Sunday, May 26, 2013

மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....!

எதிர்பாராத நிகழ்வுகளாய்
வந்தடைகிற நட்புகளும் உறவுகளும்
உன்னவர்களாகவே
வருகிறார்கள்....!

நீண்ட வருடங்களைக் கரைத்திருக்கிற
காலக்கதவுகளை உடைத்தபடி
கனவுகளோடு இலட்சியம் சுமந்து
உன் தோழர்கள் மீண்டும் வருகிறார்கள்....!

உன்பற்றியும் உனது வீரமரணம் பற்றியும்
நேரமெடுத்துப் பேசுகிறார்கள்
நினைவழியா உன் வாழ்வை
நேசிக்கிறவர்களாய்....!

நினைவிலிருந்து
கழற்றியெறியப்பட்ட தடங்களை
மீளவும் புதுப்பித்துச் செல்கிறார்கள்
மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....!

வரலாறுகள் என்றுமே
வெற்றிடமாய் ஆவதில்லை
நீ வழிகாட்டிய பாதைவழி
அவை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

அன்பின் சின்னமாக.....!
காலம் உனக்காய் மீண்டும்
வாழச்சொல்கிற வரத்தைத்
தந்துவிட்டுச் செல்கிறது.

மாவீரம் மண்ணுக்கேயான வீ(ஈ)ரம்
அது உனக்கான நன்றியாக
மறக்காது உன் கனவு அதற்காய்
மரிக்கும் வரையும் தொடர்வேன் உந்தன் பணி.

10.05.2013