Tuesday, November 5, 2013

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

காலம் 2003 ஆடி...,

இரவு கரையும் ஈரத்தில்
நந்திக்கடல் ஆழத்தில்
நிலவு கரையும் நாளொன்றில்
அர்த்த இரவொன்று....!

அமைதியாய் ஓடியலைந்த
அலையில் முகம் நனைத்த
அன்றைப் பொழுதின் இனிமை
இதய அறைகளில்...!

காலம் 2009 மேமாதம்....,

காலழைந்த அந்தக்
கன இருளின் திரையூடே
களமாடியகதை சொன்ன தோழியின்
காலடிகள் மீளத் தேடியது நினைவு....!

ஆழத்தொலைந்த அலைகளோடு
என் ஆத்மா நிறைந்த
ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்
ஞாபகம் கண்ணீராய்....!

மீளத்தொலைந்து போனது
கடைசிக் கதைகளும்
காலம் மறைத்த துயர்களும்
பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....!


பிரியம் நிறைந்த தோழி
இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர்
படமாய் ஒருநாள்
பலநாள் இரவைத் தின்றது.

பாவத்தின் கையிலிருந்து வழிந்த இரத்தம்
அவள் ப(நி)லத்திலிருந்து எழுந்த
ஓலத்தின் சாட்சியாய்
அவள் நிர்வாணம்....!

பாவங்களைக் கழுவ முடியாத
பொறுப்பிலிருந்து மீள முடியாக் கண்ணீர்
இரவுகளில் அவளே கனவுகளாய்
கண்ணகித் தெய்வத்தின் கடைசிப் பிறவியாய்....!

காலம் 2013...,

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்
மொத்த உருவாய் மீள மீள வந்து
முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ
இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கருணையை வேண்டிய கண்களால்
அவள் கடைசிக் குரல்
கடற்கரையோரச் சேற்றோடு கரைகிறது
ஒரு கனவு போல் எங்கள் தோழியின்
கடைசிக் கணங்கள்.....!

பழிதீர்க்கும் பகைமை மட்டுமே
மனிதமற்ற மிருகங்கள் மீது
கோபமாய் நெஞ்சு மூட்டும் நெருப்பாய்
இந்த இரவையும் தின்கிறது....!

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'
அந்தச் சொல்லின் வலிமையே
சத்தமின்றி நிரம்புகிறது
இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

01.11.2013 (நள்ளிரவு 1.40)
(இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒளிநாடாவை சனல்4 வெளியிட்ட நாளில் இப்பகிர்வு பதிவு செய்யப்படுகிறது)


(கண்ணகி தெய்வமென இசைப்பிரியாவை ஒப்பிட்டதற்கான காரணம் :- வற்றாப்பளை அம்மன் கோவிலும் நந்திக்கடற்கரையும் வரலாற்றில் பல வீரக்கதைகளைக் கொண்டது. வற்றாப்பளை அம்மனை போராளிகள் கூட நம்பிய கடவுள். அந்தக் கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அநியாயமாக அழிக்கப்பட்டாள். அதற்காகவே கண்ணகை தெய்வத்தின் கடைசிப் பிறவியென குறிப்பிட்டுள்ளேன்.

கற்பு நெறி சார்ந்த அடையாளமான கருத்தில் இல்லை. மற்றும் கண்ணகி என்ற ஒரு பாத்திரத்தின் வடிவமாக இங்கு இசைப்பிரியாவை குறிப்பிடவில்லை.

வற்றாப்பளை திருவிழா காலத்தில் பல போராளி குடும்பங்களின் வீடுகளில் கூட விரதம் மரக்கிற சமையலே இருக்கும். அந்தளவு அவர்களும் கண்ணகையம்மனை மதித்தார்கள்.  நந்திக்கடல் நீரில் விளக்கெரியும் மகிமை மிக்கதாய் சொல்லப்படும் கண்ணகை கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அவலமாய் சிதைக்கப்பட்டாள். வெறும் புராணக்கதையின் கண்ணகியோடு இசைப்பிரியாவை தராசிட்டு நிறுத்துப் பார்க்க வேண்டாம்)

No comments: