Sunday, October 13, 2013

போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ?

கடற்காற்றின் மௌனம்
உனது காலத்தை
எழுதிச்சென்ற தடங்கள்
கனவின் மீதத்தை
இந்தக் கரைகளில்
வந்தலையும் அலைகள்
வந்து சொல்லியலைகிறது....!

கால்புதையும் மணற்தரையில் 
உனது மௌனங்கள்
நீ கரைந்த காற்றோடு
வந்தலையும்
வார்த்தைகளின் அர்த்தங்கள்
ஒரு வரலாற்றின் சாட்சியாய்...!


வழி நீளக்கிடக்கிற
நினைவுத் துளிகளில் நீயும் நானும்
எழுதத் துடித்த வாழ்வு
ஈழக்கனவாய் ஆனபோது
இடைவெளியின் நீளம்
காலக்கரைவில் கண்ணீராய்....!

நீ(மீ)ழும் நினைவுகளில்
நிலையாய் காலம் கரையும்
இந்தக் கடற்காற்று
போய் வாவென்கிறது
போய்வரவா 
பிரியத்துக்கினிய தோழமையே  ?

மறுபிறவி உண்டென்றால்
மறுபடியும் இதே கரைகள் தொடும்
அலைகளோடு அலையாவோம்
ஆழக்கால் புதைத்து
அந்தப் பழைய முகங்களோடு
இ(பி)ன்னொரு முறை பிறப்போம்.

23.05.2003(முல்லைக்கடற்கரையில் ஒருநாள் நினைவோடு)

(எனது படைப்புகளை பிரதி பண்ணி போடுகிறவர்கள் முல்லைமண் வலைப்பூவிற்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு பிரிதியெடுத்துக் கொள்ளுங்கள்)

No comments: