.

1990யூன் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். எங்கள் ஊரில் முகாமிட்டிருந்து தனது அரசியல் பணியை அக்காலத்தின் தேவையையெல்லாம் டொச்சன்  என்ற இளம் போராளியின் வேகத்திலும் விவேகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம்.

தனது அலுவலகத்திற்கு அண்மையில் அமைந்திருந்த வெளியில் பந்தலிட்டு கோட்டை இராணுவத்தினரை துரத்திய கோட்டை வெற்றி விழாவை தியாகி திலீபண்ணாவின் நினைவு நாளன்று நடாத்திய பெருமையும் எங்கள் டொச்சண்ணாவையே சாரும்.

காலமாற்றம் எங்கள் ஊரில் திரிந்த டொச்சண்ணாவை போர்வல்லுனராய் தளபதியாய் மாற்றியது. அரசியல் பணியிலிருந்து விடுபட்டு களத்தில் மீண்டும் சண்டைக்காரனாக…! களமே வாழ்வாக அவரது களங்கள் எங்கும் விரிந்து பரந்தது.

ஊர்கள் வெறிச்சோடி மனிதர்களை இழந்தது ஆனாலும் தான் ஓடித்திரிந்த ஊர்களைக் காக்கும் பணியில் டொச்சண்ணா மீண்டும்….! தமிழரசன் என்ற பெயர் யாருக்கும் நினைவில்லை ஆனால் டொச்சன் என்ற பெயரை அப்போது தெரியாத குழந்தையே இருக்கவில்லை. அவ்வளவுக்கு அந்தப் பெயர் யாழ்மாவட்டத்தின் அனேக இடங்களில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படையணியை வழிநடத்தும் திறன் மிக்க தளபதியாய் மாற்றம் கொண்ட வீரன்.

வலிகாமம் தாக்குதல் தளபதியாய் உயர்ந்து நின்ற போர்த்தளபதி. பலாலி,கோட்டை,மின்னல் (மணலாறு) என களங்கள் கண்ட ஓயாதபேரலை. 8தடவைகளுக்கு மேல் விழுப்புண்ணடைந்தும் இலட்சியத்தில் தனது இலக்கில் பின்னடைவைக் காணாத புன்னகைமாறாத போர்வீரன்.

களமும் காயமடைதலும் அந்தப்புலி வீரனுக்குப் புதியதில்லை. சமரொன்றில்  காயமடைந்து (மின்னல் சமரென நினைவு) முழுமையாக குணமடையாத நிலமையிலும் பலாலி இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலில் தானும் கூடவே சண்டையில் நின்றார். அச்சண்டையின் தேவையை உணர்ந்து களத்தில் நின்றவர்களோடு தானும் ஒரு வீரனாகி நின்றார்.

அத்தாக்குதலில் புலிகளணி பெரும் வெற்றியைப் பெற்றது. பெற்ற வெற்றியில் மகிழ்ந்து ஆரவாரித்த போராளிகளின் மகிழ்ச்சியின் தருணம் அது.

டொச்சண்ணாவும் இன்னும் தளபதிகள் போராளிகள் கூடி திசையெங்கும் நின்ற வேளையது. தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரி பலாலியிலிருந்து தலைநிமிர முடியாத அளவுக்கு எறிகணைகளை ஏவிக் கொண்டிருந்தான்.

இதே களத்தில் நின்ற கப்டன் மலரவன் என்ற உன்னதமான போராளியின் உயிர் மூச்சும் வளலாய் பகுதிமீது எதிரி ஏவிய எறிகணையில் தனது மூச்சை நிறுத்தி கப்டன் மலரவனாக தன்னை வரலாற்றில் பதிவு செய்து கொண்டது.

23.11.1992 ஈழவிடுதலைப் போராட்டத்தின் போர் இலக்கியமாக போற்றப்படும் ‘போர்உலா’ என்ற இலக்கியப் பொக்கிசத்தை எங்களுக்குத் தந்த போராளி. எத்தனையோ களங்களில் தனது கள அனுபவங்களை எழுத்தாக்கிய வீரன்.

ஒரு கையில் பேனாவோடும் மறுகையில் துப்பாக்கியோடும் களமெங்கும் திரிந்த கப்டன் மலரவன் அவர்களின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது. அன்று மலரவனோடு மண்மீட்பில் 57மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் தந்து தங்கள் இறுதி மூச்சை பலாலிப்பகுதியில் கரைத்துக் காவியமானார்கள்.

அதேபோல எங்கள் டொச்சண்ணாவும் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று 24.11.1992 அன்று வீரச்சாவடைந்து மேஜர் தமிழரசனாக (டொச்சன்) தான் நேசித்த இலட்சியத்தின் பாதையில் தனது கடமையை நிறைத்த மகிழ்வோடு மாவீரனாக….!

முதல் சண்டையனுபவம் கண்ட பலாலிப்பகுதியே அந்த இனிய போராளியின் இறுதிக்களமாகி எங்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரைத் தந்து சிரித்தபடியே நினைவுகளில் இன்றும் ஞாபகமாய்….கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் உறங்கிப் போனார்.

சிறுவனாக பின்னர் இளைஞனாக இருந்த காலத்தில் அந்தப்புலிவீரன் சயிக்கிளில் சுற்றிய மயிலிட்டி  , பலாலி , வசாவிளான் , ஒட்டகப்புலம் , அச்சுவேலி , வளலாய் என ஊர்களைக் கொள்ளையிட்டு வைத்திருந்த படைகள் மீது தாக்குதல் தொடுக்கும் போர் வீரனாய் டொச்சனென எல்லாராலும் நேசிக்கப்பட்ட வீரன் இறுதி மூச்சுக் கரைந்ததும் அந்த வீரன் திரிந்த பழகிய இடங்களில் ஒன்றான வளலாய் தான் என்பது வரலாற்றின் அதிசயம் தான்.

ஒவ்வொரு போராளியின் இறுகிய இதயங்களுக்குள்ளும் ஈரமான ஒவ்வொரு காதல் நினைவும் காதலும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. மெல்லிய , நெடிய அந்தச் சிரித்தபடி திரியும் வீரனின் இதயத்திற்குள்ளும் ஒருத்தி குடியேறியிருந்தாள் என்பதனைப் பின்னாளில் கூடவிருந்த ஒரு போராளி நினைவு கூர்ந்திருந்த போது நாங்கள் நேசித்த எங்கள் அயல் ஊரவனாகப் பிறந்து எங்கள் ஊரையும் காத்த பெருமைக்குரிய அந்தப்புலி வீரனை என்றென்றும் பெருமையோடே நினைவு கூரும் வகையில் அவனது வாழ்வும் வரலாறும் உயர்ந்து நிற்கிறது.

காதலைவிடவும் கடமையை தாயகத்தின் மீதான பாசத்தை தனது ஒவ்வொரு செயலாலும் வெளிப்படுத்தி தனது சொல் ஒவ்வொன்றின் முன்னாலும் செயலாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப் போராளிகளில் ஒருவராக எங்கள் நினைவுகளோடு சேர்ந்தே பயணிக்கும் தமிழரசன் அல்லது டொச்சன் என்ற மாவீரனின் நினைவுகளையும் சுமந்தபடி….அவர்களது கனவுகளை எட்டும் காலமொன்றின் வரவிற்காய்….!

கார்த்திகை 2010 (18வருட நினைவு நாளில்)
சாந்தி நேசக்கரம்

http://thesakkaatu.com/doc11653.html 

Wednesday, November 13, 2013

பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...!

முல்லைத்தீவு வீதிகளில்
நீயும் நானும்
மோட்டார் சயிக்கிளில்
காற்றள்ளும் வேகத்தில்
ஓடிய நாட்கள்.....!

முள்ளியவளை வீதியறிந்த எங்கள்
முன்னைய கால நினைவுகள்
இரவுகளில் நிலவு கரையும் வரை
விழித்திருந்து கதைகள் பேசி
கனவுகள் வளர்த்த இரவுகள்...!

நந்திக்கடற்கரை நிலவொளியில்
நின்றலைந்த நினைவுகள்
அதிகாலை வரையும்
அலுவலெனப் பொய்சொல்லி
அந்தக்கடற்கரைகளில்
நடந்த நாட்கள்....!

சேரன் பாண்டியன்
ஐஸ்கிறீம் இனிப்பும்
இன்னும் நாவில்
உலராத இனிமைகள்
எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள்
இதயத்தில் கனமாக....!

யுத்தப் பொழுதுகளில் உன்னை
உனது குடும்பத்தை
உனது குழந்தைகளை
தேடியலைந்த காலமொன்று
அது முள்ளிவாய்க்கால்
முடிந்த பின்னும்
முற்றாத தேடலாக...!

போராளிக்கணவனையிழந்து
நீயும் போhளியாய் வாழ்ந்த
கடைசிக்கணங்களின் நினைவுகளோடு
இன்னும் உறங்க முடியாது
நீயழுகின்ற துயர்களை
அறிவேனடி பெண்ணே....!

ஆனி 16ல் பிறந்தவுன் குழந்தையைப் போல
அதே ஆனி 16இல் பிறந்த என்னையும்
வருடம் தோறும் நினைவில் கொண்டவளே
ஆனி 16 என்றும் உனக்கு நினைவிருக்குமென்று
கடைசியாய் விடை தந்தவளே
இறுதிக்களத்தில் உன் குழந்தையின் இறப்போடு
எனக்கும் இனிப்பாயில்லையடி ஆனி 16...!

கையுக்குள் பூவைப்போல் உன் குழந்தை
புதைந்திருந்த காலத்தை நினைக்கிறேன்
பெயருக்கு ஏற்பவே ஒருநாள் பெருமை தருவான்
என்ற உனது கனவு பொய்யாகி
5வயதில் அவனை நீயிழந்த கதை
அவன்; மரணத்தை நீயே தனியனாய் சுமந்த கதை
முள்ளிவாய்க்கால் முனையில்
நீயழுத குரல் எட்டவேயில்லையடி நேற்றுவரை....!

நான்காண்டுத்  தேடலின் முடிவில்
கடவுளின் வரமாய் வந்தாய்
முகம் பார்க்காமல் உரையாடக் கிடைத்த
அலைபேசி மட்டுமே அறியும்
உனது கண்ணீரின் பாரத்தை...!

இரவு முழுவதும் உனது அழுகையொலியே
இன்னும் இதயத்தைப் பிழிகிறது
இறந்து போன ஆத்மாக்களின் குரலாக
உனது கண்ணீரும் கடைசிநேர முடிவுகளும்
இன்னும் முள்ளிவாய்க்கால் முனையில்
மிதக்கிறது ஞாபகங்கள்....!

„'தைரியமாயிரு''
உனக்குத் தைரியம் சொல்லிவிட்டுக்
கண்ணீரோடு மௌனிக்கிறேன்.
அந்த வாழ்வு என்று இனி எங்களுக்கு....?
உனது இறுதி ஏக்கம் எனக்குமாக....

மீண்டுமுன்னைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை
நேற்றோடு பின் நிற்கிறது
என் பழைய தோழியாக
உன்னைப் பார்க்க முடியாத நிலையிலான
இன்றைய உனது நிலை
நேரில் காணும் தைரியத்தை
இழந்து போயிருக்கிறேனென்பதை
எப்படிச் சொல்ல...?

நிமிர்ந்த நடை இரட்டைப்பின்னலை
உயர்த்திக் கட்டி வரிச்சீருடையில்
நடந்து வரும் உன் மிடுக்கில்
இருந்தது செருக்கல்ல
பிரபாகரன் என்ற
பெரு நெருப்பின் உருவமடி...!
பொசுங்கிப் போன கனவுகளிலிருந்து
மீண்டும் துளிர்க்கும் துணிச்சலோடு
இன்னும் நீ உறுதியோடிரு....

எரிமலைகள் ஒரு போதும்
உறங்கியதில்லை
அவை ஒருநாள்
பெருநெருப்பாய் விரிந்தெழும்
இது விதியல்ல
இயற்கையின் நியதி.

உனக்காய் உன் போன்றவர்களுக்காய்
உலகின் மனச்சாட்சியை எழுப்புவோம்
இன்றில்லையென்று ஏங்காதே
என்றைக்கோ ஒருநாள் எங்களுக்கான
ஒளிக்கீற்று வெளிக்காது போகாது.

இருளுக்கு ஒளி தந்து
பகலுக்கு வெயில் தந்து
இருளாப் பொழுதுக்காய் விழித்திருந்து
வீழ்ந்தோரின் கனவுக்குப் பொருளுண்டு
காலத்தின் பதிலுண்டு....!
அதுவரை காத்திருப்பாய்.

13.11.2013 (இறுதிவரை களமுனையில் வாழ்ந்து இருக்கிறாளா இல்லையா எனத்தேடிய தோழி திடீரென வந்து சேர்ந்துள்ளாள்.சொல்லுக்குள் அடங்காத் துயரைச் சுமந்த அவள் துயரின் ஒரு துளியின் நினைவோடு)

Tuesday, November 5, 2013

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

காலம் 2003 ஆடி...,

இரவு கரையும் ஈரத்தில்
நந்திக்கடல் ஆழத்தில்
நிலவு கரையும் நாளொன்றில்
அர்த்த இரவொன்று....!

அமைதியாய் ஓடியலைந்த
அலையில் முகம் நனைத்த
அன்றைப் பொழுதின் இனிமை
இதய அறைகளில்...!

காலம் 2009 மேமாதம்....,

காலழைந்த அந்தக்
கன இருளின் திரையூடே
களமாடியகதை சொன்ன தோழியின்
காலடிகள் மீளத் தேடியது நினைவு....!

ஆழத்தொலைந்த அலைகளோடு
என் ஆத்மா நிறைந்த
ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்
ஞாபகம் கண்ணீராய்....!

மீளத்தொலைந்து போனது
கடைசிக் கதைகளும்
காலம் மறைத்த துயர்களும்
பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....!


பிரியம் நிறைந்த தோழி
இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர்
படமாய் ஒருநாள்
பலநாள் இரவைத் தின்றது.

பாவத்தின் கையிலிருந்து வழிந்த இரத்தம்
அவள் ப(நி)லத்திலிருந்து எழுந்த
ஓலத்தின் சாட்சியாய்
அவள் நிர்வாணம்....!

பாவங்களைக் கழுவ முடியாத
பொறுப்பிலிருந்து மீள முடியாக் கண்ணீர்
இரவுகளில் அவளே கனவுகளாய்
கண்ணகித் தெய்வத்தின் கடைசிப் பிறவியாய்....!

காலம் 2013...,

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்
மொத்த உருவாய் மீள மீள வந்து
முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ
இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கருணையை வேண்டிய கண்களால்
அவள் கடைசிக் குரல்
கடற்கரையோரச் சேற்றோடு கரைகிறது
ஒரு கனவு போல் எங்கள் தோழியின்
கடைசிக் கணங்கள்.....!

பழிதீர்க்கும் பகைமை மட்டுமே
மனிதமற்ற மிருகங்கள் மீது
கோபமாய் நெஞ்சு மூட்டும் நெருப்பாய்
இந்த இரவையும் தின்கிறது....!

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'
அந்தச் சொல்லின் வலிமையே
சத்தமின்றி நிரம்புகிறது
இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

01.11.2013 (நள்ளிரவு 1.40)
(இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒளிநாடாவை சனல்4 வெளியிட்ட நாளில் இப்பகிர்வு பதிவு செய்யப்படுகிறது)


(கண்ணகி தெய்வமென இசைப்பிரியாவை ஒப்பிட்டதற்கான காரணம் :- வற்றாப்பளை அம்மன் கோவிலும் நந்திக்கடற்கரையும் வரலாற்றில் பல வீரக்கதைகளைக் கொண்டது. வற்றாப்பளை அம்மனை போராளிகள் கூட நம்பிய கடவுள். அந்தக் கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அநியாயமாக அழிக்கப்பட்டாள். அதற்காகவே கண்ணகை தெய்வத்தின் கடைசிப் பிறவியென குறிப்பிட்டுள்ளேன்.

கற்பு நெறி சார்ந்த அடையாளமான கருத்தில் இல்லை. மற்றும் கண்ணகி என்ற ஒரு பாத்திரத்தின் வடிவமாக இங்கு இசைப்பிரியாவை குறிப்பிடவில்லை.

வற்றாப்பளை திருவிழா காலத்தில் பல போராளி குடும்பங்களின் வீடுகளில் கூட விரதம் மரக்கிற சமையலே இருக்கும். அந்தளவு அவர்களும் கண்ணகையம்மனை மதித்தார்கள்.  நந்திக்கடல் நீரில் விளக்கெரியும் மகிமை மிக்கதாய் சொல்லப்படும் கண்ணகை கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அவலமாய் சிதைக்கப்பட்டாள். வெறும் புராணக்கதையின் கண்ணகியோடு இசைப்பிரியாவை தராசிட்டு நிறுத்துப் பார்க்க வேண்டாம்)

Saturday, November 2, 2013

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் (நெடுங்கதை)

அங்கம் - 1

13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள்.

அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள்.

அன்று பிள்ளையாருக்கு அபிசேகம் செய்ய அம்மா ஐயருக்கு காசு கட்டியிருந்தா. காலமையே கோவிலுக்கு போனார்கள். 87இல் எரிந்த தேர் 2003இல் புதிதாய் நிமிர்ந்து நின்றது. அந்தத் தேரை அதேயூரைச் சேர்ந்த ஒருவர் சுவிசில் இருந்து 80லட்சரூபாய் கொடுத்து புதிதாக செய்து கொடுத்ததாகச் சொன்னார்கள்.

தேர் முட்டிக்கு வடக்காயிருந்த புளியமரம் தனது கிளைகளையும் தன்னோடு வாழ்ந்தவர்களையும் மறந்து உருக்குலைந்து கிடந்தது. இன்னும் அந்த மர அடியில் பல போராளிகளின் வாழ்வு பதியமிடப்பட்டிருக்கும் அடையாளமாக அந்த மரம் உயிரோடு நின்றது.
LTTE1.jpg
இந்திய இராணுவ காலம் அந்தப் புளியமரத்தடி பல போராளிகளின் பகல்நேர மாலைநேர தங்கிடமாகவும் விளையாட்டு மைதானமாகவும் மாறியிருந்தது. 1989இன் மழை நாளொன்றில் வெற்றியென்ற ஒரு போராளி அந்த மரநிழலில் நனைந்தபடி வந்திறங்கினான். சில வாரங்கள் வெற்றியை அந்த நிழல் காத்து வைத்திருந்தது. பின்னர் சில வீடுகளுக்கு வெற்றியென்ற போராளி வெற்றியண்ணாவாகப் போகத் தொடங்கினான்.

அவனுக்கு உறவுகள் யாருமில்லையென்றான். அவனது பூர்வீகம் மலையகமெனச் சொல்லப்பட்டது. கறுத்த இருட்டென்று சொல்ல முடியாத நிறம். கனக்க அலட்டாத ஆனால் தேவைக்கு கதைக்கும் ஒருவனாக அந்த வட்டாரத்தில் பலரை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

ஒருநாள் விடியற்பறம் வெற்றியண்ணா எங்கோ போய்விட்டானென சொல்லப்பட்டது. போகின்றவர்கள் கடமைகள் முடிய தாங்கள் நேசித்தவர்களைக்காண வருவார்கள் என்றுதான் நம்பியிருந்தார்கள் அந்த வட்டாரத்தில் வெற்றியை நேசித்தவர்கள். போய் சிலநாள் கழிந்த ஒரு பகல் வெற்றி வித்துடலாய் வந்து சேர்ந்தான்.

தொட்டிலடியில் ஈபிஆர்எல்எவ் கும்பலுடனான நேரடி மோதலில் அந்தக் கிராமத்தின் நேசத்துக்குரிய வெற்றி வீரச்சாவடைந்து போயிருந்ததாகச் சொன்னார்கள். புளியமரத்துக்கு கிழக்கேயமைந்த வேலியோடு கட்டப்பட்டிருந்த நாகேந்திரம் வீட்டு விறாந்தையில் வைக்கப்பட்ட வாங்கில் வெற்றி வளர்த்தப்பட்டான்.

தலைமாட்டில் சாம்பிராணி புகைத்துக் கொண்டிருந்தது. அவனோடு களமாடி அவனைச் சயிக்கிளில் ஏற்றிச் சென்ற தோழர்கள் அவனையிழந்த துயரில் மௌனித்து நின்றனர்.

அவசர அவசரமாக அவனுக்காகப் பூக்கள் பறிக்கப்பட்டது. அவனுக்கான மாலையை நித்தியகல்யாணிப்பூவில் கட்டிக் கொடுத்தது இவள்தான். வெற்றியண்ணா என இவளாலும் அழைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்ட அவன் கண்முன் கிடந்தான்.

கண்ணீரைத் தவிர வேறெந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாத நிலமை. முதல் முதலில் புளியடியில் வந்து உறவான போராளிகளில் முதலாமவனாக வெற்றி வீரச்சாவடைந்து போனது ஏற்றுக் கொள்ள முடியாத துயராகியது. ஆமி வருவதற்கிடையில் அந்த மாவீரனுக்கான அஞ்சலியை முடித்துவிட வேண்டுமென அவன் தோழர்கள் கடமையைச் செய்தார்கள்.

அம்மா அப்பா உறவுகள் எவரும் இல்லாது வெற்றியென்ற வேங்கையை நேசித்த அந்த வட்டாரத்தில் உறவானவர்களும் தோழர்களுமே அவனுக்கு இறுதி வணக்கம் செய்தார்கள். உறுதிமொழி சொல்லி அந்த வேங்கையைத் தோழில் தூக்கிச் சென்றார்கள் அவன் தோழர்கள்.

சிலவாரம் மட்டுமே வந்து உறவாகி அங்கு வாழ்ந்த நாட்களை மட்டும் நினைவு கொடுத்து அவன் போய்விட்டான். அவன் நடந்த அந்தப் பிள்ளையார் வடக்கு வீதியில் அவனது தடங்கள் அழிக்கப்பட்டது. ஆனால் அவனது கனவுகள் அந்த வீதியில் விதைக்கப்பட்டிருந்தது.
IPKF.jpg
கட்டாயம் போக வேணுமே பிள்ளை ? அம்மா அவளது சிந்தனையைக் கலைத்தா. ஓம் என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னவள் பிள்ளைகள் இரண்டு பேரையும் கையில் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

கடுகுநாவல் பற்றைகள் தொட்டாற்சுருங்கி முட்கள் இரு மருங்கும் அங்கங்கே பூவரவு , வாதநாராணி , கிழுவையென மரங்கள் அழுது வடிந்து கொண்டிந்தது. முன்னுக்கு அப்பாவும் சின்னமாமாவும் போக அடுத்துப் பிள்ளைகளோடு அவள் , அவளைத் தொடர்ந்து பின்னால் அம்மா , தங்கைச்சி, அத்தை நடக்கத் தொடங்கினார்கள்.

அன்றொரு காலம் அந்தப் பாதை  பெரிய லொறி போகக்கூடிய பாதை இன்று ஒற்றையடிப்பாதையாகி கொஞ்சம் அரக்கினால் மிதிவெடி எச்சரிக்கையோடு பழைய நிமிர்வை இழந்து குறுகியிருந்தது வீதி. ஓவ்வொரு காலடியும் ஓராயிரம் கதைகளை அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

அந்த வீதியில் தெற்குக்கரையில் இருந்த இலுப்பை மரத்தைத் தேடினாள். அது அரைக்கம்பத்திற்கு இறக்கப்பட்ட கொடிபோல அவள் பார்த்த காலத்து நிமிர்வையும் உயர்வையும் இழந்திருந்தது. இலுப்பையோடும் அதனை அண்டியும் சூழ்ந்திருந்த பனைமரக்கூடல் வெட்டித் தறிக்கப்பட்டு அடையாளங்களையே காணவில்லை.

அந்த இலுப்படி நிழல் அவளது வாழ்வோடு மறக்காத பெரும் வரலாறொன்றைச் சுமந்தது ஒருகாலம். அவளுக்கு அன்பையும் ஒரு அண்ணனையும் அந்த மரம் தந்ததும் ஒருகாலம். அந்த மரத்தின் ஆழப்பரவிய வேரில் இருந்து அவள் தனது அண்ணனோடு கதைகள் பேசியிருக்கிறாள். பல கதைகள் கேட்டிருக்கிறாள்.

அவனது வீரம் விடுதலைப் போராட்ட வாழ்வென ஒரு சந்ததியின் வாழ்வையும் வரலாற்றையும் அவளுக்கு அறிவித்த ஆசானாக இருந்த அவனுக்கும் அவளுக்குமான கோபம் சண்டை சந்தோசம் என பல கதைகளை அந்த மரத்தடியே அறியும்.

அவளுக்குப் பல விடுதலை வீரர்களை அறிமுகம் செய்ததும் இதயத்தில் நீங்கா நினைவுகளை விட்டுச்  சென்றவர்களின் அன்பும் கிடைத்தது 1988இன் இறுதிக்காலமே. ஊர்களை உழுது போகும் இந்திய இராணுவத்தின் கண்ணிலிருந்து தப்பித்து தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த போராளிகளைக் காத்த ஊர்களில் அவளது ஊரும் ஒன்று.

ஒருநாள் இரவு வீடுகளில் அத்துமீறி நுளைந்து பின்னர் நிரந்தரமான அன்பையும் உறவையும் பெற்றுக் கொண்ட பலருள் அவன் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டான். அவனைச் சந்தித்த மறுநாள் அவள் பள்ளிக்கூடம் போகும் போது இலுப்பை மரத்தின் கீழ் அவன் தனித்திருந்தான். இவளைக் கண்ட போது சினேகமாகப் புன்னகைத்தான். பதிலுக்கு இவளும் புன்னகைத்தாள்.

இஞ்சை வாங்கோ ? அவன் கூப்பிட்டான். அவனிடம் போனாள். உங்களுக்கென்ன பேர் ? எனத் தொடங்கியவன் தனது பெயரையும் சொல்லி அவளோடு அறிமுகமானான். அவன் சொல்லும் பாதைகளில் ஆமியின் நடமாட்டத்தைப் பார்த்துச் சொல்லும்படி கேட்டான்.

அவன் சொன்ன பாதையில் போய் ஆமியின் நடமாட்டத்தை அவதானித்து வந்து சொன்ன போது அவள் அடையாளம் சொன்ன வழியால் அவனது தோழர்கள் அடுத்த ஊரையடைந்தார்கள். அவன் அந்த இலுப்பை மரத்தின் கீழேதான் இருந்தான். அவள் காணும் நெரமெல்லாம் அவன் அதிகம் இலுப்பையின் பெரிய வேரில் இருப்பான். ஏதாவது புத்தகம் ஒன்றை வாசித்தபடி அல்லது காதுக்குள் வோக்மனை வைத்து பாட்டு கேட்டபடி அல்லது வீதியில் போகின்றவர்களை அவதானித்துக் கொண்டிருப்பான்.

ஒரே நேரத்தில் தனது காதுக்குள் இசையையும் கண்ணுக்குள் புத்தகத்தையும் கிரகித்துக் கொண்டாலும் அந்த வட்டாரத்தைத் தாண்டிப் போகும் சயிக்கிளிலிருந்து மனிதர்கள் வரையுமான சகல தரவுகளையும் அவன் தனக்குள் சேமித்து வைத்திருந்தான்.

ஊரில் உலவும் எல்லோரைப்பற்றிய மதிப்பீடும் தனித்தனியாக ஒவ்வொருவரின் கண்ணையும் கதையையும் எடைபோடும் வல்லமையை அந்தப்புலிவீரன் கற்று வைத்திருந்தான். ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் சரியாக கணிப்பிட்டு அவர்களது இயல்புகளை ஒன்று விடாமல் சொல்லக்கூடியவனாக இருந்தது பலருக்கு ஆச்சரியம்; ஆக அவன் ஒரு அதிசயம்.

ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒளிந்திருந்த இதயத்தினுள்ளும் எரிந்து கொண்டிருந்த தாயகவிடுதலைத் தீ அந்தப் புலவீரனுக்குள் அதிகப்படியாகவே அவனது ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

தலைமைத்துவப்பண்பும் மற்றவர்களைத் தன் பார்வையால் சில வார்த்தைகளால் வெல்லும் வரமும் சிலருக்கே கிடைத்த பேறு. அந்தப் பேற்றை அந்தப் புலிவீரனும் பெற்றிருந்தான். பின்னாளில் அவனுடனான நெருக்கமான பழக்கம் அவனையொரு முன்னோடியாகவே அவளுக்கு அறிமுகப்படுத்தியது.

சில நாட்கள் கழிந்த ஒரு மாலைநேரம் மீண்டும் அவனை இலுப்படியில் கண்டாள். நிச்சயம் அவன் அங்கேயிருப்பான் என நம்பிய அவளது எண்ணம் பொய்யாகவில்லை. அன்று அவன் கூப்பிடாமலேயே அவனிடம் போனாள். வீட்டிலிருந்து எடுத்து வந்த இறைச்சிக்கறியையும் சோற்றையும் நீட்டினாள். அவன் சிரித்தான்.

அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்தீங்களே ? ஓம்....அவள் கொடுத்த அந்தச் சிறிய பாசலை வாங்கிக் கொண்டான். அது அவளது அன்பு அவனுக்காக வீட்டில் களவெடுத்துக் கொண்டு வந்த உணவு.

சாப்பிடுங்கோ....அவள் சொன்னாள். இன்னும் அண்ணாக்கள் இருக்கிறாங்கள் அவங்களோடை சேந்து சாப்பிடுறன் என்ன ? என்றான். எல்லாருக்கும் காணாது இப்ப நீங்க சாப்பிடுங்கோ. நாளைக்கு கூட எடுத்து வாறன். அவளது அன்பை மறுக்க முடியாது அவள் கொண்டு வந்து கொடுத்த உணவைச் சாப்பிட்டான்.

அன்றுதான் முதல் முதலாக ஒரு ஆண் அவள் சொன்ன சொல்லைத் தட்டாது ஏற்றுக் கொண்டது முதல் அனுபவம். உரிமையோடும் நம்பிக்கையோடும் அவள் ஏற்றுக் கொண்ட முதல் கதாநாயகன் அவன்தான். இப்போது அவனைத் தினமும் சந்தித்து கதைக்காமல் ஒருநாளையும் தவறவிட்டதில்லை. மாலைநேரம் அவன் இலுப்படி வேரில் அவளோடு பேசுவதற்காகக் காத்திருப்பான். வீட்டிலிருந்து ஏதாவது ஒரு உணவு அல்லது ஏதாவதொரு பாசல் அவனுக்காக கொண்டு போவாள்.


மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் -அங்கம் - 2


அவள் தனது பள்ளிக்கூடம் நட்பு வீடு தனக்குப் பிடித்தது பிடிக்காதது என யாவற்றையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள். அக்கறையோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பான். அண்ணா என்றவள் அழைக்கும் அவளது உரிமையோடு கூடிய  அன்பும் அக்கறையும் பிடித்தது. அப்பாவித்தனமான அவளது கதைகள் விளக்கமற்ற கேள்விகள் யாவுக்கும் பொறுமையோடு பதில் சொல்வான்.

வீட்டில் யாரும் அவளது கதையை இப்படி ஆறுதலாகக் கேட்டதுமில்லை பதில் சொன்னதுமில்லை. அவனே அவளது ஆதாரமென்பது போல ஒன்றும் விடாமல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லுவாள். தாங்கத் தோழில்லையென்ற நினைவு போய் அவளது வெற்றியில் அவன் தோழாய் நிற்கிறான் என்பதனை தனது ஒவ்வொரு அக்கறையிலும் வெளிப்படுத்தியிருந்தான்.

அந்த நெருக்கடி மிக்க நாட்களில் அவர்களுக்கு இரவில் தங்குவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. அவளுக்குச் சொன்ன போது ‚'எங்கடை வீட்ட வாங்கோ அண்ணா...'என அழைத்தாள். அப்போதைய சூழலில் வீடுகளில் போராளிகளை வைத்திருக்கப் பயந்து கதவுகள் மூடிக்கொண்ட காலம். அவளது வீட்டிலும் அவர்களை விரும்பியேற்கப் பயந்தார்கள். அவள் அப்போது அம்மம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தது வாய்ப்பாகியது.

அண்ணா அம்மம்மா நித்திரையானப் பிறகு நீங்க சாப்பாட்டறைப் பக்கத்துக் கதவாலை வாங்கோ நான் திறந்து விடுவேன். அவளது யோசனை பொருத்தமாகத்தானிருந்தது. சொல்லி மறுநாள் இரவு தங்குவதற்கு 3போராளிகளும் அவனும் அவளும் அம்மம்மாவும் வாழும் வீட்டுக்கு இரவு போவதாக முடிவெடுத்தார்கள். இரவு அக்கம் பக்கம் விளக்குகளை அணைக்கும் வரை இலுப்படி பனைவடலிகளுக்குள் இருந்துவிட்டு ஊரடங்கியதும் அவளது வீட்டுக்குப் போனார்கள்.

ஏற்கனவே சொல்லப்பட்ட சமிக்ஞையை அவன் அறிவித்தான். சாப்பாட்டறை யன்னலை ஏற்கனவே பாதி திறந்து வைத்திருந்தாள். அவனது சமிக்ஞை தெரிந்ததும் மெல்ல கதவைத் திறந்தாள். அவனும் 3போராளிகளும் உள்ளே மிகவும் அமைதியாக வந்து சேர்ந்தார்கள். அந்த வெறும்  நிலத்தில் அவர்கள் படுத்துறங்கினார்கள். விடியப்பறம் 4மணிக்கு முன்வீட்டு அப்பு எழும்ப முதல் இவர்கள் வந்த வழியே எழுந்து சத்தமின்றிப் போய்விடுவார்கள்.

ஒருவருக்கு அளவான சாப்பாட்டை தினமும் வீட்டில் களவெடுத்து அவர்களுக்காக ஒளித்து வைக்கத் தொடங்கினாள். சிலவேளைகள் உணவு கிடைக்காமல் களைத்து வரும் நேரங்களில் அந்த உணவே உயிரைத் தந்ததாக அவன் பலமுறை சொல்லியிருக்கிறான்.

தோய்த்து மினுக்கி ஆடைகள் அணியக்கூடிய வசதியில்லாத அந்தக் கடினமான நாட்களில் அவள் அவர்களது ஆடைகளைத் தோய்த்து காய வைத்து சிரட்டைக்கரி மினுக்கியால் மினுக்கிக் கொடுத்த சேட்டை அணிகிற போது வீட்டில் வாழ்ந்த காலத்தையே நினைத்துக் கொள்வான்.

அந்த ஞாபகங்களை அவளோடு பகிர்ந்து கொள்வான். அந்த வருடத்துத் தீபாவழிக்கு அவளுக்கு வீட்டில் புதுச்சட்டை தைத்துக் கொடுத்தா அம்மா. அதனை அம்முறை அவள் அணியவில்லை. கோவிலில் போடப்பட்ட மாவிளக்குகளையும் பலகாரங்களையும் அவனுக்கும் அவனது தோழர்களுக்கும் கொண்டு போய் கொடுத்தாள்.

பிள்ளைக்கு புதுச்சட்டை வாங்கேல்லயா ? கேட்டவனுக்குச் சொன்னாள். நீங்கெல்லாம் புதுசேட் போடேல்ல அதாலை நானும் போடேல்ல. அன்று அங்கிருந்த 5பேரும் அவளது அந்த வார்த்தையில் சற்று நேரம் மௌனித்துப் போனார்கள்.

ஏனம்மாச்சி நீங்க சின்னப்பிள்ளைதானே புது உடுப்பு போட வேணும். நாங்க பெரியாக்கள் தானே அடுத்த வருசமும் போடுவம். என்றான் அவர்களில் ஒருவன். அம்மாச்சியென்ற வார்த்தை அவளுக்கு அன்று புதிதாக இருந்தது. அம்மாச்சியென்று அழைக்கும் வளமை அவளது ஊரில் ஒருநாளும் இருந்ததில்லை. வன்னியாரிடம் அந்த வளக்கம் இருந்ததையும் அந்த அண்ணா மூலமே அறிந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட 2மாதங்கள் அவனும் அவனது தோழர்கள் சிலரும் இரவு நித்திரை கொள்ள அவள் உதவியது தனது பெரிய சாதனைகளில் ஒன்றாகவே அவள் நினைத்து பெருமிதப்படுவதுண்டு. எல்லாம் அவன் தந்த துணிச்சலாகவே எண்ணினாள். தொடர்ந்து ஓரிடத்தில் தங்குவதில் உள்ள பாதுகாப்பு காரணங்களை உணர்ந்து பின்னர் இரவுகளில் வெவ்வேறு இடங்களைத் தெரிவு செய்து அவனும் அவனது தோழர்களும் அலைந்தார்கள்.

எங்கு போனாலும் எவ்வளவு அலைச்சல் என்றாலும் இலுப்படி வேரில் இருந்து தன்னை மறப்பது அவனுக்குப் பிடித்த விடயங்களில் ஒன்றாகியது. மரங்களோடும் மர நிழல்களோடும் ஓய்வில்லாத நிம்மதியில்லாத அலைவு தொடர்ந்தாலும் அந்த வாழ்வில் ஒரு திருப்தியிருந்ததை தனது வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் வெளிப்படுத்துவான்.

போராட்ட வாழ்வின் கடினங்களில் இதுவொன்றும் பெரிதில்லையென்றுதான் சொல்லுவான். அவர்கள் யாவரிலும் பாசம் இருந்தாலும் தனியாக அவள் நேசித்த அண்ணாமீது அவளுக்கிருந்த அன்பு அதீதம்தான். அவனுக்காக உயிரையும் விடச் சொன்னால் விடக்கூடியவளாகவே மாறிப்போனாள்.

அந்தப் பதின்மவயதில் அவளுக்கான அன்பை ஆதரவை வீரத்தை வெற்றியை சரியான வழியைக் காட்டியவனும் அவனாகினான். பதின்மவயதுக் கனவுகளைச் செப்பனிட்டு அவளுக்கு வழிகாட்டியாய் சிலநேரம் அதிகாரியாய் ஆசிரியனாய் அவளது குடும்பத்தில் பிறக்கவில்லையென்றதைத் தவிர அத்தனை உரிமையும் அவனுக்கிருந்தது.

000                  000                  000
அவள் மாலைநேர வகுப்புக்கு போய் வரும் வழியில் அயல் ஊரைச்சேர்ந்த ஒரு இளைஞன் அவளுக்கு பின்னால் சயிக்கிளில் வருவது பாடல்கள் பாடுவதென தொடர்ந்தது. அவளது மாமி ஒருவர் அந்த இளைஞன் அவளைத் தொடர்வதை அவதானித்து அப்பாவுக்குச் சொல்லிவிட்டிருந்தா. அதனை விசாரித்து அப்பா அவளுக்கு அடித்துவிட்டார்.

அவனைத்தான் தேடிப்போனாள். நடந்தது யாவையும் அவனுக்குச் சொல்லியழுதாள். அன்று நிகழ்ந்த சுவாரசியம் அவள் வாழ்வில் நினைத்து நினைத்துச் சிரிக்கும் விடயமாகியும் போனது. அருகில் இருந்த மற்றவர்களுக்கு அவளது அழுகை சிரிப்பாக.... அவன் கேட்டான் பிள்ளைக்கு அந்தப் பொடியனை விரும்பமோ ? இல்லை.

நான் சும்மா பகிடிக்குத் தான் அப்பிடிக் கேட்டனான் அப்பாவில கோவிச்சமாதிரி என்னிலயும் கோவிக்கிறேல்ல சரியா...? பாப்பம் இனிமேல் அந்தப் பொடியன் பின்னாலை வந்தா சொல்லுங்கோ நாங்க பாப்பம் எனச் சொன்னான். வீட்டில் வாங்கிய அடியின் வலி அவன் நாங்கள் இருக்கிறோம் என்றதொடு மறந்து போயிற்று.

சிலநாள் கழித்து ஒருநாள் பின்னேரம் அவனிடம் போனாள். அன்று 15இற்கு மேற்பட்டவர்கள் அங்கேயிருந்தார்கள். அண்ணா இஞ்சை வாங்கோ ஒரு கதை....! அவன் சற்றுத் தூரம் தள்ளி நின்றவளிடம் போனான். அண்ணா ஒரு கதை சொல்லப்போறன் ஒருதருக்கும் சொல்லப்படாது சரியோ ? சரி சொல்லுங்கோ என்ன கதை ?

அண்டைக்குச் சொன்னன் ஒருதன் எனக்குப் பின்னாலை வாறானெண்டு அவன் இண்டைக்கு நான் வரேக்க என்ரை கரியரில கடிதமொண்டைச் செருகீட்டுப் போயிட்டான். இந்தாங்கோ என அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். ஏற்கனவே அந்தக் கடிதம் அவளுக்கு கொடுக்கப்பட்டதை இன்னொரு போராளி அவதானித்ததை அவனுக்குச் சொல்லியிருந்தான் என்பதனைக் காட்டிக் கொள்ளாமல் அப்பிடியா ? அவருக்குப் பொறுங்கோ நல்ல சாத்துக் குடுத்து விடுறன் எனச் சொல்லிக் கொண்டு கடிதத்தைப் பிரித்தான்.

என்னண்ணா அந்த லூசு எழுதியிருக்கு ? கேட்டாள். இந்தாங்கோ வாசிச்சு எனக்கும் சொல்லுங்கோ என கடிதத்தை திருப்பி நீட்டிச் சிரித்தவனுக்கு இல்லை நீங்களே வாசியுங்கோ என மறுத்தாள். கடிதத்தை வாசித்தபடி சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீங்கள் ? கடிதத்தை பொடியன் சரியான சீரியசா எழுதியிருக்கிறான். அது சனியன் அவள் கோபித்தாள்.
உங்களுக்கிப்ப எத்தின வயசு ? 15. பெரிய அக்கா. பிறகேன் பயம்....! அவள் அழுதாள். சரி அழப்படாது நீங்க பெரிய பிள்ளை இனி இப்பிடி கடிதம் வரும் பொடியள் பின்னாலை வருவாங்கள் இதுக்கெல்லாம் பயப்பிட்டு ஒளிக்கக்கூடாது. உங்களுக்குப் பிடிக்காததை உங்களுக்குச் செய்தால் இல்லது இப்பிடி கடிதம் யாரும் எழுதினா திருப்பி கதையுங்கோ இல்லது நானிருக்கிறன் அவைக்கு கதைக்க சரியோ ? படிக்கிறதில மட்டும் நல்ல மாக்ஸ் எடுத்தா காணாது எங்கடை உரிமையை மறுக்கிறவையை இல்லது எங்களுக்கு பிடிக்காததை எங்களுக்குச் செய்யிறவைக்கு எதிராயும் நாங்கள் கதைக்க வேணும்.

அப்போது அவன் பாரதியாரைப் பற்றிச் சொன்னான். புரட்சியின் அடையாளமாக குறுகிய தொகையில் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகள் பற்றிச் சொன்னான். ஒரு வித்தியாசமான சிந்தனையாளனாகவும் பெண்ணை அவன் போராடும் குணமுள்ளவளாகவும் விவரித்தான். பெண்ணியம் போராட்ட குணம் இதுவெல்லாம் அந்தப் 15வயதில் அவளுக்கு குழப்பமான சொற்களாகவே இருந்தது. ஆனால் அவன் சொன்ன போது அதுவே அவளில் வீரத்தை விதைத்த வார்த்தைகளாகக் கருதினாள்.

அப்ப என்னையும் இயக்கத்துக்கு எடுங்கோவனண்ணா ? உந்த அழுமூஞ்சியளை இயக்கத்துக்கு எடுத்திட்டு பிறகு அண்ணா நீங்கள் தான் எல்லாத்துக்கும் ஓடிப்போக வேணும். சற்றுத் தள்ளியிருந்த ஒரு போராளி சொல்லிச் சிரித்தான். அதற்கும் அழுதாள்.

 முதல் முதல் அவள் முகத்தை நிமிர்த்திச் சொன்னான். இனிமேல் அழுது கொண்டு வரப்படாது எங்களுக்கு முன்னாலை அழவும் கூடாது. இனி நீங்கள் பெரிய பிள்ளை ஒருதருக்கும் பயப்பிடக்கூடாது. அப்பாட்டை அடிவாங்கீட்டும் இஞ்சை வந்து அழப்படாதெண்டும் சொல்லுங்கோண்ணை.... இன்னொருத்தன் சீண்டினான்.

உவர் நெடுகலும் என்னோடை கொழுவிறார் அண்ணா ஒருநாளைக்கு என்னட்டை அடி வாங்குவாரெண்டு சொல்லுங்கோ. இவ பெரிய சண்டியன் தான மறுபடியும் அவன் சொன்னான். இவன் இந்த கடிபாட்டை பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றான். ஒரு கட்டத்தில் அந்தப் போராளிக்கு முதுகில் அவள் அடித்தேவிட்டாள்.
பாருங்கோ உங்கடை தங்கச்சி வயசு மூத்த எனக்கே கைநீட்டிறாள்...! உப்பிடித்தான் அந்தப் பொடியனுக்கும் ஏதும் செய்திருப்பா. அவனும் வேண்டுமென்றே அவளைத் தொடர்ந்து சீண்டினான்.

அன்று தான் அவள் கோபத்தை அவர்கள் முன் காட்டினாள். சாதுவாய் அறிமுகமானவள் அன்று காளியாகினாள். அங்கிருந்த மரங்களைச் சுற்றியோடிய அந்தப் போராளியை கலைத்து கலைத்து அடித்தாள். அவன் நகைச்சுவையாக அவளைச் சீண்டியதை தன்மீதான வெறுப்பில் அவன் செய்வதாக நினைத்து நகத்தால் அவனது கைகளில் விறாண்டிவிட்டாள்.

ஐயோ காளி விறாண்டீட்டாளண்ணா காப்பாற்றுங்கோ...என அவனுக்குப் பின்னால் போயொழித்தான். உனக்குக் காணாது என்பது போல மற்றவர்கள் சொன்னார்கள். முகத்திலையும் விறாண்டிவிடு பிள்ளை உவனுக்கு வாய் கூட....சிலர் இவளுக்கு ஆதரவாகச் சொன்னார்கள்.

சரி விடுங்கோ பாவம் அவன் சும்மா பகிடிக்குத்தான் அப்பிடிக் கதைச்சவன். என சமாளித்தான். அவளுக்கு கோபம் குறையவில்லை. அவனைத் திருப்பியும் அடிக்கவே நின்றாள். இராணுவப் பயிற்சியெடுத்த ஒருவன் தன்னிடம் அடி வாங்குகிறான் என்றதே தனது துணிச்சல்தான் என பெருமிதப்பட்டாள்.

அவன் ஒற்றைக் கையால் பிடித்தாலே தாங்காத வலியை அவனால் தர முடியுமென்றதை அந்தச் சின்ன வயதில் அவள் நினைத்ததேயில்லை. அவளது அந்த அடியை அவன் ரசித்து வாங்கியிருந்ததை அவளுக்கு 17வயதான போது அவன் சொன்ன போது அவளால் சிரிப்பை மறக்க முடியவில்லை.

இந்திய இராணுவ காலத்தில் கிட்டத்திட்ட இரண்டரை வருடம் அந்த வட்டாரத்தில் வாழ்ந்த போராளிகள் பலரின் அன்பைப் பெற்றிருக்கிறாள். ஆனால் அவள் நேசித்த முதல் அண்ணாவும் முதல் கதாநாயகனுமானவன் அவனது அம்மா அவனைத் தேடி ஒருமுறை பார்க்க வந்த போது அவளைத் தன் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினான். இதென்ரை தங்கைச்சி...உங்கடை பிள்ளையம்மா.....!

அவன் சொன்னது போல அவனது அம்மாவிற்கும் அன்றைய சில மணித்தியாலத்திலேயே அவள் பிள்ளையாகினாள். அவனிடமிருந்து விடைபெறும் போது அவளை அணைத்து முத்தமிட்டுச் சொன்னா அம்மா ‚'வீட்ட வா மோன'. அம்மா தங்களது வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தா.
இவளை வீட்டில் ஆச்சி சொல்லுவா...உன்னை நாங்க மட்டக்களப்புச் சோனீட்டைத் தானே வாங்கினனாங்கள்...அந்தச் சோனிதான் உன்னை வித்தவன். ஆச்சி இவளது அரியண்டம் குழப்படி தாங்கேலாமல் சொன்னதை அப்போது நினைத்துப் பார்த்தாள். அப்ப நான் இவேட வீட்டதான் பிறந்தனோ ?

அவனது அம்மா வந்து போய் சிலநாளில் அவனிடம் இதுபற்றிச் சொன்னாள்.; நானும் உங்கடை வீட்டிலதான் பிறந்தனோ அண்ணா ? சிறு வயதில் பிள்ளைகளுக்குச் சொல்கிற வார்த்தைகள் பிள்ளைகளின் மனங்களில் வடுவாகக்கூட மாறிவிடும் வல்லமையை உணர்ந்தானோ என்னவோ ஆச்சி சும்மா சொல்றவா அப்பிடியெல்லாம் இல்லை. நீங்கள் குழப்படியெண்டு ஆச்சி அப்பிடிச் சொல்லியிருப்பா. அவன் சமாளித்தான்.

அவள் சொல்ல விரும்பும் கேட்க விரும்பும் எல்லாக் கதைகளையும் சொல்லவும் அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்கவும் அவளுக்காக எல்லாமுமாக அவனிருந்தான். ஒருநாள் அவன் அந்த ஊரைவிட்டு வேறு இடம் பொறுப்பேற்றுப் போவதாகச் சொன்னான். அதுவரையில் அவள் நினைத்திராத பிரிவு அது. பழையபடி அழத்தொடங்கினாள்.

காலம் அழைக்கும் போது கடமையை ஒவ்வொரு போராளியும் மறுத்து ஒதுங்கியதில்லை அதுபோல அவனும் தனது கடமைக்குத் தயாராகினான். அவன் பிரியப் போகும் ஒவ்வொரு நாளையும் அவள் தனது மனவேட்டில் துயரோடே பதிவு செய்து கொண்டிருந்தாள்.


மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
அங்கம் - 3
--------------------------------------------------------------------------------------------------

அவன் அவளையும் அதுவரைகாலம் அடைக்கலம் கொடுத்த வீடுகளையும் விட்டுப் பிரியும் கடைசி நாளது. அவன் அவளுக்காக ஒரு புதிய நாட்குறிப்பேட்டைக் கொடுத்தான். இண்டையிலயிருந்து நீங்கள் இனி டயறி எழுதுங்கோ. திரும்பி நாங்க சந்திக்கேக்க இன்னும் பெரியாளா வளந்திருப்பீங்கள் அப்ப நான் வாசிச்கத் தரவேணும். எதுவும் எழுதப்படாத நாட்குறிப்பேட்டில் அவளது பெயரை முதல் பக்கத்தில் எழுதியிருந்தான்.

அவளது ஊரிலிருந்து 7மைல் தொலைவில் இருக்கும் தனது வீட்டுக்கு நேரம் கிடைக்கிற போது போகச் சொன்னான்.
யாரினது தொடர்பு அறுபட்டாலும் நிச்சயம் வீட்டாரின் தொடர்பு இருக்குமென்று நம்பினான் போல. 2தடவைகள் அவனது அம்மாவிடம் போய் வந்தாள். அவன் அங்கிருந்து போன பின்னர் ஒருமுறை விடுமுறையில் வந்து நின்றதாக அம்மா சொன்னா. அவள் வந்தால் தனது அன்பைத் தெரிவிக்கச் சொன்னதாக அம்மாவிடம் சொல்லியிருந்தான்.

குறுகிய காலத்தில் பழகி நிரந்தரமாய் அவளின் உலகமாய் ஆகியிருந்த அவன் அவளையும் விட்டு அந்தக் கிராமத்தையும் விட்டுப் போய்விட்டான். அவனில்லாத அந்த நாட்கள் அவனில்லாத இலுப்பமர வேர் அவனுக்காக அவள் மாற்றிக் கொண்ட அவளது இயல்புகள் எல்லாமே அவனில்லாத வெறுமையை ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கினாள்.
DSC-8150-1-jpg_103137.jpg
அவன் மாலை வேளையில் இருக்கும் இலுப்பமர வேரில் போயிருப்பாள். அவனோடு பேசியபடி அவனுக்குச் செய்த குறும்புகள் குழப்படிகள் கோபித்த நிமிடங்களெல்லாம் கண்ணுக்குள் வரிசை கட்டி வந்து போகும். அவன் மீண்டும் வருவானென அந்த இலுப்பைமர வேர் சொல்லிக் கொள்வது போலிருக்கும் பிரமையை உணர்வாள். அவனது பெயரை கத்தியால் அந்த வேரில் ஒருநாள் எழுதிவிட்டாள். அவன் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு....!

அவன் போய் ஒருவாரத்தின் பின் அவன் கொடுத்த நாட்குறிப்பேட்டில் எழுத முதல் பக்கத்தை விரித்தாள். அவளது பெயரை எழுதி அதன் கீழ் அன்புள்ள என் தங்கைச்சிக்கு எனது ஞாபகமாக விட்டுச் செல்கிறேன். திரும்ப நான் வரும் போது எனக்குச் சொல்ல என்னோடு கதைக்க விரும்பும் எல்லாவற்றையும் இதில் எழுதி வைக்கவும்.

அடுத்த பக்கத்தை விரித்தாள். 11.04.1990. என வலது மூலையில் திகதியிட்டாள்.
என் அன்புள்ள அண்ணாவிற்கு, என ஆரம்பித்து எழுத வேணடும் போலிருக்கும் போதெல்லாம் எழுதத் தொடங்கினாள். அவன் திரும்பி வரும் போது அந்த நாட்குறிப்பை அவன் வாசிக்க வேண்டுமென்ற விருப்போடு எழுதத் தொடங்கியிருந்தாள். அவனில்லாது  போன நாட்கள் ஒவ்வொன்றும்  வெறுமையாகியது.

எங்கிருந்தோ வந்தான் இந்த இடைப்பட்ட காலத்தில் அவளது மாற்றங்கள் யாவுக்கும் காரணியாக இருந்தவன். வீட்டில் எவ்வளவோ பேர் உறவாக அன்பாக இருந்த போதும் அவன் காட்டிய அன்பு எல்லாரையும்  விட மேலாயிருந்தது. அண்ணாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் அவனைப் போல் தான் இருப்பார்களோ ? தங்கள் தங்கைகள் மீது இவன் போலத்தான் ஆழுமையும் அன்பும் செலுத்துவார்களோ என பலமுறை யோசித்திருக்கிறாள்.

அவனைப் பார்க்க விரும்பும் தருணங்களில் அவன் உலவிய தெருவில் அவன் அமர்ந்து இவளோடு கதைத்த இலுப்படி வேரில் போயிருப்பாள். யாருக்கும் தெரியாது அவனுக்காக அழுதிருக்கிறாள்.

அவன் இறுதியாய் சொல்லிவிட்டுப் போனவற்றில் அவளது கல்வியையே அதிகம் கவனப்படுத்தியிருந்தான். அந்த முறை றிப்போட் வந்திருந்தது. அதனைப் பார்க்கவும் தனது அன்பைச் சொல்லவும் அவனில்லாது போனான்.
20081124173031215734_8.jpg
காலம் போய்க்கொண்டிருந்தது. அவன் போனதன் பின்னர் ஊரில் புதிதாய் வந்த போராளிகள் வீடுகளுக்கு வந்து போனார்கள். யாரோடும் அதிக அன்பைச் செலுத்தக் கூடாதென்பதில் அவதானமாக இருந்தாள். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகியது அவன் திரும்பி வரவேயில்லை. அவனது அம்மாவும் சகோதரர்களும் இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து போனார்கள். அவர்களது தொடர்பும் இல்லாது போனது.

2ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் அவளது ஊர் ஒட்டுமொத்தமாக மனிதர்களை இழந்தது. போராளிகள் மட்டுமே மிஞ்சி ஊரைக்காக்க மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். அவளது குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. போன இடத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் படிக்கச் சேர்ந்தாள். அங்கே அறிமுகமான தோழன் ஒருவன் அவனது ஊர் இடப்பெயர்வு பற்றிச் சொன்னபோது இவள் அன்புக்குரிய அண்ணாவின் குடும்பமும் அடுத்த ஊரில் இடம்பெயர்ந்து வந்து இருப்பதனை அறிந்து கொண்டாள்.

அவனிடம் அவர்களது முகவரியைக் கேட்டாள். முதலில் யோசித்தவனுக்கு அவள் அந்தக் குடும்பத்தின் போராளி மகன் பற்றிச் சொன்னாள். தானே அவர்களது வீட்டுக்கு அவளைக் கூட்டிப்போவதாக வாக்குறுதியும் கொடுத்து ஒருநாள் பின்னேரம் மாலைநேர வகுப்பு முடிய அவளைக் கூட்டிக் கொண்டு போனான். திரும்பவும் தனக்குப் பிடித்தவனின் குடும்பத்தைச் சந்திக்க போவதையிட்டு மனசுள் ஊறிய மகிழ்ச்சியை சொல்லால் புரிவிக்கத் தெரியவில்லை.

அவன் தான் முதலில் அவர்களது வீட்டிற்குள் போனான். பெரியம்மா....! என அவன் அழைக்க அம்மா வெளியில் வந்தா. அவளைக் கண்டதும் அம்மா வா மோன என அழைத்தா. வாணை உள்ளைவா என அவளை விறாந்தையில் இருக்க வைத்தா. பிள்ளை பிளேன்ரி குடிக்காது கடையில போய் சோடா வாங்கிவா தம்பி...! என அவளது வகுப்புத் தோழனை அனுப்பினா.

அவள் பிளேன்ரீ குடிப்பதில்லை. சிறுவயது முதலே அந்தப் பழக்கத்தை விட்டிருந்தாள். பிளேன்ரீ  குடிக்கும் பழக்கம் விடுபட்டுப் போனது பற்றி அவள் ஒருமுறை அவனுக்குச் சொன்னது நினைவில் வந்து போனது. அதைக்கூட நினைவில் வைத்து அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறான். அவளை அந்த வீடு தனது மகளாக ஏற்றுக் கொண்டதற்கு சான்றாக அம்மா அவளைக் கவனித்தா.

அண்ணா வாறவரே ? அவள் யோசித்து யோசித்துக் கேட்டாள். அண்ணா போனாப்பிறகு ஒரு நாளும் எங்கடை வீட்டை திரும்பி வரேல்ல. சொல்லி முடிக்க முதல் முன்னுக்கு வழிந்தது கண்ணீர். அம்மா அதிர்ந்து போனா. ஏனடா பிள்ளைக்குத் தெரியாதே ? போனமாதம் அவன் வீரச்சாவெல்ல ? என்ரை பிள்ளை சேதி அறிஞ்செல்லோ வந்ததெண்டு நினைச்சனடா.....!

அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் உயிரை இடுங்கியெடுத்தது போலிருந்தது. அதிர்ச்சி , அழுகை , ஏமாற்றம் , என உணர்வுக் குழையலாய் அவன் பற்றிய அவளது எண்ணங்கள் கண்ணீராய் வழிந்தது. அம்மா அவளுக்காக வாங்குவித்த சோடாவைக் குடிக்கவோ அதன் சுவையை உணரவோ முடியவில்லை. அவள் நேசித்த அவளது அண்ணா அவளுக்குத் தெரியாமலேயே வீரச்சாவடைந்து போனதை அவனது வித்துடலைக் கடைசியாய் பார்க்கவும் கிடைக்காத தனது இராசியில்லா முகம் மீது கோபமாக இருந்தது.

என்ரை பிள்ளையை நான் நினைக்கேல்லயடா இப்பிடி கெதியிலை போயிடுவனெண்டு....! அம்மாவும் அவளோடு சேர்ந்து அழுதா. அந்த விறாந்தையில் மூடப்பட்டிருந்த பலகை அலமாரியை அம்மா திறந்து காட்டினா. அந்த அலமாரிக்குள் அவளது அண்ணா சிரித்தபடி வரிச்சீருடையில் மாலையணிந்து வீரவணக்கம் என எழுதப்பட்டிருந்த படமாய் தொங்கினான்.
Bild1.jpg
லீவில வீட்டை வந்தானெண்டா வீடு கூட்டிறதில இருந்து சமையல் மட்டும் என்ரை பிள்ளை எல்லாம் செய்து தரும். ஒரு தங்கைச்சியிருந்தா அம்மாக்கு உதவியா இருந்திருக்குமெண்டு அடிக்கடி சொல்லும் என்ர பிள்ளை. தம்பிமாருக்கெல்லாம் அவன் தான் உடுப்பெல்லாம் தோச்சுக் குடுப்பான். என்ரை பிள்ளை இயக்கத்துக்கு போக முதலும் எனக்கு நல்ல உதவி நாட்டு நிலமை அவனை எங்களோடை இருக்கவிடாமல் பிரிச்சுப் போட்டுது.
இயக்கத்துக்கு போன பிள்ளைக்கு களத்தில மரணம் வருமெண்டு நினைச்சனான் தான் ஆனா இப்பிடி 24வயதில வருமெண்டு நான் கனவிலயும் நினைக்கேல்ல...!

பிள்ளையைப் பற்றி நெடுகக் கதைக்கிறவன். நீங்கள் என்ரை வயித்தில பிறந்தமாதிரித்தான் அவனுக்கு நல்ல பாசம். நெடுகலும் தங்கைச்சி தங்கைச்சியெண்டு உங்களைப் பற்றி இந்த வீட்டை வந்து நிண்ட நாளெல்லாம் கதைக்க மறந்ததில்லை. சாகிறதுக்கு முன்னம் ஒரு 4நாள் லீவில வந்து நிண்டவன். உங்களைத் தேடினவனாம் நீங்கள் இடம்பெயர்ந்து போட்டீங்களாமெண்டு யாரோ சொன்னவையாமெண்டு சொன்னவன்.

அந்த வீட்டில் அவளுக்கான தொடரும் உறவுகளையும் அன்பையும் அவன் மீதமாக விட்டுச் சென்றிருந்தான். எங்காவது தேடி அவனது குடும்பத்தைக் கண்டு பிடிப்பாள் என நம்பினானோ என்னவோ அவளைப்பற்றி அந்த வீட்டில் சொல்லி வைத்ததோடு நின்றுவிடாமல் தனது குடும்பத்தில் ஒருத்தியாகும் தகுதியையும் கொடுத்துவிட்டு மறைந்திருந்தான்.

அவன் திரும்பி வரும் போது அவன் வாசிப்பானென அவள் எழுதிய நாட்குறிப்பேட்டை அம்மாவிடம் கொடுத்தாள். இதானம்மா எனக்குக் கடைசியா அண்ணா தந்தது. சொல்ல முதலே அழுகை முந்திக் கொண்டது. அம்மா அவளைத் தன்னோடு அணைத்து அவளை ஆறுதல்படுத்தினா.

கருவிலிருந்த காலம் தொடக்கம் இறுதிச் சந்திப்பு வரையும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தவன் மீதான அம்மாவின் பாசத்துக்கு நிகராக குறுகியகால அறிமுகத்தில் அவன்மீது கொண்ட பாசத்தைச் சொல்லத் தெரியாதவளாக அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவளது அழுகையில் அம்மாவும் கலங்கித்தான் போனா.

அம்மா அவன் பற்றி தனது கருவிலிருந்த காலம் முதல் கடைசியாய் அவனைச் சந்தித்தது வரையும் கதைகளை தனது நினைவுகளை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தா. அந்த வீட்டில் அம்மாவுக்கு எல்லாமே ஆண்பிள்ளைகள் அம்மாவுக்கு அவனே எல்லாமுமாயிருந்திருக்கிறான்.



மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
பாகம் 4

அம்மாவிடமிருந்து விடைபெற்ற போது அவனது படங்களில் சிலவற்றை அம்மாவே அவளுக்கு கடித உறையில் வைத்துக் கொடுத்தா. அத்தோடு அவள் அம்மாவிடம் கொடுத்த நாட்குறிப்பேட்டையும் திருப்பிக் கொடுத்தா அவன் தந்தது அவன்ரை ஞாபகமா வைச்சிரம்மா. கிட்டத்தான இருக்கிறீங்கள் ஏலுமான வேளை வா ராசாத்தி.

அம்மாவிடமிருந்து விடைபெற்றாள். வீதி வழியே அழுகையாகவே இருந்தது. விதியை கடவுளை எல்லாரையும் நொந்தாள். அவள் நேசித்த முதல் உறவு அவள் வாழ்வில் பெரும் பங்கையும் பாதிப்பையும் தந்த பெருமைக்குரிய அவனைக் கொண்டு போன காலத்தை திட்டினாள். கடவுளெல்லாம் கல்லென்று மனசுக்குள் மறுகினாள்.
traurig_zpsf894ddc9.jpg
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத துயரை மனசுக்குள் சுமந்து கொண்டு காலத்தைக் கடத்தினாள். காலங்கள் மாறியது. இடப்பெயர்வுகளும் எறிகணைகள் விமானத் தாக்குதல்கள் என யாழ்மாவட்டம் தனது இயல்பை இழந்தது. தினசரி ஒவ்வொரு ஊர்ச்சந்தியிலும் சோக இசையோடு யாரோ ஒரு வீரனின் மரணத்தை அல்லது நினைவுநாளை நினைவு கூரும் ஒலிபெருக்கிகள்.....!

புலிகளின்குரல் ஒலிபரப்பு அன்றாட மக்களின் வாழ்வை அவலத்தை தொடரும் விடுதலைப் போராட்டத்தின் வீரத்தைத் தனது குரலால் பகிர்ந்து கொண்டிருந்தது. ஈழநாதம் நாளேடு அன்றைய காலத்தில் மண்ணுக்கானவர்களின் கதைகளைச் சொல்லும் பத்திரிகையாக மக்களிடம் சென்று கொண்டிருந்தது.

படிப்பு அலைவு என அவளது காலமும் தன்வழியே....! காலவோட்டம் அவளது வாழ்விலும் மாற்றங்கள். நினைத்தவை வேறாயும் நடந்தவை வேறாயும் காலம் எழுதிய கதைகளில் பலரது வாழ்வும் மரணமும் அவலத்தின் உச்சகாலம் போலாகியது.

அவளது அண்ணாவின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து வந்த இடப்பெயர்வில் இடம்மாறிப்போனார்கள். அவர்களது தொடர்புகள் விடுபட்டுப் போனது. என்றாவது அவர்களை மீளவும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்குள் பெருமரமாய் விரிந்தது.

ஒரு உயிரை இழந்து போனாள் ஆனால் மேலும் பலர் அவள் இழந்து வருந்திய உயிரை நினைவில் தருமாப்போலவும் மீளுயிர் தந்தாற்போலவும் ஆண் பெண் போராளிகளில் அவளும் ஒருத்தியாக அவர்களின் விருப்பத்துக்கு உரியவளாக பலர் மீண்டும் வந்தார்கள்.

FemaleLTTE1980s.jpg
ஒருமுறை உம்மோடை கதைச்சா பிறகு அவையளை உம்மடை ஆக்களாக்கீடுவீர் என்ன ? ஒரு போராளி சொன்னான். நீர் அரசியல் செய்யலாம் அதையும் அவன்தான் சொன்னான். சிரிச்சுச் சிரிச்சு ஆக்களை விழுத்தீடுவீங்கள் இன்னொரு போராளி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

தனக்கான கடமைகளைப் புரிந்து தன்னால் முடிந்ததைச் செய்யும் கனவில் அலைந்தாள். புதிய புதிய தொடர்புகள் உறவுகள் அவளைத் தங்கள் வீடுகளில் ஒருத்தியாக உறவில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டார்கள்.

அந்தப்பயணத்தில் ஒரு போராளி வந்தான். அடிக்கடி அவனைச் சந்தித்துக் கொள்ளும் தேவைகள் இருந்தது.எல்லோரையும் போலல்லாது எல்லாவற்றிற்கும் மேலான உறவாய் அது மலர்ந்தது. நெஞ்சுக்குள் சத்தமின்றி வந்தமர்ந்தான் அந்தப்புலிவீரன்.


மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
பாகம் 5

அவளது வாழ்வில் அடுத்த பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் கொடுத்த இரண்டாவது ஆண் அவன். நட்புக்கு அர்த்தம் சொன்னவனும் அவனேயாகினான். நண்பனாய் , நல்லாசானாய் அவனுடனான நாட்கள் வித்தியசமானவை.

அவளிலும் 3வயதால் மூத்தவன். வடபகுதியில் கடற்கரைக் கிராமமொன்றில் பிறந்து பெரு நகரமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவனை காலம் புலியாக்கியது. திறமையான மாணவனாகவும் அதேநேரம் பல்கலைக்கழகம் செல்லும் கனவையும் மனசுக்குள் எழும்பிய கோட்டையில் ஆயிரமாயிரம் கனவுக் கூடுகள் அவனது வாழ்வு பற்றிய எண்ணங்களை விதைத்திருந்தான்.

அவனது கனவுகளில் 1989 பகுதியில் இடியிறங்கியது. பாடசாலை விடுமுறையில் ஊரில் போய் நின்றவனை தேசத்துரோகக்கும்பல் தேசிய இராணுவத்தின் இணைக்க முற்பட்டு அவனைக் கொண்டு போனது. நாட்கணக்காய் அவர்கள் அடித்த அடியும் சித்திரவதைகளும் அந்த வதையிலிருந்து மீண்ட போது அவனை ஒருநாள் புலிகளோடு இணைத்தது.

போராடும் குணத்தையும் தமிழீழ தேசத்தின் விடுதலையையும் விடுதலைப்புலிகளால் மீட்டுவர முடியுமென்று நம்பிய போராளிகளோடு மணலாறு காட்டில் பயிற்சி முடித்து யாழ்மாவட்டத்தில் வந்திறங்கியவன். விடுதலைப் போராட்டத்தின் வீரம் மிகுந்த பக்கங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பலரது வாழ்வின் இழப்பும் ஈடு செய்ய முடியாத தியாகமும் இறைந்து கிடப்பதை வினாடிக்கு வினாடி ஞாபகப்படுத்தியவன்.

உலக விடுதலைப் போராட்ட வரலாறுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் அப்போது யாழில் வெளிவந்த பத்திரிகைகள் அவர்களுக்காக சிறப்பாகப் போகும் நூல்கள் வரையும் வாசிக்கவும் வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளவும் அவளுக்கு வழிகாட்டிய நண்பன் அவன்.
ltte_mortar_units.jpg
ஒரு முதுகுப்பையில் பத்திரப்படுத்த வேண்டிய தனது டயறி , தனது பொருட்களில் பலவற்றை அவளிடமே கொடுத்து வைத்திருந்தான். அழகான தனது கையெழுத்தில் எழுதப்பட்ட டயறியில் அவனால் எழுதப்பட்ட ஒவ்வொரு விடயமும் தேசத்திற்கான பயனுடைய விடயங்களாகவும் தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்களின் நினைவுகளாலுமே நிறைந்திருந்தது.

நீழும் போராட்ட வாழ்வில் மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மடியும் தத்துவத்தைத் தனக்குள்ளே வரித்துக் கொண்ட அந்தப் புலவீரனின் மனசுக்குள்ளும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகளும் இளவயதுக்குரிய கனவுகளும் கரையாமலேயே நிரப்பப்பட்டிருந்தது. இளவயதின் கனவுகளோடும் இலட்சியக் கனவுகளோடும் போராட்ட வாழ்வில் பயணித்துக் கொண்டிருந்தான்.

தனது கனவுகள் விருப்பங்கள் யாவையும் அவளோடு பகிர்ந்து கொள்வான். நீண்ட நேரம் உரையாடல் சிலவேளை சண்டையாக , கோபமாக , அவளைச் சினப்படுத்துவதாக எத்தனையோ முறை அவள் கோபித்துப் போனாலும் தனது சிரிப்பால் சீண்டல்களால் மீண்டும் ஆற்றுப்படுத்திவிடுவான்.

மகிழ்ச்சியின் காலம் எப்போதும் அவளுக்கு நீடித்ததில்லை. ஒரு இழப்பின் கனம் அவனது புதிய உறவின் துளிர்ப்பில் மெல்ல மெல்ல மாற்றம் வருவதாய் நம்பிய காலம் களம் அவனையும் கடமைக்கு அழைத்து அவனும் தூர இடம் மாறிப்போவதாய் ஒருநாள் வந்து நின்றான். போகாதேயென தடுத்து நிறுத்த முடியாத பயணம் ஒவ்வொரு போராளியின் வாழ்வும். அவள் மௌனமானாள்.

தனியே அழுது தனியே துயரில் கரைந்து வாழ்வில் முதல் வந்த நட்பை ஒரு பொழுது அள்ளிக் கொண்டு போகவென விடிந்தது. இறுதிச் சந்திப்பு. மீண்டும் வருவேன் என்றுதான் சொல்லிவிட்டுப் போனான். போகும் போது பெறுமதி மிக்க தனது டயறியை அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அவனுக்குப் பிடித்த அவன் விரும்பியணியும் ஒரு சேட் தனக்கு வேணுமென அவள் அடம்பிடித்த போது என்ன நினைத்தானோ தெரியாது 'சரி வைச்சிரு' எனச் சிரித்துவிட்டுக் கொடுத்தான். அதிக நெருக்கத்தையும் நேசத்தையும் கொட்டி நேசித்தவர்களில் ஒருவன் அண்ணாவாய் மற்றொருவன் நண்பனாய் இருவருமே இடையில் பிரிந்து போனார்கள். ஒருவன் மாவீரனாக மற்றையவன் மரணத்தைத் தேடிக் களத்தில்....!

இனி யார் மீதும் அதிக அன்பைச் செலுத்துவதில்லையெனத்தான் முடிவெடுத்தாள். தான் அதிகம் அன்பைக் கொட்டி நேசித்தால் அந்த உறவைக் காலம் நிரந்தரமாய் தன்னிடமிருந்து பிரித்துப் போவதாக நினைத்தாள். அவளைப் பலர் நேசித்தார்கள். உறவாகினார்கள். அவள் கதை அல்லது சிரிப்பு இரண்டில் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் பிடித்துப் போனது.

மெல்ல மெல்லத் தன்னை வருத்தும் துயர்களிலிருந்து விடுபட்டு வெளியேறி இயல்பாக விரும்பினாள். ஆனால் இழந்து போன இரு பிரிவும் அவளை யார் மீதும் அதிக அன்பைச் செலுத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் அவளும் மாறிப்போனாள். புதிய பாதைதேடிய பயணத்தில் அவளது கனவுகளும் ஆயிரமாயிரம் பேரின் நினைவுகளோடு....!

577179_656888387689081_1909200902_n_zps8
000                    000                           000
திடீரென புதிய மாற்றமாய் காலம் எல்லாரையும் போல அவளுக்கான பாதையைத் தீர்மானித்தது. பாதைகள் மாறியது பயணங்களும் மாறியது. அவளது வாழ்வுப் பயணமும் மாறியது. அது புலப்பெயர்வாக பல்லாயிரம் மைல்கள் கடந்து ஐரோப்பிய நாடொன்றில் அவளும் அகதியாகினாள்.

நாட்டைவிட்டு வெளியேறும் போது நண்பனைத் தேடியலைந்தாள். அவனைக்காணவும் தனது பயணத்தைச் சொல்லவும் தேடினாள். அவன் நின்ற இடத்தை அவளால் அடைய முடியாத தொலைவில் இருந்தான். அவன் கொடுத்த அவனது டயறியை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து தான் சென்றடையும் நாட்டின் விலாசம் தரும் போது அதனை அனுப்புமாறு சொல்லிவிட்டு வெளியேறினாள். அவனுக்குப் பிடித்த சேட் மட்டும் தன்னோடு கொண்டு சென்றாள்.

பயண முகவர்கள் அலைத்த நாடுகளில் அலைந்து திரிந்த போது அவள் காவித்திரிந்த அவளது பிரியத்துக்கினிய தோழனின் சேட் யாரோ கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அவனையே இழந்தமாதிரியான துயரோடு அழுத நாட்களை மறக்க முடியாது.

 என்றாவது தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு அவன் கொடுத்த முகவரிதான் கடைசியில் கைகொடுத்தது. அவனுக்காக அவள் எழுதிய கடிதங்கள் சில அவனுக்குக் கிடைத்து தனது பதிலையும் எழுதியிருந்தான். என்றும் மாறாத மண்ணின் பாசத்தோடும் அவன் எழுதிய கடிதங்கள் ஒரு காலத்தின் பதிவாக....!

மாதக்கணக்காகக் காத்திருந்து வரும் அந்தக் கடிதங்கள் ஊரை உறவை அவளது நேசிப்புக்கு உரிய யாவரையும் கண்முன்னே நிறுத்திவிடும் வல்லமையின் வடிவாக...! ஒருமுறை தனது நிழற்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தான். அவனது டயறி இருக்கும் இடத்தின் முகவரியை ஒருதரம் எழுதிவிட்டாள். அதனை எடுத்து தனக்கு அனுப்புமாறு கேட்டும் எழுதியிருந்தாள்.

திடீரென அவனது தொடர்புகள் விடுபட்டுப் போனது. காரணம் சொல்லப்படாது அவன் மௌனமாகியதாகத்தான் நினைத்தாள். ஆனால் அவன் ஒரு களத்தில் வீழ்ந்தானென்ற செய்தி பல மாதங்கள் கழிந்த ஒரு காலத்தில் வெளி வந்தது. புலத்தில் வெளியாகிய ஒரு சஞ்சிகையில் அவனது படமும் நினைவுப்பகிர்வும் வெளியாகியிருந்தது.

நாட்கணக்காய் அந்தச் செய்தியைப் படித்தாள். பலநாள் தனியே இருந்து அழுதாள். ஆற்றவோ தேற்றவோ ஆட்களற்று அந்த இழப்பை நம்ப முடியாது....!அவன் தனது ஞாபகங்களை மட்டும் அவளுக்கு நிரந்தரமாக்கிவிட்டு மாவீரனாய் துயிலிடம் ஒன்றில் கல்லறையாக....!
9.jpg 


மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

பாகம் 6 - இறுதிப்பகுதி

அவளுக்கானதொரு குடும்பம் குழந்தைகள் என ஒரு உலகம். விதிப்பயனோ அல்லது வாழ்வின் தொடரோ அகதி வாழ்வோடு அவளது உலகம் இன்னொன்றாகியது.

என்னதான் வாழ்வும் வாழும் நாடும் மாறினாலும் அவள் பிறந்த நாட்டின் நினைவையும் அந்த நிலத்தில் அவளோடு வாழ்ந்தவர்களின் நினைவுகளையும் காலம் ஒருபோதும் பிரித்துப் போட்டதில்லை. அகதியானாலும் அழியாத தாயகத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஆயிரமாயிரம் பேரைப்போல அவளுக்கும் ஒருநாள் ஊர்போகும் கனவுகளே வந்து கொண்டிருந்தது.

காலநதி வேகவேகமாக தன் கரைகளை அரித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இழப்புகளின் துயர் இதயத்தை நிறைத்தாலும் இறந்தகாலத்தில் போயிருந்து அந்த நாட்களோடு அலைதலும் உலகை மறத்தலும் சிறய ஆற்றுதல் தான்.

அவ்வப்போது மனசை அலைக்கும் தருணங்களில் ஏதாவதொரு வகையில் ஏதோவொரு நிறைவில் காலங்கள் பயணித்துக் கொண்டிருந்தது. நீழும் காலவோட்டத்தில் நீண்டு செல்லும் வாழ்வின் நீளமும் மாற்றங்களோடு அவளும் பயணித்துக் கொண்டிருந்தாள்.
936162_463399217061909_976756942_n_zps79
000                000                  000
நிரந்தர சமாதானம் வந்துவிட்டதாக நம்பிய 2003இல்; நடைமுறையில் இருந்த யுத்த நிறுத்தத்தில் பிறந்தமண்ணை தனது உதிரத்தில் விளைந்த தனது குழந்தைகளுக்குக் காட்டுவதற்காகச் சென்றிருக்கிறாள். அவள் பிறந்து அளைந்து அள்ளித்தின்று விளையாடி மகிழ்ந்த நிலம் மிதிவெடிகள் கவனம் என எச்சரிக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகைகளைத் தாங்கியபடியிருந்தது.

சூனியத்தெருவில் நிற்பது போல அவள் தனது பிறந்த வீட்டின் காணிக்குள் போக முடியாதென்ற எச்சரிக்கைப் பலகையின் ஓரத்தில் நின்றாள்.

அதுதான் அம்மா பிறந்த வீடு எனப் பிள்ளைகளுக்குச் சொன்னாள். அம்மா நீங்க காட்டிலயோ பிறந்த நீங்கள் ? 5வயது மகள் கேட்டாள். ஏனம்மா ? காடாக்கிடக்கு ஒரு வீட்டையும் காணேல்ல ? சொன்ன மகளுக்குச் சொன்னாள்.

அம்மா பிறந்து வளர்ந்து உங்களைப் போல வயசில திரிஞ்ச இடம் ஆமிக்காறங்கள் வந்து அழிச்சிட்டாங்கள் அதாலை காடாகீட்டுது செல்லம்.....!  அந்தப் பிஞ்சுக்குழந்தைகளுக்கு அவள் சொன்ன விளக்கங்கள் திருப்தியைக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்கள்.

இனிக்காணும் உதுக்கங்காலை போனா ஆமிக்காறன் வந்திடுவன்....அம்மா அத்தோடு திரும்பச் சொன்னா. அடுத்து 50மீற்றர் போனால் இன்னும் அவள் வாழ்வில் மறக்காத தடயங்களைச் சுமக்கும் வயிரவ கோவில் சிவகாமியம்மன் கோவில்களின் சிதைவுகளைக் காணலாம். ஆனால் அதற்குமேல் போக முடியாதபடி எச்சரிக்கைப்பலகை தடுத்து நிறுத்தியது.

ஆயிரம் வருடங்கள் போனாலென்ன ஐயாயிரம் வருடங்கள் போனாலென்ன கடந்த காலங்களை  மீளப்பெறத்துடிக்கும் மலரும் நினைவுகளாக மனசை அலைக்கழிக்கும் நினைவாக எந்த மனித மனத்தாலும் மறுத்து வாழ முடியாதென்பதற்கு அவளே உதாரணமாகினாள்.

பிறந்த வீட்டின் வீதிவரையும் சென்று திரும்பிக் கொண்டிருந்தது கால்கள் அவள் மனசு மட்டும் அந்தத் தெருவில் படர்ந்து கிடந்த முட்செடிகளின் கீழும் மிதிவெடிகளின் கீழும் போய்த் தொலைந்தது.

திரும்பும் போது இலுப்படி வேரைப்பார்த்தாள். அங்கே அவள் வாழ்வில் முதல் பாதிப்பைத் தந்த அண்ணாவென்ற அற்புதம் உயிர்த்துக் கொண்டிருந்தான். அவள் சொல்லை மதித்த அவளுக்கு ஒருகாலத்தின் கைவிளக்காக இருந்த அந்த உயிர் காலம் முழுவதும் விடிவிளக்காக வந்து கொண்டிருந்தது.
waiting.jpg
காலம் எவ்வளவுதான் தன்னைப் புதிது புதிதாய் பிறப்பித்துக் கொண்டாலும் காலநகர்வில் கைபற்றி வந்து மனசின் அடியில் புதைந்து கிடக்கும் நினைவுகள் ஒவ்வொரு மனித மனத்தையும் ஆயுள் முழுவதும் அலைத்துக் கொண்டிருக்கும் என்பதனை அனுபவிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு காலடியின் கீழும் ஆயிரக்கணக்காக கோடிக்கணக்காக் நினைவுகளால் சுற்றிப் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

பழைய நினைவுகளை அழித்துப் புதிய காலத்தை மட்டுமே ஞாபகம் கொடுக்கும் பழசையெல்லாம் அழிக்கும் ஒரு அழிகருவி இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்....? என்ற ஆசை அவளையும் விடவில்லை.

போன உயிரையே திரும்ப உயிர்ப்பிக்கும் வசதிகளை விஞ்ஞானம் கொண்டிருக்கும் இக்காலம். நொடிக்குநொடி புதிய புதிய கண்டுபிடிப்புகள் சாதனங்கள் வெளியீடு நிறைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் மனித மனங்களைத் தின்று தொலைக்கும் நினைவுகளை அழிக்க.... ஒரு அழிறப்பர் கண்டு பிடியுங்கடா விஞ்ஞானியளே உங்களுக்கு காலம் முழுக்க நன்றியுடனிருப்பேன் எனச் சொல்லிக் கொள்கிறாள்.



இத்தோடு இத்தொடர் நிறைவடைகிறது.