Tuesday, February 11, 2014

இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....?

11.02.2009 அன்று எறிகணைவீச்சில் உயிரிழந்தார். இன்று 5ம் ஆண்டு நினைவுநாள்.

5ஆண்டு நினைவு நாளின்று எங்கள் உயிரறுந்த பொழுதின் நினைவும் இன்று....!  உனது மகள் இன்று உன்னைப்போலவே உலகை வெல்லும் சக்தியாய் வளர்கிறாள்.


(11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை)



பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப்
பதுங்குளி வாசலிலும் 
பாதையோரச் சகதியிலும் 
உழன்ற பொழுதுகளில் 
உனக்கும் சாவுவரும் 
என்றெண்ணியிருப்பாயா ?

நம்பிக்கையறுந்த வாழ்வு
நாளையுனக்கு இல்லையென்று
எப்போதாவது எண்ணியிருந்தாயா ?
எங்களைப்போல உனது மகளும் 
மனைவியும் அம்மாவும் அக்காவும்
மருமக்களும் பற்றித்தானே
மனசுக்குள் அழுதிருப்பாய் ?

சாவரும் நாளின் முன்னிரவு
உனக்குச் சாவு நாளையென்று
சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ?
போரின் கொடிய வாய்க்குள்
போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ?

பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் 
உன்மேல் வீழும்வரை உனக்கு எந்த
விபரீதமும் தெரிந்திருக்காது அல்லவா ?

ஒருவயது மகளும் 
உன்னையே நம்பிய அம்மாவும்
உன் அன்பினியவளும்
மட்டும்தானே - உன்
மனதில் நின்றிருப்பர். 

செத்து நீ கிடந்த தெருவில்
உனைப்பார்க்கவே முடியாமல்
யாவரும் தாண்டியோடினராம்....
பின் வந்து பார்த்த போது 
குருதிச் சேற்றில் நீ
முடிந்து மணிகள் ஆகியிருந்ததாம் ?

சுண்ணமிடிக்கச் சுடுகாடு கொண்டு செல்ல
உறவு கூடி ஒப்பாரி வைத்துன்
இழப்பின் வலி குறைக்க
அவகாசமில்லாமல் ஐயனே
அருகில் மண்கிண்டி
அப்படியே புதைத்துவிட்டு
உறவெல்லாம் திசைக்கொன்றாய்
சிதறியதாம்....

ஐயனே !
அந்தக்கணங்கள் 
நேரில் நின்றது போல்
நெஞ்சு வலிக்கிறது.

34வயதில் போர் உன் வாழ்வு தின்று
போய்விட்டாய் கோபி.
இங்கு நம் வீடுகளில் 
உன் நினைவுகளில்
அழுகையும் ஆற்றுதலில்லாத்
துயரமுமாய்....
மிஞ்சியிருப்போரையும்
இழப்போமா இல்லை
உயிருடன் பார்ப்போமா ?

15.02.09 
mail - rameshsanthi@gmail.com

No comments: