Friday, April 4, 2014

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!

அந்த நாட்கள்
தீயின் நாக்குகளால்
தின்னப்பட்ட தீராத்துயர்
எங்கள் வீரத்தின்
விலாசங்களை
வெ(கொ)ன்ற நாட்கள்.


வெற்றிகள் தந்தெங்கள்
விடுதலைச் சுவடுகளில்
வீரம் எழுதிய
மகனாரும் , மகளாளும்
இறுதிச் சமர் புரிந்து
எரிந்து கரைந்த
5ம் ஆண்டு நினைவில்
ஆனந்தபுரம் அழியாத நினைவாக....!

பூக்களின் வாசனை கலந்த
பொன்னிதழ் விரியும்
புன்னகை முகங்கள்
பொசுங்கிக் கிடந்த நாளை
வசந்த கால மலர்வாசம் தரும்
ஏப்றல் மாதம் என்றென்றும்
எங்களில் எரியும் தீயாய்...!

இழப்பின் கதைசொல்லும்
என்றைக்கும் இதயம் நிரம்பிய
துயர் தருமாதம் நஞ்சு கலந்து
எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட
நிலத்தின் கதைசொல்லும்
நீங்காத் துயர் மாதம்.

04.04.2014 (2009 முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நாள். உலகம் திரண்டு அழித்த ஈழவிடுதலைப்போரில் அன்று உலகின் கண்முன்னால் எங்கள் தளபதிகளும் போராளிகளும் எதிரிக்கு அதிகளவு இழப்பை ஏற்படுத்தி இறுதிவரை சமரிட்டு தங்கள் உயிர்களைத் தந்து போனவர்கள்)

Email - rameshsanthi@gmail.com

No comments: